Wednesday, October 22, 2008

3rd year - 6

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4, பாகம் 5

ரூம் நம்பர்: 113

இது தான் கவிதா, அனு, இளமதி, இவர்கள் மூவரின் அறை.

 

வீடு ஒரளவிற்க்கு அருகிலேயே இருப்பதாலும், சின்னதிலிருந்தே ஹாஸ்ட்டல் வாசத்தாலும், வாரம் தவறாமல், சனி ஞாயிறு ஊருக்கும் போகாவிட்டால் கவிதாவுக்கு பைத்தியமே பிடித்து விடும்.அனு வேறு புதிதாக ஹாஸ்டலில் சேர்ந்திருப்பதால், கவிதா அனுவையும் அவள் வீட்டிற்க்கு அழைத்துப் பார்த்தாள். ஆனால், அவள் வீட்டிற்க்கு சென்றால், தன் அப்பா, அம்மாவின் ஞாபகம் அதிகமாக வந்து விடுமென்ற பயம் அனுவிற்க்கு… விடாப்பிடியா அனு வர மறுக்கவும், அனுவுக்காக கவிதா ஒரு வாரம் ஊருக்கு போகாமால் இருந்தாள். அவளும் என்ன தான் செய்வாள் பாவம்? அடுத்த வாரமே, மறுபடியும், அனுவ அழைத்துப் பாத்த்து விட்டு, ஊருக்கு கிளம்பிட்டாள்.

 

கவிதா இப்படின்னா, இளமதி, அந்த செம்ல தான் CAT க்ளாஸ் போக ஆரம்பித்திருந்தாள். வார நாட்கள்ல எதுவும் தெரியாவிட்டாலும், வார இறுதியில், அனுவை தனிமை வாட்டி எடுத்தது.இளமதி மாதிரி என்னேரமும் எதோ ஒரு புத்தகம் படிப்பதில் அவளுக்கு ஈடுபாடும் இல்லை, கவிதா மாதிரி ஊருக்கு செல்வதற்கும் வழியில்லை.அப்படி, தனிமையில் தோய்ந்த ஒரு சனிகிழமை மதியம் தான் காலேஜ் லைப்ரரியில் பாலாவை சந்தித்தாள் அனு. ஏனோ, அன்று அவனை பார்த்ததும், அவள் உதட்டில் மெலிதாக ஒரு புன்னகை.

 

பாலா ஒரு நொடி தயங்கி விட்டு, பின்பு அனுவிடம் வந்து, “அனு…உன் பாட்டி போய்டாங்கன்னு….i m sorry அனு”

 

அனு அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல், விரக்தியான ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக அளித்தாள்.அவளிடம் இருந்து எந்த பதிலும் எதிர்பார்க்காதவன் போல, பாலாவே தொடர்ந்தான், “ரொம்ப நல்லவங்க அனு…உனக்கு தெரியுமா? நீ என்ன அன்னிக்கு அடிச்சப்ப உன் பாட்டி என்கிட்ட வந்து பேசினாங்க…”

 

அனு முகத்தில் ஆச்சர்ய ரேகைகள், “என்னது? உன்கிட்ட வந்து பேசினாங்களா?”

 

“ஆமா அனு…என் பேத்தி கோபத்துல அவசரப் பட்டுடா…அவ மேல உனக்கு ஏதாவது கோபம் இருந்தாலும், எனக்காக அதை எல்லாம் மறந்துடு…அப்படீன்னாங்க…”

 

“ஹ்ம்ம்….”

 

“நான் அதையெல்லாம் எப்பயோ மறந்துடேன் அனு, எதையும் நான் ப்ளான் பண்ணி செய்யல, அப்ப நடந்த விஷயம் எல்லாம், அப்படி இருந்துச்சு…அவ்ளோ தான்…”

 

அனு எதுவுமே சொல்லாமல் இருக்கவும், பாலா, “சரி…உனக்கு என்கிட்ட மறுபடியும் பேசறதுக்கு இஷ்டமில்லைன்னு நினைக்குறேன்…அப்ப நான் வரேன்…”

 

“ஹே…இல்ல பாலா, அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல…”

 

“ஹ்ம்ம்…குட்…நம்ம அபார்ட்மென்ட்ல independence day function நடந்துச்சே…ஞாபகம் இருக்கா? உன்கிட்ட இத சொல்ல தான் முக்கியமா இப்ப வந்து பேசினேன்…”

 

“ஹ்ம்ம்ம்…அதுக்கென்ன?”

 

“அதுல உன் பாட்டி, பாடினாங்களே…அந்த வீடியோ, என்கிட்ட இருக்கு…”

 

வாடி வதங்கி போயிருந்த பூ ஒன்று, திடீர் என்று புத்தம் புதிதாய் மலர்ந்தது போல ஆனது அனுவின் முகம், “ஹே….நிஜமாவா சொல்ற???”

 

“ஆமா…அனு…என்கிட்ட இருக்கு…”

 

“இப்பயே பாக்கலாமா?”

 

“எங்க வீட்ல இருக்கே…வீட்ல டி.வீ.டி player வேற repair…”

 

“அதனால என்ன? எங்க flat சாவி தான் என்கிட்ட இருக்கே…நான் கூட ரொம்ப நாளா அந்த வீட்டுக்கு போகனும், போகனும்ன்னு நினச்சுட்டு இருந்தேன்…நாம இப்பயே போலாமா? உனக்கு வேற எதாவது வேலை இருக்கா இப்போ?”

 

“இத விட, எனக்கு வேற என்ன பெரிய வேலை? இப்பயே போகலாம்…”

 

ஃப்ளாட்டில் இருந்து நேரம் கழித்து திரும்பிய அனுவை பார்வையாலே அளந்தவாறு இளமதி, “அனு! எங்க போய்ட்டு வர?” என்று கேட்க, சாதாரணமாக அவள் கேட்டது கூட, அனுவுக்குள் ஏதோ செய்தது.

’அன்னிக்கு வண்டில கூட்டிட்டு வந்ததுக்கே என்னென்னவோ சொன்னா…இப்ப என்ன சொல்லுவாளோ’ என்ற பயமா, இல்லை தான் செய்தது தவறு என்ற எண்ணமா, எதோ ஒன்று அவளை தடுத்தது.

“நான்…வந்து…லைப்ரரிக்கு தான் போய்ட்டு வரேன்…” முதன் முறையாக தோழியிடம் பொய் சொன்னாள் அனு. அந்த பொய்யே அவர்கள் பிரிவுக்கு அடித்தளமாக இருந்தது.

 

வார இறுதி கொடுத்த தனிமை, அனுவின் புலம்பல்களையும், அவளுடைய பழைய நினைவுகளையும் காது குடுத்து கேட்பதற்துக்கு ஒரு நல்ல நண்பனாய் ஆரம்பத்தில் அவளோடு பழக ஆரம்பித்த பாலா, ஒன்றிரெண்டு மாதத்திலேயே அவள் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறி, வெகு விரைவில் அவள் மனதில் காதல் துளிர்ப்பதற்கும் காரணமாக இருந்தான். பாலாவே ப்ரோப்ஸ் செய்வதற்காக காத்திருந்து, அதை அனுவும் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்ட நாளும் வந்தது.

