Sunday, October 12, 2008

நீ இல்லாத வீடு...

நீ இல்லாத அந்த மழை நாளில்...

மழை பொழியும் வேளையில்...
வீட்டை சுற்றி சுற்றி நான் ஓடி விளையாடுவதும்,
என்னை நீ அதிகப் படியாய் கடிந்து கொள்வதும்...

நீர் சேமிக்கிறேன் என்று சாக்கிட்டு, மழையில் நான் அலைவதும்,
பின்னோடு ஒரு குடையோடு, நிழலாய் நீ என்னை தொடர்வதும்...

பார்! இன்று கூட மழை பெய்கிறது!
எப்போதும் போல் வீட்டை சுற்றி வந்து நனைந்தாலும்,
கண்டிக்க யாரும் இல்லை தான்...

என்னவோ! மழைச்சாரல் பட்டுத் தெறிக்கும் அழகை,
எட்டிப் பார்க்கக் கூட தோன்றவில்லை...

காகிதத்தில் கப்பல் செய்வதை விடுத்து
எதையோ கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...

*******
அன்னியலோகம்

பிறந்து வளர்ந்த வீடு கூட அன்னியமாகிப் போனது
நீ இல்லாத நாட்களில்...

*******
படையெடுப்பு

நீ ஊரில் இல்லை என்று யாரோ இந்த எறும்புகளுக்கு தந்தியடிதிருக்கிறார்கள்!
பின்னே? எப்படி மறுநாளே நம் வீட்டிற்க்குள் படை எடுக்கும்?

****
தூக்கம் தொலைத்த இரவு...

தூக்கத்தின் ஆழத்தில்,
தொட்டில் துறந்தது முதல், பிறந்த பழக்கமாய்,
உன் மேல் கை போட யத்தனிக்கையில்,
தொம்மென்று வெற்றுப் படுக்கை மேல் விழுந்த கை,
மனதின் அடியில், பெருவலி ஒன்றை கிளப்பியது...
அன்று, நடுநிசியிலேயே விடிந்தது என் இரவு...

Friday, October 10, 2008

3rd year - 3

பாகம் 1
பாகம் 2

ஞான பண்டிதா, சரணம்…சரணம்…
ஞான ஸ்காந்தா, சரணம்…சரணம்…

“பாட்டீஈஈஈஈ!!!! பாட்டீஈஈஈஈ!!!!” ஹய் பிட்சில் ஒலித்தது அனுவின் குரல்.

“என்ன குட்டி? சாமி கும்பிட்டுட்டு இருக்கேன்ல? ஒரே நிமிஷம், தோ வரேன்…” பூஜை அறையில் இருந்து கொண்டே பதில் அளித்தார் அனுவின் பாட்டி, காந்திமதி. நல்ல வெள்ளை நிறம், அதை விட வெண்மையான, மேகம் போன்ற கூந்தல். என்னேரமும் திருநீரு துலங்கும் நெற்றி, எப்போதும் சிரித்த முகம், இப்படி தான் பாட்டியை பார்த்து பழக்கப் பட்டிருந்தாள் அனு, பிறந்தது முதல்.

“சீக்ரம் வா…லேட் ஆச்சு, 3rd year ஃபர்ஸ்ட் டே…லேட்டா போக போறேன் போ…சீக்கரம் வாஆஆஆஅ”

ஒரு நிமிடம் ஆனது, இரண்டு நிமிடம் ஆனது, ஐந்து நிமிடமும் ஆனது, ஆனால் பாட்டி பூஜை அறையிலிருந்து வெளியே வரவே இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அனு, பூஜை அறைக்குள்ளே சென்றாள்.

“என்ன பாட்டி, இத்தன நேரம் என்ன பண்ணிட்டு இருக்க? ஹேன், ஹேன்னு சத்தம் மட்டும் வருது…”

“இந்த விளக்கு ஏத்தறேன், ஏத்தறேன்…அனஞ்சுகிட்டே இருக்குது…பாரு, அட…என்னன்னே தெரியலயே…”

அருகில் இருந்த பாட்டிலை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள் அனு.
“என்ன சிரிப்பு? என்ன தான் ஆச்சோ இந்த விளக்குக்கு…”

“ஹய்யோ…பாட்டி, எண்ணைக்கு பதில் தேன ஊத்திட்டு…ஹா ஹா, இதுல எழுபத்தி ஐஞ்சு வயசு ஆனாலும், எனக்கு கண்ணாடி இல்லமையே, கண்ணு நல்லா தெரியும்னு சீனு வேற…சரி சரி, லேட் ஆச்சு…சீக்கரம் வந்து எனக்கு சாப்பாடு குடு…வா…”

“என்னச் சொல்ற…இவ்ளோ வயசு ஆச்சு, ஊட்டி விட்டாத் தான் சாப்பிடுவியா? நீயே சாப்பிட வேண்டியது தான?”

“சரி, அப்ப எனக்கு சாப்பாடு வேண்டாம் போ…நான் போறேன்…”

“ஐயோ! அனுக்குட்டி…இரு, இரு, கையை கழுவிட்டு வந்தர்றேன்…போய்டாத”

க்ரீச்ச்ச்ச்….
ப்ரேக் போட்டு ஸ்கூட்டியை நிறுத்தினாள் அனு.
“ஹேய்…பாலா!!! எங்க காலேஜுக்கா கிளம்பிட்ட?”
“ஆமா அனு…”
“எப்டி போகப் போற?”
“பஸ்ல தான்…”
“அப்ப வா என்னோட…நான் உன்ன ட்ராப் பண்றேன்…”
“தாங்ஸ் அனு…” என்றவாரே அவள் பின்னால் அமர்ந்தான் பாலா, பாலக்குமார். அனுவுக்கு ஒரு வருடம் சீனியர். சென்ற வருட விடுமுறை சமயத்தில் தான், அனு குடியிருக்கும் ஃப்ளாட்டுக்கு அவன் குடும்பமும் குடி வந்திருந்தது. இன்டேர்ன்ஷிப், அது, இது என்று இருந்ததனால், அனுவும் ஒரு மாதத்திலேயே, விடுமுறை முடிந்து யு.யெஸில் இருந்து இந்தியா திரும்பி விட்டாள். அது வரை, முகத்தளவில் மட்டுமே தெரிந்திருந்த அவர்கள் இருவரும், அந்த ஒரு மாதத்தில் தான், ஓரளவிற்கு பேசி பழகி இருந்தனர்.