 

இந்த விஷயம் கவிதா, இளமதிக்கு தெரிந்த போது தான் பிரச்சனையே ஆரம்பமானது. அவர்கள் பார்வையில் அனுவின் இந்த காரியம் தவறு என்றே பட்டது. ’நண்பர்கள் இழைப்பது பிழை என்று பட்டால், அதை சுட்டி காட்ட துணிவில்லை என்றால், அவர்கள் உண்மையான நண்பர்களே இல்லை’ கவிதாவும், இளமதியும் அனுவிடம் இது தவறு என்று நேரடியாகவே சொல்லி பார்த்தார்கள், ஆனால் அனு தான் அதையெல்லாம் ஏற்கும் மனநிலையில் இல்லை. ’பாலாவோட பழகாதேன்னு’ அவர்கள் இருவரும், கண்மூடித்தனமாய் எதிர்த்து, எவ்வளளோ எடுத்துச் சொல்லியும் அனு காது குடுத்து கேட்பதாய் இல்லை.

எப்படியோ ஒழிந்து போகட்டும் என்று நினைக்கவும் முடியவில்லை, அதே நேரத்தில் சொல்லி புரியவைக்கும் முடியாமல், செய்வதறியாது இருவருமே குழம்பி தவித்தனர்.

ஒரு நாள் ஹாஸ்டல் ரூமில் கவிதாயும், இளமதியும்…

 

கவிதா, “பேசாம அங்கிளுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுவோமா?”

 

இளமதி, “என்ன கவிதா பேசுற? அவ்ளோ தூரத்துல இருக்கறவங்கள இப்படி எல்லாம் சொல்லி பயமுறுத்த சொல்றியா?”

 

“அப்புறம் வேற என்ன தான் பண்றது?”

 

இளமதி, “இரு…கொஞ்ச நாள் பொறுத்து பாப்போம்…எப்படியும், இந்த வருஷத்தோட பாலாவுக்கு காலேஜ விட்டு போய்டுவான்…”

 

இளமதி அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்கவும், கவிதா ஆவேசமாகி, “ஆமா இளம்ஸ்…நீ சொல்றதும் சரி தான்…இன்னும் மூணு மாசம் தான்…அவன் காலேஜ விட்டு மட்டும் இல்ல, அனு வாழ்கைய விட்டும் போய்டுவான்…எப்படியோ, அந்த கழிசடை ஒழிஞ்சா சரி தான்…”

 

இவர்கள் இருவரும் மும்பரமாக பேசிக் கொண்டு இருந்ததில், ரூம் வாசலில் நின்று கொண்டிருந்த அனுவை பார்க்கவே இல்லை.

 

“கவிதாஆஅ!!! how dare u? அவன் என்ன விட்டுட்டு போகனும்ங்கறது தான் உன்னோட ஆசையா…” வெடித்து அழும் நிலைக்கு சற்று முந்தைய நிலை போல் இருந்தது அவள் முகம்….

 

அனுவை அங்கே கொஞ்சம் கூட எதிர் பார்க்காத இளமதியும், கவிதாவும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை.

 

கவிதா, “அனு…புரிஞ்சுக்கோ அனு…அவன் உன்ன ஏமாத்துறான்…”

 

“ஒரு வார்த்தை…இன்னும் ஒரு வார்த்தை பேசின…அப்புறம் நடக்கறதே வேற…”

 

கவிதா, “என்ன பண்ணுவ? சொல்லு…என்னடி பண்ணுவ? ஒன்னா சுய புத்தி வேணும், இல்ல சொல் புத்தியாவது வேணும்….ரெண்டுமே இல்ல உனக்கு, தருதலைன்னு தெரிஞ்சே அவனோட சேந்து சுத்திட்டு இருக்கியே…I m ashamed of you…”

 

அனு, “who are you? Who the hell are you? இது என் லைஃப், எனக்கு தெரியும், யாரும் எனக்காக மெனக்கெட தேவையில்லை…”

 

எதோ பேச வந்த கவிதாவ இடைமறிச்சு இளமதி, “போதும் கவி…வேண்டாம்…கோபத்துல விழற வார்த்தைகளுக்கு பதிலுக்கு பதில் பேசினா பிரச்சனை தான் வரும்…மூணு வருஷமா, அழகா செதுக்கி வச்சிருக்கற நம்ம நட்ப, நாமளே வார்த்தைகளால துண்டு துண்டா உடைக்க வேண்டாம்…”

 

அனு, “ஓ, இப்ப கூட தத்துவம் பேசறயோ? இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க...எப்ப என் காதல் உடைஞ்சு போகனும்ன்னு நீங்க நினைச்சீங்களோ, அப்பயே உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல….நம்ம so called நட்பு, உடைஞ்சு மட்டும் இல்ல, மண்ணோட மண்ணா போய்டுச்சு”

 

ரூம் நம்பர் 113 யில் இருந்து, ரூம் நம்பர் 306 என்ற தனி அறைக்கு ஒரே வாரத்தில் மாற்றிக் கொண்டு சென்றாள் அனு. இதில் அதிகம் பாதிக்கப் பட்டது அனு கூட இல்லை, கவிதா தான்! அது வரை அவளுக்கு கிடைத்த எத்தனையோ தோழிகளில், அனுவை மட்டும் அவள் அளவுக்கு அதிகாம நேசித்தது தான் அதற்கு காரணம்! அனு ஏற்படுத்திச் சென்ற ரணம், நீண்ட நாட்களுக்கு ஆறாமல் அவளுள் தீயாய் கொதித்துக் கொண்டிருந்தது. அனுவை பார்க்கும் போதும், அவளை பற்றி பேசும் போதும், ஏன் நினைக்கும் போது கூட, அவளே ஒரு தீப்பிழம்பாய் உருமாறி அனுவை பார்வையாலேயே சுட்டெரித்தாள்.

----

ஆறாவது செமஸ்டர் தேர்வும் நெருங்கி வந்தது. எப்போதும் போல் இல்லாவிட்டாலும் அனு ஒரளவிற்க்கு நன்றாகத் தான் தயார் செய்திருந்தாள்.கடைசி பரிட்சைக்கு முந்தய தினம் தான், பாலாவுக்கு வேலை கிடைத்தது. அவனுக்கு வேலை கிடைத்ததில், அவனை விட அனுவுக்கு தான் நிரம்ப சந்தோஷம்.

 

“ஹப்பா…பாலா! இப்ப தான் எனக்கு ஒரு தைரியமே வந்துச்சு…எப்படிடா, எங்கப்பா கிட்ட சொல்ல போறேன்னு நினைச்சுட்டு இருந்தேன்…நீ வேற ப்ளேஸ் ஆகலையா…ஆனா இனி பிரச்சனையே இல்ல….எக்ஸாம் முடிஞ்ச உடனே சொல்லிட போறேன்…”

 

“என்ன அனு சொல்ற? உங்கப்பா கிட்ட என்ன சொல்ல போற?”

 

“நம்ம விஷயத்த பத்தி தான் பாலா…”

 

“நம்ம விஷயம்ன்னா, என்ன அனு? தெளிவா சொல்லு…”

 

“நம்ம லவ் பண்றது, கல்யாணம் பண்ணிக்க ஆசைபடறது…இதப்பத்தி தான்…”

 

சொல்ல கூடாத வார்த்தைய அனு சொல்லிவிட்டது போல் ஒரு ரியேக்ஷனோடு பாலா, “என்னது??? கல்யாணமா? என்ன அனு சொல்ற? நான் எப்ப உன்ன கல்யாணம் பண்ணிகறேன்னு சொன்னேன்?”

 

“பாலா…விளையாடாத…”

 

“நீ தான் அனு விளையாடுற…let me make myself clear…I am not ready for any sort of commitment now…”

 

“அப்டீன்னா… அப்டீன்னா…நீ…நீ…என்ன லவ் பண்ணலையா?”

 

“இப்ப கூட சொல்றேன்….நான் உன்ன லவ் பண்றேன்…உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்….ஆனா, அதுக்காக உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு அவசியம் இல்லையே…”

 

“கல்யாணம் பண்ணிக்குற ஐடியா இல்லனா, இத்தன நாளா சும்மா என்கூட ஊர் சுத்தினியா? சொல்லு…பாலா! சொல்லு…”

 

அனு உடைந்து அழுகவும், “Just stop it அனு…don’t behave like a kid…பெரிய இவ மாதிரி பேசுற? யு.யெஸ்ல நீ போகாத டேட்டிங்கா? உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு நான் இது வரைக்கும் நினைச்சது இல்ல…but…hey…don’t worry…may be, I’ll consider you when I think of a serious relationship…but definitely not now…”

 

கடைசி பரிட்சை…

 

ஏற்கனவே குழம்பிப் போயிருந்த அனு, முதல் நாள் இரவு முழுதும், படிப்பதற்காக என்று முழித்திருந்து, ஆனால் படிக்காமல் பாலா சொன்னதெல்லாம் நினைத்து நினைத்து மனதிற்குள் மறுகிக் கொண்டிருந்தாள்.

 

கடைசி நேரத்தில் ஏதோ புரட்டி விட்டு, ஒன்பது மணி பரிட்சைக்கு ஒன்பது ஐந்துக்கு பரபரவென்று ஹாலில் நுழைந்த அனுவை பார்த்து, இளமதியால் ஒரு பெருமூச்சு மட்டும் தான் விட முடிந்தது.

 

வினாத்தாளில் தெரிந்த கேள்விகளுக்கெல்லாம் ஏதோ சுமாராக பதில் எழுதிக் கொண்டிருந்தவளின் காதில், டங், டங் என்ற ஒலி ஒலிக்க, அந்த அறையின் கடிகாரத்தை பார்த்தாள். மணி பத்து…”ஐயோ, பன்னென்டு மணிக்குள்ள வீட்டுக்கு போகனுமே…போனா பாட்டியை ஹாஸ்பிட்டல்ல சேத்தி காப்பாதிடலாம்’ என்ற விசித்திரமானதொரு எண்ணம் குழம்பிப் போயிருந்த அவள் மனதில் உதிக்க,

’அனு, எங்க போற? எக்ஸாம் எழுதி முடிச்சுட்டு போ’ என்ற ராமமூர்த்தி ஸாரின் கத்தல்கள் எதுவும் காதில் விழாமலே அந்த அறையை விட்டு வெளியே ஓடினாள் அனு!!!

 

அதன் பிறகு, ஒரு வாரம் அறையை விட்டு, எப்போதாவது சாப்பிடுவதற்கு மட்டும் வெளியே வந்த அனுவை பார்த்து, அவள் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச கோபம் கூட பறந்து விட்டது இளமதிக்கு. பரிட்சை முடிந்ததும் கவிதா ஊருக்கு போனது வேறு வசதியாய் இருக்கவே, மெல்ல மெல்ல அனுவிடம் பேசி அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்று கொண்டு தான் இருந்தாள் இளமதி.

 

பாலா பற்றின செய்தியும் அப்போது அவளுக்கு அப்போது தெரியாததால், ’சரி, கொஞ்சம் நாள் பொறுத்துத் தான் பார்ப்போம்…அவளுக்கு தனிமை பிடித்திருந்தால், சில நாள் அப்படியே இருக்கட்டும’ என்று இளமதி நினைத்தது எவ்வளவு தவறென்று அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. இளமதியை பொறுத்த வரை, ’என்ன தான் தோழியாக இருந்தாலும், ஒருவருகென்று இருக்கும் ’space’ ஐ மதிக்க வேண்டும், அவர்களாக சொல்ல வேண்டும் என்று நினைத்தால் சொல்வார்கள், அது வரை அவர்களை ’என்ன’, ’ஏது’ என்று கேட்டு தொன தொனகக் கூடாது’.

 

இதுவே கவிதா அங்கு இருந்திருந்தால், அனுவின் இந்த நிலையை பார்த்து, அவளை தோண்டி துருவி, ஏதாவது செய்து அவளை பழைய படி மாற்றி இருப்பாள்…முடிந்தவரை இவ்வளவு பெரிய முடிவு எடுக்கும் அளவிற்காவது செல்லாமல் பார்த்திருப்பாள் என்று பிற்பாடு தான் இளமதிக்கு தோன்றியது.

 

-----

“டங் டங் டங்”  கடிகாரம் மூன்று முறை ஒலி எழுப்பியது. இன்னும் இரண்டு மணி நேரம் தான் இருக்குறது, ‘இப்படி அழுது அழுதே நேரத்தை கடத்திட்டனே, ச்சே’ என்று அனு தனக்குத் தானே நொந்து கொண்டாள்.

 

“ஃபெயில் ஆய்டேன் சொல்லி அப்பா முகத்துல எப்படி முழிப்பேன்? பாலா இப்படி

பண்ணிடான்னு சொல்லி, கவிதா, இளமதி முகத்துல எப்படி முழிப்பேன்? இப்பயே காலேஜ்ல எல்லாரும் ஒரு மாதிரியா பாக்க ஆரம்பிச்சுடாங்க, இனி ஒரு வருஷம் எப்படி காலேஜுக்கு போவேன்? சொல்லு…பேசாம நான் உன்கிட்டயே வந்தர்றேன் பாட்டி” பாட்டியின் படத்திற்கு முன்னால் நின்று கொண்டு தனியாக பேசிக் கொண்டிருந்தாள் அனு.

 

இதற்கு முன் பிரச்சனை என்று எதையும் சந்திததில்லை. அவளுக்கு நினைவு தெரிந்தது முதல், அம்மா திட்டினார், அப்பா அடித்தார் என்று கூட ஞாபகம் இல்லை. எப்போதுமே, நல்ல நண்பர்கள், நல்ல படிப்பு, எல்லாவற்றிக்கும் மேலாக, எப்போதும் உடனிருந்த பாட்டி. இப்படி பொத்தி பொத்தி அவளை வளர்த்த விதமே, இன்று அவளுக்கு எமனாக வந்து நின்றது.