ஐந்தே நிமிடங்களில் கல்லூரியும் வந்துவிட்டது. அனு வண்டியை நிறுத்தவும், கவிதா அப்பாவின் கார் அங்கு வரவும் சரியாக இருந்தது.
“அனு!!!” ஆயிரம் வாட்ஸ் ஒளி முகத்தில் பிரகாசிக்க, உற்சாக மிகுதியில் கத்திக் கொண்டே காரை விட்டு இறங்கி, நீண்ட கூந்தல் அலைபாய, ஓடி வந்தாள் கவிதா.

“ஹே…கவி!!!” துள்ளி குதித்துக் கொண்டு ஓடினாள் அனுவும். கரை புரண்டு ஓடிய அவர்களது உற்சாகமும், அலப்பறையும் ரொம்ப நாள் கழித்து பார்த்துக் கொண்ட தோழிகள் போல் இருந்தாலும், ஒரு வாரம் முன்பு தான் இருவரும் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.
அனு, “கவி…ஊஊஹ்ஹ்…what a bingo man!!! ரெண்டு பேருமே லேட்டு…ஹாய் அங்கிள், எப்படி இருக்கீங்க?”

“நான் இருக்கறது எல்லாம் இருக்கட்டும், 8.35 ஆச்சு…ஓடுங்க…ரெண்டு பேரும் நல்லா தான் செட்டு சேந்திருக்கீங்க…”

கைகள் கோர்த்துக் கொண்டு தட தட வென ஓட ஆரம்பித்தனர் அனுவும், கவிதாவும். அனு…கவி…இவர்கள் இருவருமே கிட்ட தட்ட ஒரே மாதிரியான கேரக்டர்ஸ் தான். கொட்டும் அருவி போல், ஒரு இடத்தில் நிற்காமல், எப்பொழுதும் சிரித்துக் கொண்டோ, விளயாடிக் கொண்டோ, சந்தோஷமாக, full of life என்று சொல்வார்களே, அப்படி! ஆனால், கவிதா கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி, அந்த வகையில் அனு கொஞ்சம் தேவலை.

“Excuse me, sir…”

“Sorry, you are too early for the next class…” ராமமூர்த்தி ஸார் கொஞ்சம் கண்டிப்பு தான். வாசலருகே நின்று கொண்டு ஸார், ஸார் என்று இருவரும், ஒரு ’ஐயோ பாவம்’ முகபாவனையுடன் இழுக்கவும், சரி, போனாப் போகுது, முதல் நாள் வேற, நல்லா படிக்கற பொண்ணுக தானே என்று, ஒரு எச்சரிக்கையுடன் அவர்களை உள்ளே அனுமதித்தார்.

இருவரும் ஹப்பாடா என்று வகுப்புக்குள் நுழைய, முதல் பென்ச்சில் அமர்ந்து கொண்டு, இவர்கள் இருவரையும் முறைத்த படி இளமதி…படிய வாரிய தலை முடி…எப்போதும், திருநீரும் குங்குமுமாகத் தான் காட்சி அளிப்பாள். அனுவும், கவிதாவும், அருவி போல என்றால், இளமதி, தெளிந்த நீரோடை போல. எப்பொழுதும் ஒரே மாதிரி, ஒரே சீராய் ஓடிக் கொண்டு, எந்த வித சலசலப்பும் இல்லாமல், ஆனால் ஆழ்ந்த சிந்தனைகளோடு இருக்கும் ஒரு பெண்…இல்லை இல்லை… டீச்சர்!!! இப்படி தான் அனுவும் கவிதாவும் சொல்வார்கள்.



கவிதா ஊர் பொள்ளாச்சி அருகே ஒரு கிராமம், விவசாயக் குடும்பம். நல்ல கல்விக்காக, சிறு வயதிலிருந்தே விடுதி வாசம். அதனால், அவள் வாழ்வில், எப்போதுமே நண்பர்களுக்கென்று மிக மிக முக்கிய இடம் உண்டு. இளமதி ஊர் திண்டுக்கல் அருகே காந்தி கிராமம்…அம்மா, அப்பா இருவருமே தமிழ் பேராசிரியர்கள். அனுவோ பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்க நாட்டில். ப்ளஸ் ஒன் முதல் தான், பாட்டியுடன் அந்த ஊரில் வசிக்க ஆரம்பித்திருந்தாள்.

இப்படி எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த அவர்கள் மூவரும், கல்லூரிக்கு வந்த நாள் முதல், ஒன்றாகவே தான் சுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் எப்படி, ஏன் நண்பர்களானார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், கல்லூரியின் முதல் நாள், மற்ற இருவர் அமர்ந்திருந்த பென்சில் சென்று அமர்ந்தது தான் செய்த பாக்கியம் என்று தான் மூவருமே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதோ இதோ என்று மூன்றாம் ஆண்டும் வந்தாச்சு. அன்று தான், மூன்றாம் ஆண்டின் முதல் நாள். வழக்கம் போல், இன்டர்வெல்லில், கேண்டினில் மூவரும் ஆஜர்.
அனு, “ஹே…இன்னிக்கு ட்ரீட்…” தொட்டதற்கெல்லாம், ட்ரீட் கேட்பதும், கொடுப்பதும் அனுவுடைய பகுதி நேரத் தொழில்.

இளமதி, “எங்கடா இன்னும் ஆரம்பிக்கலையேன்னு பாத்தேன்…சொல்லுங்க, இன்னிக்கு என்ன?”

கவிதா, “ஹே…வெய்ட், வெய்ட்…நான் சொல்றேன், நான் சொல்றேன்…இன்னிக்கு ஃபர்ஸ்ட் டே, அதான அனு?”

அனு, “naa…bad guess”

இளமதி, “ஹாங்ங்…நாம இனிமே சூப்பர் சீனியர்ஸ் ஆய்ட்டோம்…அதான?”

அனு, “இன்னும், ஃபர்ஸ்டு இயர்ஸே வரல, அதுக்குள்ள என்ன சூப்பர் சீனியர்ஸ்?”

கவிதா, “ஹான்…கண்டு பிடிச்சுட்டேன்…இன்னிக்கு லேட்டா, லேட்டஸ்டா வந்தமே, அதுக்கு…”

அனு, “ஹ்ம்ம்…குட் ரீசன்…ஆனா, அதுவும் இல்ல…”

இளமதி, “இதுல பெருமை வேறயா? என்னன்னு சொல்லு அனு…”

அனு, “இன்னிக்கு வீட்ல இருந்து வந்துருக்கனால, ரொம்ப நாளைக்கு அப்புறம் கவி, குளிச்சுட்டு காலேஜ் வந்துருக்கா…அதுக்கு நான் ட்ரீட் குடுக்கறேன்…” சொல்லி விட்டு அனு சிரிக்கவும், இளமதியும் அவளுடன் சேர்ந்து கொண்டாள். “பாவி…கொரங்கு, பன்னி” என்று கவிதா சிணுங்கவும், அவர்கள் சிரிப்பு மேலும் தொடர்ந்தது.

இப்படியே சிரிப்பும், கூத்துமாகவே நகர்ந்தது அந்த வாரம். வெள்ளி கிழமை, வழக்கம் போல பாலாவை அழைத்துக் கொண்டு கல்லூரியை வந்தடைந்தாள் அனு. வண்டியை பார்க் செய்யப் போனவள், அவளுக்காக இளமதி காத்துக் கொண்டிருப்பதை பார்த்து, “இளம்ஸ்…நீ எப்படி? மணி எட்டேகால் தான் ஆச்சா? என் வாட்சுல 8.26 காட்டுது?” என்றவாரு தன் வாட்சை பார்த்தாள் அனு.

“இல்ல, அனு…இன்னிக்கு லேட் ஆய்டுச்சு…”

“ஹய்யயோ, அப்ப இன்னிக்கு மழை தான்…ஜர்கின் கூட எடுத்துட்டு வரலையே…சரி, சரி, எங்க அந்த கவி கொரங்கு? இன்னிக்கும் ஃபர்ஸ்ட் பீரியட் கட்டா?”

“என்னது நான் கொரங்கா? நீ தான் பன்னி…” எங்கிருந்தோ தீடிரென்று அங்கு வந்து நின்றாள் கவிதா.

இளமதி, “காலங்காத்தால ஆரம்பிக்காதீங்க…ஆமா அனு! அது…அந்த பாலக்குமார் தான? நம்ம சீனியர்?”

“ஆமா இளம்ஸ்…நான் தான் சொன்னனே, அவனும் இப்ப எங்க ஃப்ளாட்ல தான் இருக்கான்…”

“ஓஹ்ஹ்…” எதுவும் பேசாமல் ஒரு வித சிந்தனையுடன் இளமதி வகுப்பறையை நோக்கி நடக்கவும், கவிதாவும், அனுவும் எப்பொழுதும் போல் ஒருவர் காலை ஒருவர் வாரிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் அவளை தொடர்ந்தனர்.
சில வினாடிகள் பொறுத்து இளமதி, “அனு…நீ ஏன் அவனை வண்டில எல்லாம் கூட்டிட்டு வர?”

அனு, “அவன் பஸ்ல தான் வரனும்னு சொன்னான்…சரின்னு நான் தான் தினமும் என்னோடயே வந்துடுன்னு சொன்னேன்…”

பெரும் அதிர்ச்சி அடைந்தவளாய் இளமதி, “என்னது??? தினமுமா? ஏன் அனு இப்படி எல்லாம் பண்ற? ஏதோ ஒரு நாளைக்குன்னா பரவாயில்ல…எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க அனு, சில பேர் இத தப்பா கூட பேசுவாங்க…”

அனு, “என்னது? தப்பா பேசுவாங்களா? What the…இளம்ஸ்…come on!!! This is 21st century…ஒருத்தனுக்கு லிஃட் குடுத்தா தப்பா? I just…just…don’t understand”

“யு.யெஸ் இல்ல அனு இது…ஒரு பொண்ணும், பையனும் பேசிக்கறது கூட தப்புன்னு சொல்ற ஊர்ல இருந்து கூட இங்க வந்து படிக்கறவங்க இருக்காங்க…அவங்கள சொல்லியும் தப்பில்ல…நாம தான ஒழுங்கா இருக்கனும்? சரி, ஒரு பேச்சுக்கு சொல்றேன்…இதயே சில பேர் கதை கட்டி பேசுனா, என்ன பண்ணுவ?”

“ஹ்ம்ம்ம்… பல்ல ஒடப்பேன்…”

கவிதா “அனு! அதுக்கு பக்கத்துல டென்டல் காலேஜ் இருக்கு…அங்க படிச்சிருக்கனும்” உடனே, சூழல் மறந்து அனுவும், கவிதாவும் சத்தம் போட்டு சிரிக்க,
இளமதி, “எப்ப பாத்தாலும் சிரிப்பு தானா? இங்க பாரு அனு! உன் நல்லதுக்கு தான் சொல்றேன்…இனிமே அவனுக்கு லிஃட் எல்லாம் குடுக்காத…சொல்லிட்டேன்” என்ற படி விடு விடு என்ற நடக்க ஆரம்பித்து விட்டாள்.