 

சிறு தோல்வி, பிரச்சனைக்கு கூட, மனம் வெதும்பி, உணர்ச்சி பிளம்பாய் மாறி, இன்னும் வாழ வேண்டிய எத்தனையோ காலங்களை மறந்து, காலனை வரவேற்க துணிந்து நின்றாள்.

 

எதையோ தேட ஆரம்பித்த அவள் கண்கள், பாட்டி படத்திற்கு கீழ் இருந்த அந்த கத்தியில் நிலைத்து நின்றது.

காலத்தின் சுவடுகளை தாங்கிக் கொண்டிருந்த ஒரு 1988 ஆம் ஆண்டு டைரி தான், அந்த கத்தியையும் தாங்கி கொண்டிருந்தது.

 

[அடுத்த பகுதியில் முடியும்]

Monday, October 20, 2008

3rd year - 5

பாகம் 1பாகம் 2பாகம் 3, பாகம் 4

“பாட்டி! பாட்டி! கதவ திற…”

 

கடைசி பரிட்சையை அரை மணி நேரம் முன்னதாகவே முடித்து விட்டு, லீவ் விட்ட சந்தோஷத்தில் வீட்டுக்கு வேகமாய் வந்த அனு, பாட்டி அதிக நேரம் கதவைத் திறக்காமல் இருக்கவும், வெளியே நின்று பெல் அடித்துக் கொண்டு, கத்திக் கொண்டிருந்தாள்.

 

உள்ளே இருந்து வந்து கதவை திறந்த பாட்டிய பார்த்ததும், லீவ் சந்தோஷம் எல்லாம் பறந்து போனது அனுவுக்கு.

 

நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு, நிரம்பிய வேதனையான முகத்துடன் வந்த பாட்டிய பார்த்ததும் ஒரு நிமிடம் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

 

“பாட்டி…என்ன ஆச்சு பாட்டி…”

 

“அனு….அனு….” பாட்டியால் அதுக்கு மேல பேச முடியல.

மெதுவாய் பாட்டியை நடத்திக் கொண்டு போய் சோஃபால உக்கார வைத்துவிட்டு டாக்டருக்கு ஃபோன் பண்ண போன அனுவிற்க்கு, பாட்டியின் தீனமான குரல் ஒலித்தது.

 

“அனு…தண்ணி….தண்ணி…”

 

ஓடி போய் தண்ணிர் எடுத்து வந்து, பாட்டி குடித்த பின்னர், வேக வேகமாய் டாக்டருக்கு ஃபோன் செய்தாள், “அங்கிள்…நான் அனு….”

 

“அனு, சொல்லுமா…என்ன விஷயம்?”

 

“அங்கிள், பாட்டிக்கு…”

 

அதற்க்கு மேல் டாக்டருக்கு ஒன்றுமே கேட்கவில்லை, “அனு, அனு…ஹலோ, ஹலோ…அனு…”

 

அனுவுக்கும் டாக்டர் சொன்னது எதுவுமே கேட்கவில்லை, ஃபோன் ரிசீவர் கீழே தொங்கிக் கொண்டிதுந்தது, தன் மடியில் சரிந்த கிடந்த உயிரில்லாத, அவளின் உயிரான பாட்டிய, பல நிமிடங்கள் பிரம்மை பிடித்தது போல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். தன் கண்களை ஒரு நொடி பார்த்துக் விட்டு, பின் மேலே எழுந்த பாட்டியின் ஒளியிழந்த கண்களுக்குள் எதையோ தேடுவது போல ஊடுருவி பார்த்துக் கொண்டே இருந்தாள். எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ, அவளுக்கே தெரியாது. அந்த நிமிடங்கள் பல யுகங்களாய் கடந்தன.

 

டங் டங் என்று அந்த அறையின் கடிகாரம் பன்னிரெண்டு முறை அடித்து ஓய்ந்தது.

--------------------

 

முழங்காலிட்டு அமர்ந்து, தலைய அதில் புதைத்து, வாழ்கையே பறி குடுத்தது போல் அமர்ந்திருந்த மகளை பார்த்து, சாதாரணமாக எதற்க்கும் கலங்காத ரகுநாதன் கூட உடைந்தே போய்விட்டார், அம்மா இறந்த செய்தி வந்த உடனே கிளம்பியவருக்கு, அம்மா போன துக்கத்த விட, மகள் தனியாக என்ன செய்வாளோ என்கிற கலக்கம் தான் அதிகமாக இருந்தது.

 

பாட்டி இறந்து இரண்டு நாள் கழித்து வந்து இறங்கிய அம்மா, அப்பாவை பார்த்ததுமே, அனு, ’அம்மாஆஅ’ என்று ஒடி போய் அம்மா மடியில் படுத்து அழ ஆரம்பித்து விட்டாள்.

 

அனுவை தேற்றும் நிலையிலும் அவள் அம்மா இல்லை, அவரும் அனுவுடன் சேர்ந்து ’ஓ’ என்று அழுக ஆரம்பித்து விட்டார். திருமணம் ஆன நாள் முதல், சொந்த பெண் போல் பார்த்துக் கொண்ட மாமியாரை, கடைசி காலத்துல் உடன் இருந்து கவனித்துக் கொள்ள முடியாமல் போன துக்கம் தான் அவருக்கு அதிகமா இருந்தது.

 

“அனு…ஈஸி…பாட்டி லிவ்டு ஹெர் லைஃப், கஷ்டப்படாம போய்டாங்கன்னு நினைச்சுக்கோ…” கொஞ்சம் கூட குரல் பிசிராமல், தெளிவாக பேசிய அப்பாவை ஆச்சர்யமாக பாத்தாள் அனு.

 

அப்படியே, அனு அப்பா அம்மா கிளம்ப வேண்டிய நாளும் வந்தது.

HOD சண்முகமும், ரகுநாதனும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

“ஹ்ம்ம்…சரி, சண்முகா…அனுவ பாத்துக்கோன்னு நான் சொல்ல வேண்டியதில்லை…”

 

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன்…ஆனா, அனு தான் பாட்டிய ரொம்ப மிஸ் பண்ணுவா…என்ன அனு?”

 

அனுவிடமிருந்து ஒற்றை வரியில் “ஹ்ம்ம்…” என்று பதில் வந்தது.