குழம்பிய முகத்துடன் அனு, “கவி!!! Whats her problem?
கவிதா, “எல்லாம் பேஸிக் ஜீன் ப்ராளம் தான்…ரெண்டு தமிழ் professors பெத்த நம்ம டீச்சர் அம்மா, இப்படி பேசலைன்னா தான் அதிசயம்…”
அனு, “ஹய்யோ…டீச்சர் திரும்பி நின்னு மொறைக்குது கவி…வா சீக்கரம்”
ஆனால் அங்கிருந்து நகராமல் விஷமமான முகத்துடன் கவிதா, “ஹே….ஒரு வேளை இப்படி இருக்குமோ? Actually, இளம்ஸ் is J on you…”
“You mean Jealous?”
“ஆமா…அந்த பாலா பையன் வேற பாக்கறதுக்கு கொஞ்சம் நல்லா இருக்கானா…” என்று சொல்லி விட்டு சிரிக்க ஆரம்பித்தாள் கவிதா.
அனு, “என்னது? நம்ம சாமியார் இளமதியா? கவி! என்ன வார்த்தை சொல்லி விட்டாய்? அபச்சாரம், அபச்சாரம்…ஹே…இரு, இரு…என்ன சொன்ன…என்ன சொன்ன? அப்படியே சைடு கேப்ல அவன் நல்லா இருக்கான்னு சொல்ற? ஹ்ம்ம்…சொல்லு, சொல்லு, என்ன நடக்குது? ஹாங்?” மறுபடியும், சத்தமாய் ஒலித்தது அவர்களது சிரிப்பொலி.
சற்று தூரம் சென்று விட்ட இளமதி திரும்பி நின்று, “அங்க என்ன சிரிப்பு? க்ளாஸுக்கு லேட் ஆச்சு…சீக்கரம் வாங்க” என்று அதட்டவும், வேகமாக நகர்ந்தனர் இருவரும்.

இவர்கள் இப்படி என்றால், அதே நேரத்தில், நான்காம் ஆண்டு வகுப்பறையில்...
“டேய் பாலாஆஆ!!! என்னடா? நம்ம சானியா மிர்ஸா உனக்கு லிஃட்டு எல்லாம் குடுக்குது போல?” ஒரு நாள் கல்லூரிக்கு, தெரியாத் தனமாக ஸ்கர்ட் அணிந்து கொண்டு சென்றதால், அப்படி ஒரு பட்டப் பெயர் அனுவுக்கு, பசங்க மத்தியில்.

“லிஃட்டு என்னடா பெரிய விஷயம்? இந்த லீவ்லயே அவள கரெக்ட் பண்ணிட்டேன்…” சொல்லி விட்டு, ஸ்டைலாக காலரை தூக்கி விட்டுக் கொண்டான் பாலா.

இருங்க, இருங்க…இப்படி சொன்னதால, பாலாவ பத்தி தப்பா நினைச்சுடாதீங்க. ஏதோ நண்பர்கள் மத்தியில், ஒரு கெத்து காட்டுவதற்காக, அவன் அப்படி சொல்லி விட்டான். மற்றபடி, அவன் ரொம்ப மோசமான பையன் எல்லாம் இல்லை. கொஞ்சம் பொறுப்பில்லாத, எதையும் ஒரு ஜாலிக்காக செய்யக் கூடிய, சாதாரணப் பையன் தான்.

ஆனால் இந்த விஷயம் தெரிந்ததும், அனு செய்த காரியம் இருக்கே…’இந்த பொண்ணு எதையும் வேகத்துல செஞ்சிட்டோ, பேசிட்டோ அப்புறம் தான் யோசிப்பா…” என்று இளமதி சொல்வது கூட சரி தாங்கற மாதிரி இல்ல பண்ணிட்டா?

[தொடரும்]

Tuesday, October 7, 2008

3rd year - 2

பாகம் 1

கல்லூரியை நோக்கி நடந்தவாரே, சென்ற ஒரு வாரத்தில் அனுவிடம் தெரிந்த மாற்றங்கள் குறித்து, கவலையோடு சொல்லிக் கொண்டிருந்தாள் இளமதி.

கவிதா, “என்ன இளம்ஸ்? இப்ப வந்து சொல்ற? முன்னாடியே எனக்கு கால் பண்ணி சொல்லி இருக்கலாம்ல? போ…” கவிதா வேறு எக்ஸாம் ஹால் என்பதாலும், உடனே ஊருக்கு கிளம்பிவிட்டதாலும் அவளுக்கு அனுவை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை.

“என்னை என்ன பண்ண சொல்ற கவி? லாஸ்ட் எக்ஸாம் அன்னிக்கு, ஹால விட்டு வெளிய வந்ததுமே, உன்கிட்ட அவ சீக்கரமா போனத பத்தி சொல்ல ஆரம்பிச்சேன்…நீ தான் எதுவும் கேக்கல, அப்புறம் உடனே ஊருக்கு வேற ஓடிட்ட…”

“சரி விடு, இப்ப டிபார்ட்மெண்ட் போய் பாப்போம்…”

எதிரில் யார் வருவது என்று கூட பார்க்காமல் சென்று கொண்டிருந்த அவர்களை நிறுத்தினாள், அவர்களின் வகுப்புத் தோழி சுமித்ரா. வம்பு பேசுவதென்றால், கரும்பு சாப்பிடவது போல சுமித்ராவுக்கு.

“ஹேய் இளமதி…கன்கராட்ஸ்…நீ தான் க்ளாஸ் ஃபர்ஸ்டாமே…”

“தாங்ஸ்…” என்று கூறி உடனே அங்கிருந்து நகரப் பார்த்தாள். கவிதாவோ நிற்கக் கூட இல்லை.

“யேய்…இரு, இரு, நம்ம அனு பாத்தியா? இவ்ளோ நாளா க்ளாஸ் ஃபர்ஸ்டு வாங்கிட்டு, இப்ப அரியர்ஸ் விழுந்துடுச்சு…அனு போய் கப் வப்பான்னு யாருமே எதிர் பாக்கலைல்ல? எல்லாம் அந்த பாலானால தான், இப்ப என்னடான்னா, அதுவும் புட்டுகிச்சு…”

இளமதி பதறிப் போய் “என்ன சுமித்ரா சொல்ற?”
எட்ட நின்ற கவிதாவும், உடனே அவர்கள் அருகில் வந்தாள்.

“உங்களுக்கு தெரியாதா? இன்னிக்கு காலைல தான் யாரோ பேசிகிட்டாங்க…எதோ ப்ரச்சனையாம்…அவங்களே, இனிமே அவ்ளோ தான்னு முடிவு பண்ணிட்டாங்களாம்!”

கவிதாவும், இளமதியும் இதற்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் விக்கித்து நின்றார்கள். அவர்கள் எதிர் பார்த்தது தான், நடக்க வேண்டும் என்று ஆசைப் பட்ட ஒன்று தான். இருந்தாலும், அனுவின் நிலையை நினைத்துப் பார்த்தால், சிறிது கலக்கமாகத் தான் இருந்தது. இவ்வளவு பிரச்சனைக்கு நடுவில், நாமும் வேறு அவளோடு கோபித்துக் கொண்டு பேசாமல் இருந்தோமே, என்று நினைத்து, கவிதாவின் கண்களில் நீர் முட்டியது.

---

HOD சண்முகத்திற்கு சிறிதல்ல, பெரும் கலக்கமாகவே இருந்தது. விரக்தியின் உச்சியில், தன்னிலை அறியாமல் கத்திக் கொண்டு நின்ற சிறு பெண்ணிடம் கோபம் காட்டி அவளை சாந்தப் படுத்துவதா, இல்லை சமாதானமாக பேசிப் பார்ப்பதா என்று விளங்காமல் குழம்பித் தவித்தார். “எனக்கு ஹாஸ்டல் பிடிக்கல…இந்த காலேஜ் பிடிக்கல…இந்த ஊரும் பிடிக்கல…எதுவுமே பிடிக்கல…” மீண்டும் ஒரு முறை அவள் சொன்ன வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ள முயற்சித்து தோற்றுப் போனார்.

“அனு…பாட்டி போனப்புறம் உன்னை ஃபோர்ஸ் பண்ணி ஹாஸ்ட்டல்ல சேத்தது உனக்கு பிடிக்கல, புரியுது…valid reason…ஆனா, இந்த காலேஜ் உன்னை என்ன பண்ணுச்சு? இல்ல, இந்த ஊர் தான் என்ன பண்ணுச்சு?”

“யு.யெஸ் ல இல்லாத ஸ்கூலா, காலேஜா? அப்புறம் எதுக்கு என்னை கொண்டு வந்து இங்க தள்ளினாரு எங்கப்பா? சொல்லுங்க அங்கிள், சொல்லுங்க?”

“இவ்ளோ நாள் இதெல்லாம் பிடிச்சு தான இங்க இருந்த? இப்ப மட்டும் என்ன வந்துச்சு? யு. யெஸ் ல இத விட பெரிய பெரிய காலேஜ் இருக்கு, வேர்ஸிட்டீஸ் இருக்கு…ஆனா, நம்ம காலேஜ், தமிழ் நாட்லயே, one of the finest. இங்க தான், நான், உங்கப்பா, உங்கம்மா எல்லாரும் படிச்சோம்…இங்க படிப்ப மட்டும் இல்ல, வாழ்கையும் கத்துகிட்டோம்…அந்த வயசுல அவனுக்கு கிடச்ச அனுபவங்கள், படிப்பினைகள், சந்தோஷங்கள் எல்லாத்தையும் நீயும் அனுபவிக்கனும்ன்னு குழந்தைத் தனமா ஆசைப்பட்டான் உங்கப்பன்…அது கூட ஒரு நியாயமான ஆசை தானே? அதுல தப்பெதும் இருக்கறதா எனக்கு தோனல…He has given you the best!!!”

“yeah…given me the best…ஹா…அங்கயே இருந்தா எங்க பொண்ணு ரொம்ப ஊர் சுத்துவாளோன்னு பயந்துட்டு, 10th முடிச்சவுடனே, என் மேல நம்பிக்கை இல்லாம என்னை இங்க அனுப்பி வச்சுருக்காரு”

“அனு! பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கனும்னு தான் எந்த அப்பாவும் நினைப்பாங்க…அதையா தப்புன்னு சொல்ற? இதுக்கு மேல என்னால உன்ன ஹேன்டில் பண்ண முடியாது…உங்கப்பா கிட்ட இப்ப தான் பேசினேன்…கொஞ்ச நேரத்துல கூப்பிடுவான்…நீயே அவனோட பேசிக்கோ…”

அவர் சொல்லி முடிப்பதற்குள் அவரது அலைபேசி அழகாய் பாடியது.

“ரகு தான்…நீயே பேசு…”

சிறிது நேரத்திற்கு பின் அலைபேசியோடு திரும்பி வந்த அனு, “அப்பா உங்ககிட்ட பேசனும்ன்னு சொல்றாரு”

எதிர்முனையில் ரகுநாதன், “சண்முகா…என்ன பண்றதுன்னே தெரியலப்பா…கொஞ்ச நாளாவே அவ சரியா பேசலை, எனக்கு ரொம்ப பயமா இருக்கு…ஷீலா வேற அழுக ஆரம்பிச்சுட்டா…”

“என்ன ரகு இது? நான் எதுக்கு இருக்கேன்? நான் பாத்துக்கறேன்…”

“இல்ல சண்முகா…போதும், படிப்பு அது இதுன்னு தனந்தனியா அவள விட்டு வச்சிருந்தெல்லாம் போதும்…ரொம்ப டிப்ரெஸ்டா இருக்கா…எங்கம்மா போனது இவ்ளோ தூரம் பாதிச்சிருக்குன்னா, நாங்க கூட இல்லாதது தான்ப்பா காரணம்…தப்பு பண்ணிட்டேன்…”

அது மட்டுமே காரணமில்லை என்று நண்பனிடம் எப்படி சொல்வது என்று தயங்கிக் கொண்டிருந்தவரிடம் அடுத்த குண்டை தூக்கிக் போட்டார் ரகுநாதன்.
“நான் டிக்கட் பாக்கறேன்…உடனே வந்து அவள கூட்டுட்டு போறேன்…நீ கொஞ்சம் டீ.ஸி க்கு மட்டும் ஏற்பாடு பண்ணிடுப்பா…”

“என்னது டீ.ஸீ யா? என்னப்பா நீயும்? அவ தான் ஏதோ சொல்றான்னா, உனக்கென்ன பைத்தியமா?”