 

ரகுநாதன், “என்ன தான் சொல்லு, அம்மா போய்டாலும், கடைசி காலத்துல கஷ்டமே படாம டக்குன்னு போய்ட்டாங்க பாரு, ஒரு விதத்துல எனக்கு சந்தோஷம் தான் சண்முகா…”

 

அது வரை பெரிதாக எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து அனு, “எப்படிப்பா உங்கனால இப்படி பேச முடியுது? செத்தது வேற யாரும் இல்ல, உங்கம்மா…”

 

“ஹா ஹா…என்ன அனு, எனக்கு தெரியாதா? உண்மைய தான சொன்னேன். பாட்டி ரொம்ப காலம் பெட்டோட படுத்து கஷ்டப்பட்டு…அப்படி எல்லாம் எதுவும் ஆகலையே, அத தான் நல்லதுன்னு சொன்னேன்…”

 

“ஆமா…உண்மை தான், ஏன்னா பாட்டிக்கு உடம்பு சரியில்லாம போயிருந்தா, நீங்கள்ள வச்சு பாத்திருக்கனும்? இப்படி பாட்டி திடீர்ன்னு செத்தது உங்களுக்கு நல்லது தான் பா” குரலில் ஒரு வித வெறுப்போட சொன்னாள் அனு.

 

ஏதோ வேலையாய் இருந்த அனுவின் அம்மாவுக்கு அனு பேசியதை கேட்டு கோபம் பொத்துக் கொண்டு வந்தது, “அனு!!! என்ன பேசுற? உங்கப்பா கிட்ட பேசிட்டு இருக்கேன்னு ஞாபகம் இருக்கா?

 

“இருக்கு, நல்லா இருக்கு, பெத்த அம்மா செத்துடாங்களேன்னு கொஞ்சம் கூட கவலை இல்லாம, வந்ததுல இருந்து, she lived her life…what a great death…கஷ்டம் குடுக்காம போய்டாங்க, அது இதுன்னு சந்தோஷமா பேசிட்டு இருக்காரு.!!!”

 

ரகுநாதன், “இப்ப என்ன அனு சொல்ல வர?”

 

“என்ன சொல்றது? அவங்கனால உங்களுக்கு இப்ப எந்த பிரியோஜனமும் இல்ல, அதனால தான், உங்களுக்கும் கஷ்டம் குடுக்காம போய்டாங்கன்னு குதிக்கறீங்க…You just threw her off like an old useless bucket”

 

“அனு!!!”

 

மகளை பார்த்து ஒரு வார்தை கூட அதிர்ந்து பேசாத ரகுநாதன், பக்கத்து வீட்டுக்களுக்கே கேட்பது போல் கத்தவும், சண்முகம்,

 

“ரகு…பொறுமையா பேசுப்பா…”

 

“என்ன சண்முகா சொல்றா இவ? ஏன் இப்படி எல்லாம் பேசுறா? எனக்கு ஒன்னுமே புரியலப்பா…”

 

“விடு ரகு, சின்ன பொண்ணு, புரியாம பேசுறா…அத போய் பெருசா எடுத்துக்கிட்டு, சரி வாங்க, நேரம் ஆகுது, கிளம்புங்க, இப்ப காலேஜ் போனா சரியா இருக்கும்…”

 

“ஷீலா! அனுவோட திங்ஸ் எல்லாம் பேக் பண்ணியாச்சா? கிளம்புவோம்…”

 

“உங்க பொண்ணையே கேளுங்க…”

 

“ஏன்? என்ன அனு, ரெடியா இல்லையா?”

 

“நான் ஹாஸ்ட்டலுக்கு எல்லாம் வரல, இந்த வீட்ல இருந்தே காலேஜுக்கு போறேன்…”

 

“விளையாட நேரம் இல்ல அனு! இங்கிருந்து தனியா போவியா? அது மட்டும் இல்லாம, இந்த வீட்ட வச்சுகிட்டு இனிமே என்ன பண்றது? இத பாக்கறதுக்காக எல்லாம் என்னால இன்னொரு தடவை வர முடியாது, விக்கறதுக்கு பேசி வச்சிட்டேன்…”

 

“என்னது, விக்க போறீங்களா? என்னப்பா சொல்றீங்க...” கேட்கும் போதே அனுவுடைய குரல் பாதி உடைந்து அழுகையாக தான் வெளிப்பட்டது.

 

“ஆமா அனு, இனி இந்த வீடு எதுக்கு…”

 

“எதுக்கா? இது தான் பாட்டி கடைசியா இருந்த வீடு, பாட்டி இன்னும் இங்க தான் இருக்காங்க, இந்த வீட்டையா விக்க போறீங்க?”

 

“Don’t be silly anu…”

 

“silly? I am damn serious…நான் இந்த வீட்ட விட்டு எங்கயும் போக மாட்டேன்…நானும் பாட்டியும் இருந்த வீடு, இங்க இருக்குற ஒவ்வொரு செங்கல்லையும் எங்க சிரிப்பு சத்தம் கேக்கலையா உங்களுக்கு? அதோ அந்த இடத்துல தான்…பாட்டி எனக்கு சாதம் ஊட்டி விடுவாங்க, அங்க சாப்பாட்டா தான் என்னால சாப்ட முடியும்…அதோ அந்த இடத்துல தான்…நான் பாட்டி மடில படுத்துகிட்டு, கதை கேட்டுகிட்டே தூங்குவேன்…அங்க படுத்தா தான் எனக்கு தூக்கம் வரும்…அதோ அங்க தான்….”அதுற்கு மேல் பேச முடியாமல் ’ஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள்…

 

அனு அழுவதை பார்த்த அவள் அம்மா, பெருகி வங்க கண்ணீரை கூட துடைக்காமல் செய்வதறியாது அப்படியே திகைத்து நின்று கொண்டிருந்தார்.

 

ஆனா ரகுநாதன் மட்டும், “என்ன பேசுறா இவ? பைத்தியம், கியித்துயம் பிடிச்சுருச்சா இவளுக்கு…” அதற்க்கு மேல் அவரை பேச விடாமல், சண்முகம் ரகுநாதனை வெளியே தள்ளிக் கொண்டு போனார்…

 

“ஏய்…இப்ப எதுக்குப்பா உனக்கு இந்த வீட்டை விக்கனும்? பணம் ஏதாவது வேணும்ன்னா என்னை கேளு…”

 

“என்னப்பா நீயும்? பணத்தக்காக இல்லை, இந்த வீட்டை பாக்குறதுக்காக மறுபடியும் இந்த ஊருக்கு வர முடியுமா? அனுவும் ஹாஸ்டல் போக போறா, இந்த வீட்ட என்ன பண்ண சொல்ற?”

 

“அட்லீஸ்ட் அனு படிச்சு முடிக்குற வரைக்கும் இருக்கட்டுமே…”

 

ஒரு வழியாக, அழுது அடம் பிடித்த அனுவை ஆறாவது செமெஸ்டர் முதல் நாள், ஹாஸ்டலில் சேர்த்தார்கள்.

 

ஹாஸ்ட்டலில் அனுவும், அவள் அன்புத் தோழிகள் இருவரும் ஒரே அறையில் இருந்தும், தனிமையின் உச்சத்தில் அனு…

 

இன்று

மணி: இரண்டு

ஹாஸ்டலில் தன் தோழிகளோடு ஏற்பட்ட சண்டையை நினைத்தவுடன், அனு கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.