“இல்ல சண்முகா…என் பொண்ணு இவ்ளோ டிப்ரெஸ்டு ஆகி நாங்க பாத்ததில்லை…அவ படிப்பு முக்கியம் தான், ஆனா அத விட அவ தான் எங்களுக்கு முக்கியம்…படிப்ப எப்ப வேணா கண்டின்யு பண்ணிக்கலாம்…”

அரை மனதாக சண்முகமும் நண்பனிடம் விடை பெற்று, இனைப்பை துண்டித்தார்.
பின்பு அனுவிடம், “சரி ஓகே அனு…யோசிச்சு முடிவு பண்ணுவோம்…ஹ்ம்ம்… இப்ப மணி என்ன? பன்னன்டா? ஆண்ட்டிய லஞ்சு ரெடி பண்ண சொல்றேன்…சாப்டுட்டு ரெஸ்ட் எடு, இப்ப ஹாஸ்டலுக்கெல்லாம் போக வேண்டாம்.”

“இல்ல அங்கிள்…வந்து…எனக்கு எங்க ஃப்ளாட்டுக்கு போகனும்…”

“அங்க போய் என்ன பண்ண போற?”

“இல்ல, கிளம்பறதுக்கு முன்னாடி பாட்டியோட திங்ஸ் எல்லாம் கொஞ்சம் எடுக்கனும்…அதான்…”

“எனக்கு வேற 1.30 டூ 5.30 ஒரு மீட்டிங் இருக்கேம்மா…சரி ஒன்னு பண்ணுவோம்…நீ நம்ம வீட்ல போய் சாப்டுட்டு ரெஸ்ட் எடு, 5.30 க்கு நானே உன்னை அங்க கூட்டிட்டு போறேன்…”

“இல்ல அங்கிள்…நானே போறேன்…ஆண்ட்டி கிட்ட டின்னருக்கு வரேன்னு சொல்லிடுங்க…”

மீண்டும் மீண்டும், கிளிப்பிள்ளை போல் சொன்னதையே சொல்பவள் மேல் எரிச்சல் மூண்டது அவருக்கு, கடுமையான குரலில், “நான் தான் உன்ன கூட்டிட்டு போறேன்னு சொல்றன்ல? அப்புறம் எதுக்கு அங்க தனியா போகனும்னு பிடிவாதம் பிடிக்கற?”

“இல்லல்ல, நான் கவிதா, இளமதி யாரையாச்சும் கூட்டிட்டு போலாம்னு தான் இருக்கேன்…”

“சரி, உன் இஷ்டம்…But remember, sharp 5.30, I am expecting you here…ok?”

“ஓகே அங்கிள்…”

---

அவசர அவசரமாக, படிகளில் ஏறி அவர்களது டிபார்ட்மெண்ட் தளத்துக்கு சென்ற இளமதியும், கவிதாவும், அந்த தளம் முழுக்க தேடிப் பார்த்தும், அனுவையோ HOD யையோ கண்டு பிடிக்க முடியாமல் அனுவை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர்.

“The subscriber you are trying to reach is currently switched off”

---

மணி, 12.15

ஷோபா அபார்ட்மெண்ட்ஸ், உயர்ந்து கம்பீரமாய் நின்றிருந்த அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் அமைந்திருந்த அவர்களது ஃப்ளாடிற்குள் நுழைந்தாள் அனு.

ஐந்து வருடங்களாக, அவளும் அவள் பாட்டியும் வாழ்ந்த, இல்லை இல்லை சிரித்து, மகிழ்ந்து, ஆடி, பாடி, விளையாடி, குதூகலித்த வீடு.
ஆனால், இன்று…அதற்கு சாட்சியாய் இருந்தது அந்த வீட்டின் செங்கல்கள் மட்டுமே!

உடலை துறந்த பின்னும், அனு நெஞ்சில் அன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருந்த அவள் பாட்டி, அழகாக சிரித்துக் கொண்டிருந்தார், சுவற்று ஆனியில் தொங்கியவாறே.

அனு! ஆறு மாதங்களுக்கு முன்பு, கவலை என்றால் என்னவென்றே தெரியாமல், பட்டு சிறகை விரித்து, சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி… அப்பா, அம்மா, பாட்டியின் செல்லக்கட்டி…க்ளாஸ் டாப்பர்…எல்லோரும் பார்த்து ஏக்கப் படும் அளவிற்கு கவிதா, இளமதியின் நட்புக்கு சொந்தக்காரி.

ஆனால் இன்று, காதல் தோல்வியில் சுக்கு நூறாக உடைந்து போன இதயம்… பாட்டி இல்லாத வெறுமை… அப்பா, அம்மா உடன் இல்லாத தனிமை…அது வரை வாழ்நாளில் அனுபவப் பட்டிராத பரிட்சை தோல்வி…நண்பர்களை பிரிந்த துயரம்…” இப்படி அத்தனை கழிவிரக்கங்க எண்ணங்களும், இரக்கமே இல்லாமல் அவளை ஆட்கொள்ள, டிப்ரஷனின் உச்ச கட்டதில் அனு!

ஆனால், இது எதுவுமே அப்போது அவள் மனதில் ஓடவில்லை. அவள் மனதில் அப்போது இருந்ததெல்லாம் ஒரே ஒரு கேள்வி தான்.

“மணி இப்ப பன்னன்டே கால்...மறுபடியும் என்னை 5.30 க்கு தான் தேடுவாங்க…அதுக்குள்ள சாகனும்னா, அதுக்கு என்ன வழி?”

சாகனும்ன்னு முடிவெடுக்கற அளவுக்கு அப்படி என்ன தான் அவளுக்கு பிரச்சனை? பெருசா, ஒரு பிரச்சனையும் இல்லங்க…எல்லாருக்கும் சாதாரணமா வர பிரச்சனைக தான். ஆனா, எல்லாமே ஒரே சமயத்துல சேந்து வந்ததுல, அனு ரொம்பவே சோந்து தான் போய்ட்டா பாவம்…

[தொடரும்]

Sunday, October 5, 2008

3rd year - 1

"ஹேய்!!! ரிஸல்ட் வந்துடுச்சு… ரிஸல்ட் வந்துடுச்சு…" யாரோ உச்சஸ்தாதியில் கத்தவும், ஹாஸ்டல் முழுதும் பற்றிக் கொண்டது பரபரப்புத் தீ!

’தட தட தட’ ஹாஸ்ட்டலே அதிரும் அளவிற்க்கு சத்தம். விரித்து விட்ட கூந்தலோடு ஓடிக் கொண்டிருந்தாள் கவிதா.

"கவி! மெதுவா... இப்ப என்ன அவசரம்?" அதட்டும் குரலில், ஆனால் அமைதியின் திருவுருவாய் இளமதி.

"இல்ல இளம்ஸ், அப்புறம் சிஸ்டமே கிடைக்..."

அவர்களை கடந்து சென்ற அனுவை அப்போது தான் பார்த்தாள்...மேலே எதுவும் பேசாமல் அமைதியாய் அந்த இடத்தை விட்டு வேகமாய் நகர்ந்தாள் கவிதா.

இளமதி சற்றே தயங்கி நின்று, "அனு...செம் ரிஸல்ட்ஸ் வந்தடுச்சு...வா போய் பாக்கலாம்"

அவர்களை பார்த்தது போல் எந்த வித முகமாற்றமும் காட்டாமல், இளமதி பேசியது காதில் விழாதது போல், ஏதோ கனவில் நடப்பது மாதிரி மாடிப் படிகளில் ஏறலானாள் அனு.

முகம் கடுகடுக்க கவிதா, "உனக்கு அறிவே இல்லையா இளம்ஸ்? இப்ப எதுக்கு அவ கிட்ட போய் பேசி இப்படி வாங்கிக் கட்டிக்கற? அவ நம்மல மதிச்சாளா பாரு?"

இளமதி, "இல்ல கவி...உனக்குத் தெரியாது...அனு ஒரு வாரமாவே ரொம்ப ஒரு மாதிரயா இருந்தா..."

"அவ எப்படி இருந்தா உனக்கென்ன? “

“கவி…அவ நம்ம ஃபெரண்டு்!!!”

“ஹ்ம்ம் பெரிய ஃபெரண்டு…”

“சரி, சரி மறுபடியும் ஆரம்பிக்காத, வா போலாம்…”

எப்போதும் போல, இளமதியும் கவிதாவும் எதிர்பார்த்த மதிப்பெண்களே வாங்கியிருந்தாங்க.

நிம்மதி பெருமூச்சுடன் அந்த வின்டோவை மூடப் போன கவிதாவை, தடுத்தாள் இளமதி.“ஹே கவி…ஒரு நிமிஷம்…க்லோஸ் பண்ணிடாத…இரு அனுவோட மார்க் என்னன்னு பாப்போம்…”

அவளை முறைத்து விட்டு, அந்த வின்டோவை க்லோஸ் செய்ய போனவளின் கையை பிடித்து நிறுத்தி, மெளஸை பிடிங்கினாள் இளமதி.

அனுவின் ரோல் நம்பரை அடித்ததும், திரையில் தெரிந்த அனுவின் மதிப்பெண்களை பார்த்துக் கொண்டே வந்தர்வர்களுக்கு, கடைசியில் இருந்த மதிப்பெண்னை பார்த்ததும், ஒரு நிமிடம் அவர்கள் கண்களையே சந்தேகப்பட்டனர்.

எல்லா பாடங்களிலும் ஓரளவு நல்ல மதிபெண்களே இருந்த போதும், கடைசி பரிட்சையில் மட்டும், F என்று இருந்தது.

கவிதாவின் முகத்தில் ஆச்சர்யம், கூடவே அதிர்ச்சியும். ஆனால் இளமதியின் முகத்திலோ எப்போதும் இருக்கும் அமைதி, அதில் கொஞ்சம் வருத்தமும் தோய்ந்திருந்தது.

கவிதா, “என்ன இளம்ஸ்? F ன்னு காட்டுது…அனு நம்பர் தான்…ஏதோ தப்பா இருக்குமோ?”

“இல்ல கவி, அனு மார்க் தான்…” அன்று ஒரு மணி நேரத்திலேயே எக்ஸாம் ஹாலை விட்டு அரக்கப் பரக்க ஓடிய அனுவின் குழம்பிய முகம் இளமதி கண் முன்னால் ஒரு முறை தோன்றி மறைந்தது.

“வா கவி, போய் முதல்ல அனு எங்கன்னு பாப்போம்…”

அறை எண் 306, திறந்தே தான் கிடந்தது…ஆனால் அனுவை தான் காணவில்லை. அவளை அழைப்பதற்காக, கைபேசியை எடுத்த கவிதாவை நிறுத்தியது, அந்த ஜூனியர் பெண்ணின் குரல்.

“கவிதாக்கா…அனுக்காவையா தேடறீங்க? HOD வரச் சொன்னார்ன்னு நான் தான் இப்ப வந்து சொன்னேன், காலேஜுக்கு தான் போயிருப்பாங்க…”

----

பெரு மழையாய் பூமிக்கு வருகை தரும் முன், மை தீட்டி ஆயத்தமாகிக் கொண்டிருந்தது மேகம். போதாகுறைக்கு, துணைக்கு பலமான காற்றை வேறு அழைத்துக் கொண்டது. காற்றின் தூதுவனாய், எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு காய்ந்த சருகு, அனு மேல் பட்டு கீழே விழுந்தது.