Saturday, October 18, 2008

3rd year - 4

பாகம் 1, பாகம் 2, பாகம் 3

"ஹேய் கவி!!!என்ன ஆச்சு? காந்தி செத்த நியூச இப்ப தான் கேட்ட மாதிரி முகத்த வச்சிருக்க?" நக்கல் சிரிப்போடு அனு கவிதாவை பார்த்து கேட்டாள். லேப் முடிந்து வந்த அனுவும் இளமதியும், வேறு ஒரு லேபில் இருந்து வந்த கவிதாவை அப்போது தான் பார்த்தனர்.


கவிதா, "இங்க வேண்டாம்...வாங்க, ஒரு முக்கியமான விஷயம்..."
அவர்கள் இருவரையும் காரிடாரின் கடைசி வரை இழுத்துக் கொண்டு போன கவிதா, கவலை தோய்ந்த முகத்தோடு "இளம்ஸ்...நீ சொன்னது சரியா தான் போய்டுச்சு..."


இளமதி, "என்ன கவிதா? என்ன விஷயம்ன்னு சொல்லு மொதல்ல..."


கவிதா, "அனு! இன்னிக்கு எங்க லேப்ல பசங்க பேசிட்டு இருந்தத கேட்டேன்... பாலா உன்ன அவனோட ஆளுன்னு சொல்லிட்டு திரியரானாம்...ஹாஸ்ட்டல் முழுக்க இப்ப இது தான் ஓடிட்டு இருக்கு போல இருக்கு...லீவ்லயே ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாமேன்னு என்கிட்டயே கேக்கறாங்க!!!"

எப்போதும் பால் போல வெண்மையாய் இருக்கும் அனுவின் முகம் ஒரு நொடியில் ரத்தக் சிவப்பானது...
"என்னது??? அப்படியா சொன்னான்?" அனு துரிதமாக நடக்க ஆரம்பிக்கவும்,

இளமதி, "அனு! எங்க போற?"

அனு,"இப்பயே போய் அவன என்னன்னு கேக்கறேன்...How dare he is!!!"

கவிதா, "ஆமா அனு! எவ்ளோ கொழுப்பு இருக்கணும் அவனுக்கு!!! வா, நேரா HOD கிட்ட போய் சொல்லுவோம்..."

இளமதி, "உங்க ரெண்டு பேத்துக்கும் என்ன பைத்தியமா? சின்ன விஷயத்தப் போய்..."

அனு, "வாட்??? சின்ன விஷயமா? எப்டி இளம்ஸ் உன்னால..."

இளமதி, "பாரு அனு...கோவபடாம கொஞ்சம் பொறுமையா யோசி...சும்மா ஏதாவது கிண்டலுக்கு ஓட்டி இருந்துருப்பாங்க... இதுக்கெல்லாமா ரியாக்ட் பண்ணுவாங்க? Just ignore it…அவ்ளோ தான்..."

அனு,"நீ தான் இளம்ஸ் லூசு மாதிரி பேசற...ஓட்டறது வேற...அதுக்காக இப்படியா ஹாஸ்ட்டல் ஃபுல்லா ஆளு அது இதுன்னு பேசுவாங்க? அவன என்னன்னு கேக்காம விடறதில்ல...ஒரு கை பாத்துக்கறேன் அவன..."

பேசிக்கொண்டே அனு, இறுதி ஆண்டு வகுப்பறைக்குள் நுழைந்தாள். அப்பொழுது தான் காலை இடைவேளை முடியும் நேரமென்பதால், எல்லோரும் மீண்டும் வகுப்பறைக்குள் வந்து கொண்டும், அங்குமிங்கும் நின்று பேசிக் கொண்டும் இருந்தார்கள்.

நம் ஹீரோ பாலா, கால்களை அகல பரப்பி, வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டு, பெஞ்சில் தாளம் போட்டுக் கொண்டிருந்தான்.
அவனருகில் சென்று அவனை முறைத்துக் கொண்டு நின்ற அனுவை பார்த்ததும் அவன் கைகள் தாளம் போடுவைதை தானாக நிறுத்தி விட்டு, கண்கள் அனுவை கேள்விக்குறியோடும், ஆச்சர்யத்தோடும் நோக்கின.

மிரட்டும் தொனியில் அனு, "என்ன பாலா!! என்னை உன் ஆளுன்னு உன் பிரெண்ட்ஸ் கிட்ட சொன்னியா?"

உடனே பதறிப் போய் எழுந்து நின்ற பாலா "இல்ல அனு...அது வந்து..." என்று இழுக்கவும், அனு பிடிவாதமான குரலில், "சொல்லு! சொன்னியா, இல்லையா?"

பாலா, “இல்ல….அது…சும்மா எல்லாரும் ஓட்டினாங்களா…அதான்…”

அனு,”அதுக்கு? நீயும் கூட சேந்து சொல்லிக்குவியா? என்ன சொல்லி வச்சிருக்க? மரியாதையா சொல்லு!”

கண்களில் ஒரு சின்ன சிமிட்டலோடு பாலா, "ஆமா!!! சொன்னேன்...இப்ப இல்லன்னாலும், கூடிய சீக்கரத்துல அதுவே உண்மையாக கூட ஆக..." அவன் பேசி முடிக்கும் முன்பே, அந்த அறையே ஸ்தம்பிக்கும் வண்ணம் பளார் என்ற சத்தம் கேட்டது.

கைகளை கன்னத்தில் வைத்துக் கொண்டு, நடந்ததை நம்ப முடியாமால் உறைந்து போய் நின்றிருந்த பாலாவையும், ஓடிக் கொண்டிருந்த காட்சியை ’பாஸ்’ பட்டன் சொடுக்கி நிறுத்தியது போல் அப்படியே நின்று விட்ட மற்ற மாணவர்களையும், திரும்பி கூட பார்க்காமால், அனு அந்த அறையின் வாயிலை நோக்கி காற்றை மிஞ்சும் வேகத்தில் புயல் போல் நடக்க ஆரம்பிக்கவும் தான், சுயநினைவுக்கு வந்தவர்களாய், இளமதியும், கவிதாவும் அவள் பின்னால் தலை தெறிக்க ஓடினார்கள்.

அதிகம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத இளமதி முகத்தில் கூட அன்று எள்ளும், கொள்ளும் வெடித்தது. என்ன விதமான உணர்ச்சி என்றே பிரித்துப் பார்க்க முடியாத ஒரு குழப்பம் கவிதாவின் முகத்தில்.
ஆனால் அனுவோ, அம்மன் படத்தில் கடைசியில் வரும் அம்மன் முகம் போல், கோபம் தணிந்து சாந்த சொரூபியா காட்சியளித்துக் கொண்டிருந்தாள்.

இளமதி, "Seriously anu!!! You are an emotional idiot!!!"

அதை சட்டை செய்யாமல் அனு தொடர்ந்து நடக்கவும், இளமதி, "அனு! என்ன தான் இருந்தாலும், நீ அவன அடிச்சது தப்பு...அப்படியே அவன் செஞ்சது தப்பா இருந்தாலும், அவன தனியா கூப்ட்டு சொல்லி இருக்கலாமே? அத விட்டுட்டு, இப்படியா? மொத்த க்ளாஸ் முன்னாடி? ச்சே..."

அனு, "என்ன தைரியம் இருந்தா என்கிட்டயே வந்து,”ஆமா, சொன்னேன் இப்ப என்ன’ன்னு அவ்ளோ தெனாவெட்டா பேசுவான்? என்ன யாருன்னு நினைச்சான்?"

அனு பொருமித் தள்ளவும், கவிதா, "ப்ளீஸ் அனு! காம் டௌன்... க்ளாசுக்கு லேட் ஆச்சு..வாங்க"
---

காலையில் இருந்து உர்ரென்று இருந்த இளமதியையும், எதையும் சட்டை செய்யாதது போல் நடந்து கொண்ட அனுவையும் வைத்துக் கொண்டு கவிதாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைசி பீரியடும் வந்துவிட்டது. ஆனால் அவர்கள் இருவருமே சமாதானம் ஆவது போல் எந்த வித அறிகுறியும் தெரியவில்லை.


அவள் ஏதாவது பேசினாலும், அதற்குறிய பதிலை மட்டும் அளித்து விட்டு மெளன நிலைக்கு போனாள் இளமதி. ’அட ச்சே…அடி வாங்கினது என்னவோ, அவன்…இவள அடிச்ச மாதிரி இவ்ளோ பிகு பண்றாளே’ என்று இளமதிக்கு கேட்காத வண்ணம் அனுவிடம் நகைச்சுவையாக சொல்லி பார்த்தாள், ஆனால் அனுவோ, “ஹய்யோ…very funny!” என்று நக்கலாக பதிலளித்து விட்டு அந்த பக்கம் திரும்பி கொண்டாள். ’என்னடா இது, ஒரே பெஞ்சில ஆயுத எழுத்து மாதிரி உக்காந்திருக்கமே’ என்று நொந்து கொண்டவளுக்கு அப்போது தான் ஒரு உத்தி தோன்றியது. வயிற்றை பிடித்து கொண்டு ஒரு விதமாக முகத்தை மாற்றி, “ஹய்யோ…அம்மா…ரொம்ப பசிக்குதே…இந்த க்ளாஸ் முடிய வேற இன்னும் அரை மணி நேரம் இருக்கு…”

உடனே நோட்ஸ் எடுப்பதை நிறுத்து விட்டு இளமதி, “அச்சச்சோ…ரொம்ப பசிக்குதா கவி? க்ளாஸ் முடிஞ்ச உடனே கான்டீன்னுக்கு போவோம்…”
’ஹ்ம்ம் சரி’ என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன கவிதாவின் கையில், குனிந்து கொண்டு தன் பையில் எதையோ நோண்டிக் கொண்டிருந்த அனு, ஒரு டைரி மில்க் மிட்டாயை தினித்தாள்.
வகுப்பு முடிந்ததும், மூவரும் கான்ட்டீனை நோக்கி எதுவுமே பேசாமல் புறப்பட்டனர்.

கவுன்டர் அருகே சென்ற உடன் இளமதி, “என்ன கவி சாப்டற?” என்று தனது பையை திறந்து கொண்டே கேட்கவும்,
கவிதா ஒரு வித குறும்பு சிரிப்புடன், “இல்ல, இல்ல…நீ பேக மூடு, இன்னுக்கு அனு தான் ட்ரீட்…”
அதுவரை அமைதியாக இருந்த அனு, “என்னது? நானா? எதுக்கு?” என்று வினவ,
கவிதா, “என்ன அனு? தெரியாத மாதிரி கேக்குற? இன்னிக்கு எவ்ளோ பெரிய காரியம் பண்ணி இருக்க? ஜான்ஸி ராணி மாதிரி ஃபைனல் இயர் க்ளாஸ் ரூம்குள்ள மார்ச் பண்ணி போய் ஒரு பையன அறைஞ்சுட்டு வந்துருக்க…இதுக்கு ட்ரீட் குடுக்கல்லன்னா எப்படி?”

ஹா ஹா ஹா என்று சத்தமாக சிரித்துக் கொண்டு அனு, “கவி!!!! நீ தாம்மா என் பெஸ்டு ஃபரெண்டு” என்றவாறு அவளை தோளோடு கட்டிக் கொண்டாள்.
இதை சிறுதும் எதிர்பார்க்காத இளமதி, “அட ச்சே…உங்க ரெண்டு பேத்தையும் திருத்தவே முடியாது” என்று தலையில் அடித்துக் கொண்டாலும், அவர்களுடன் சேர்ந்து அவளும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவர்களின் சிரிப்பொலி கான்டீன் முழுதும் அழகாக ரீங்காரமிட்டது.

---

அனு வீட்டிற்குள் நுழைந்ததும், அவள் பாட்டி பல்லவியை ஆரம்பித்து விட்டார்.
அனு, “உனக்கெப்படி பாட்டி தெரியும்? அதுக்குள்ள அந்த இளமதி ஃபோன் பண்ணி வத்தி வச்சுடாளா?”

உடனே பாட்டி, “ஆமா…அந்த பொண்ணு ஃபோன் பண்ணி சொல்லன்னா, நீ சொல்லி இருக்க மாட்டியாக்கும்? ஏன் அனு இப்படி பண்ண?”

அனு, “எனக்கு பசிக்குதுஉஉஉ”

“ஏம்மா? ஒரு பையன அவன் க்ளாஸ்ல அத்தன பேர் முன்னாடி வச்சு அடிக்கலாமா? தப்பில்லையா?”

“போ பாட்டி! உன்ன மாதிரி கோவப் படாம எல்லாம் என்னால இருக்க முடியாது…ஓவரா பேசினான், So I taught him a lesson…that’s it!!!”

“என்ன அனு குட்டி இப்படி பேசுற?”

ஏதேதோ பேசி, ஒரு வழியாய் பாட்டியை சமாதானப் படுத்தினாள் அனு. தினமும் சாப்பிட்டு முடித்ததும், டீ.வியை போட்டுக் கொண்டு, ஆனால் அதை பார்க்காமல், அரட்டை அடித்துக் கொண்டிருப்பது தான், பாட்டி பேத்தியின் வேலை. அன்றிரவும் வழக்கம் போல், பாட்டி மடியில் படுத்துக் கொண்டு டீ.வி பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.
“ஏன் அனுகுட்டி… அந்த பையன் வீடு இங்க தான இருக்கு?”

“ஆமா! அதுக்கென்ன இப்ப?”
“அவங்க அப்பா, அம்மா கிட்ட சொல்லி இருந்தா, அவங்க கண்டிக்க போறாங்க…நீ போய் ஏம்மா அவனோட வம்பு வளத்துட்டு வந்துட்ட? நாளைக்கு அவன் உன்ன எதாவது பண்ணிட்டான்னா…”

“ஹய்யோ பாட்டி! நிறுத்து…நீ இருக்கும் போது என்னை யாரு என்ன பண்ண முடியும்? சரி, அதெல்லாம் விடு…இப்ப நீ உன் கதையை சொல்லு…தாத்தா ஒன்னு சொல்லுவாரே, அத சொல்லு…”

“அட போ!!! எத்தன தடவ தான் கேப்ப?” என்று பாட்டி அலுத்துக் கொள்ளவும், சிரித்த படி அனு, “ஹா ஹா…சும்மா வெக்கப் படாம சொல்லு பாட்டி!!!”