தூக்கத்தில் நடப்பது போல், கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்த அனு, அந்த உலகத்திலே இல்லாதை போல் ஒரு இலக்கே இல்லாமல் நடந்து, இல்லை இல்லை மிதந்து சென்று கொண்டிருந்தாள்.

“No anu, I am not ready for any commitment now…”

“இப்ப கூட சொன்றேன்…நான் உன்ன லவ் பண்றேன்…அதுக்காக…உன்னை கல்யாணம் பண்ணிக்கனும் எந்த அவசியமும் இல்லயே…”

பாலா சொன்னதெல்லாம் மறுபடியும், மறுபடியும் அவள் காதுகளில் நாராசமாய் ஒலித்தது. அப்போது மட்டும் அல்ல, எவ்வளவு முறை மறக்க முயன்றும், கடந்த வாரம் முழுக்க, அவள் என்ன வேலை செய்தாலும், தூங்க முயற்சித்தாலும் கூட, அவனின் குரல் அவள் தலைக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே தான் இருந்தது.

அன்று காலையில் அவனை ஹாஸ்டல் ஜன்னல் வழியே பார்த்த போது கூட, அவளை பார்ப்பதற்காக தான் வந்திருக்கிறான் என்று பைத்தியம் போல எண்ணி எப்படி எல்லாம் பூரித்துப் போனாள்?

அவளை பார்த்த போது கூட, எதுவுமே நடக்காதது போல் அவன் பேசவும், அனு ஒரு நிமிடம் இந்த உலகத்தையே மறந்தாள். தான் தொலைத்து விட்டதாய் நினைத்திருந்த சந்தோஷம், புதையலாய் மீண்டும் கிடைத்ததை போல உணர்ந்தாள்.

“ஹேய் அனு! ஒரு வாரம் ஃபோன் எடுக்கல, கால் பண்ணல…நான் கூட அவ்ளோ தான்னு நினைச்சுட்டேன்…க்ரேட் யார்…நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?”

பல வித உணர்சிகள் பூக்கோலம் இட்டது அனுவின் முகத்தில், “எனக்கு தெரியும்…எனக்கு தெரியும் பாலா…இந்த ஒரு வாரத்துல நீ என்ன மிஸ் பண்ணுவேன்னு…” மேலே பேச முடியாமல் தினரிய அனுவை பார்த்ததும், மீண்டும் பழைய பல்லவியா என்றவாறு, “ஹே…வெய்ட்…வெய்ட்…நான் இப்பயும் அதே தான் சொல்றேன்…என்னோட ஸ்டான்ட விட்டு இப்போதைக்கு மாறதா இல்ல, …புரிஞ்சுக்கோ அனு…எவ்வளவோ இருக்கு வாழ்க்கைல என்ஜாய் பண்ண, அத விட்டுட்டு, இப்பயே கல்யாணம், அது இதுன்னு உயிர வாங்காத, ப்ளீஸ்…”

மழை தூர ஆரம்பித்ததை கூட கவினிக்காமல், நனைந்து கொண்டே எங்கோ சென்று கொண்டிருந்த அவளை தடுத்து நிறுத்தியது HOD சண்முகத்தில் குரல்.

“அனு! எங்க போய்ட்டு இருக்க? சரி சரி, வா என் ரூமுக்கு போய் பேசலாம்”

“அனு! ரிஸல்ட்ஸ் பாத்தியா?”

“---“

“உன்ன தாம்மா கேக்கறேன்…ரிஸல்ட்ஸ் பாத்தியா?”

குரலை உயர்த்தி அவர் கேட்கவும், அனு மெதுவாக, “என்ன ரிஸல்ட்ஸ் அங்கிள்?”

“என்ன ரிஸல்ட்ஸா? நீ இன்னும் பாக்கவே இல்லயா? செம் ரிஸல்ட்ஸ் தான் சொல்றேன்…ராமமூர்த்தி ஸார் வந்து சொல்லவும், ஒரு நிமிஷம் அப்படியே தூக்கி வாரி போட்டுடுச்சு…ஐஞ்சு செமஸ்டர்லையும், க்ளாஸ் ஃபர்ஸ்ட், இப்ப ஒரு சப்ஜட்ல பெயில் ஆகுற அளவுக்கு என்ன தான் நடந்துச்சு?”

அனு தலையை குனிந்து கொண்டு எதுவும் பேசப் பிடிக்காதது போல் நிற்கவும், “சொல்லு அனு…சொல்லு, எக்ஸாம் அன்னிக்கு ஒரு மணி நேரத்துல போய்ட்டியாம்…”

அனுவிடம் இருந்து அதற்கு மேல் பதிலை எதிர்பார்க்காதவர் போல சண்முகமே தொடர்ந்தார், “பாலான்னு ஒரு ஃபைனல் இயர் பைனனோடு வேற சுத்தறியாம்? இதெல்லாம் என்ன அனு? இது வரைக்கும் ஒரு HOD மாதிரி உன்கிட்ட பேசியிருக்கேனா? You are my best friend’s daughter!!! எனக்கும் பொண்ணு மாதிரி தாம்மா…first, understand that I am answerable to your dad!!! ரகு வந்து என்கிட்ட கேட்டா, நான் என்ன பதில் சொல்றது? என்ன ப்ரச்சனை உனக்கு? Give me one solid reason அனு!!!”

வெடித்திச் சிதறும் எரிமலை போல், “எனக்கு ஹாஸ்டல் பிடிக்கல…இந்த காலேஜ் பிடிக்கல…இந்த ஊரும் பிடிக்கல…எதுவுமே பிடிக்கல…என்னால இதுக்கு மேல முடியாது, என்ன விட்டுடுங்க…”

அதற்கு மேல் பேச முடியாமல், கடந்த ஒரு வாரமாய் நெஞ்சில் தேக்கி வைத்திருந்த பாரமெல்லாம் அழுகையாய் ஊற்றெடுத்தது. உடைந்த கண்ணாடித் துண்டு போல சில்லு சில்லாய் உடைந்திருந்தது அவளது தன்னம்பிக்கை.

[தொடரும்]