நினைவின் அழகிய சுழல்களில் விரும்பி போய் சிக்கி கொள்வது மனித இயல்பு தானே? அந்த சுருங்கிய முகத்திலும் லேசான வெட்கம் குடியேற, அதரத்தில் புன்னகை மலர, கண்களில் இரு நட்சதிரங்கள் மின்ன, பாட்டி அவர் கதையை ஆரம்பித்தார். “கல்யானம் ஆன புதுசு…உங்க தாத்தா வேலை செய்ற ஆஃபீஸுக்கு என்னை கூட்டிடு போயிருந்தாரு, அப்ப அங்க இருந்த எல்லாரும், உங்க மனைவியை அறிமுகப் படுத்தலையேன்னு கேக்கவும், ஒரு நிமிஷம் கூட யோசிக்காம உங்க தாத்தா,
இவங்க தான்

“என் அன்பு மனைவி
என் ஆருயிர் தோழி
என் ஆசை கண்மணி
என் அருமை காதலி”

ன்னு சொன்னாரு…
பாட்டி சொல்லி முடிக்கவும், எப்போதும் போல அனுவும், “copy cat…copy cat…இருவர் படத்துல வர மாதிரி இருக்கு…” என்று கத்தவும், பாட்டு, “போடி! அப்பெல்லாம் அந்த படம் வரவே இல்ல” என்று வழக்கம் போல் மறைந்த தன் கணவருக்காக வக்காலத்து வாங்கினார்.

அப்படியே சிரித்துக் கொண்டும், கதை பேசிக் கொண்டும் அன்று பாட்டி மடியிலேயே தூங்கி போனாள் அனு.

இப்படியே ஆடி, பாடி ஒரு வழியாக ஐந்தாவது செமஸ்டர் தேர்வும் வந்தது.
மறுநாள் கடைசி பரிட்சை, அனு படித்துவிட்டு தூங்க போகும் போது மணி ஒன்று.
படுக்கையறைக்குள் தட தடவென நுழைந்த அனுவை திடுக்கிட செய்தது அந்த நேரத்தில் பாட்டியின் தெளிவான குரல், “ஏன் அனுகுட்டி…இப்படி ஓடி வர?”

“பாட்டி! நீ இன்னும் தூங்கலையா? மணி ஒன்னாச்சு, தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க?”

“தூக்கம் வரல தங்கம்…ஆமா, ஏன் இப்படி தல தெறிக்க ஓடி வர?”

“லைட் ஆஃப் பண்ணிட்டேனா…அதான், பயந்துட்டு வேகமா வந்தேன்…”

“அடப் புள்ள, இங்க லைட்ட போட்டுட்டு, அப்புறம் ஹால்ல லைட்டு ஆஃப் பண்ணிட்டு இங்க வர வேண்டியது தான?

“இங்க லைட்ட போட்டா நீ எந்துருச்சிடுவியே…அதான்”

“ஹய்யோ…என் ராசாத்தி!!! வா, வந்து படு வா…”

அப்போது அனுவுக்கு தெரிந்திருக்கவில்லை, அன்று தான் பாட்டியுடன் படுத்து உறங்கும் கடைசி இரவு என்று அனுவுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

மறுநாள் காலை, அந்த வீடு வழக்கத்துக்கு மாறாக விடிந்தது. பாட்டி தூங்கிக் கொண்டிருக்க, அனு அவசர அவசரமாய் கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.
அனு கிளம்பும் அரவம் கேட்கவும், வேக வேகமாக ஓடி வந்த பாட்டி, “அனு! சாப்டாமயே கிளம்பிட்டயா? இரும்மா…ஐஞ்சே நிமிஷத்துல எதாவது செஞ்சு குடுக்கறேன்…”

“பாட்டி…நான் நூடில்ஸ் செஞ்சு சாப்ட்டுட்டேன்…உனக்கும் இருக்கு, நீயும் சாப்பிட்டு ரெஸ்ட் எடு…நான் கிளம்பறேன்…வந்து கதவ பூட்டிக்கோ”
கதவருகே வந்து நின்ற பாட்டி அனுவை ஒரு நொடி இமைக்காமல் பார்த்து விட்டு, “அனு! All the best” என்றார்.

பரிட்சையை சீக்கரமே முடுத்து விட்டு, விடுமுறை சந்தோஷத்துடன் வீட்டுக்கு துள்ளி குதித்தபடி ஓடி வந்தாள் அனு. அதன் பிறகு, ஒரு சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்த விட்ட சம்பவங்கள் நீண்ட நாட்கள் அவள் நினைவை விட்டு அகல மறுத்தது. பாட்டி இறந்ததை விட, அவர் இறந்த விதம் தான் அவளை மிகவும் உலுக்கி விட்டது.

[தொடரும்]

Sunday, October 12, 2008

நீ இல்லாத வீடு...

நீ இல்லாத அந்த மழை நாளில்...

மழை பொழியும் வேளையில்...
வீட்டை சுற்றி சுற்றி நான் ஓடி விளையாடுவதும்,
என்னை நீ அதிகப் படியாய் கடிந்து கொள்வதும்...

நீர் சேமிக்கிறேன் என்று சாக்கிட்டு, மழையில் நான் அலைவதும்,
பின்னோடு ஒரு குடையோடு, நிழலாய் நீ என்னை தொடர்வதும்...

பார்! இன்று கூட மழை பெய்கிறது!
எப்போதும் போல் வீட்டை சுற்றி வந்து நனைந்தாலும்,
கண்டிக்க யாரும் இல்லை தான்...

என்னவோ! மழைச்சாரல் பட்டுத் தெறிக்கும் அழகை,
எட்டிப் பார்க்கக் கூட தோன்றவில்லை...

காகிதத்தில் கப்பல் செய்வதை விடுத்து
எதையோ கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...

*******
அன்னியலோகம்

பிறந்து வளர்ந்த வீடு கூட அன்னியமாகிப் போனது
நீ இல்லாத நாட்களில்...

*******
படையெடுப்பு

நீ ஊரில் இல்லை என்று யாரோ இந்த எறும்புகளுக்கு தந்தியடிதிருக்கிறார்கள்!
பின்னே? எப்படி மறுநாளே நம் வீட்டிற்க்குள் படை எடுக்கும்?

****
தூக்கம் தொலைத்த இரவு...

தூக்கத்தின் ஆழத்தில்,
தொட்டில் துறந்தது முதல், பிறந்த பழக்கமாய்,
உன் மேல் கை போட யத்தனிக்கையில்,
தொம்மென்று வெற்றுப் படுக்கை மேல் விழுந்த கை,
மனதின் அடியில், பெருவலி ஒன்றை கிளப்பியது...
அன்று, நடுநிசியிலேயே விடிந்தது என் இரவு...