Sunday, October 26, 2008

3rd year - 7 [Last part]

பகுதி 7

அது வரை அனு அந்த டைரியை பார்த்ததே இல்லை. அப்பா செல்லும் முன், வீட்டில் பல பொருட்களை இடம் மாற்றியது ஞாபகம் வந்தது. பாட்டியின் குண்டு குண்டு கையெழுத்தை பார்த்ததுமே கண்டி பிடித்து விட்டாள் அனு. பாட்டியோட டைரியா என்ற ஆவல் தலை தூக்க, கையில் எடுத்த கத்தியை டேபிள் மீது வைத்தாள்.

மிக சில பக்கங்களில் மட்டும் ஏதோ எழுதி இருந்தது. அப்படியே அதை புரட்டிப் பார்க்கும் போது, அனு குட்டி என்று ஏதோ ஒரு வரி கண்ணில் பட, முதல் வரியில் இருந்து படிக்க ஆரம்பித்தாள்.

“இவங்க தான்…என் அன்பு மனைவி…என் ஆருயிர் தோழி…” யாரா இருந்தாலும், அவங்ககிட்ட என்னை இப்படி அறிமுகப் படுத்தும் போது அவர் கண்கள்ள தெரிஞ்ச சிரிப்பும், உண்மையும், இன்னும் என் கண்ல அப்படியே நிக்குது.

“வீட்டுக்காரர் இறந்து இருபது நாள் தான் ஆச்சு,அதுக்குள்ள இந்தம்மா கிளப்பிடுச்சு பாரு…எல்லாம் முன்னாடியே ரெடி பண்ணியே வச்சுருக்கும் போல…” இளக்காரமாய் பக்கத்து வீட்டுப் பெண் சொன்னது கூட சிரிப்பு வரலை எனக்கு, “அம்மா…நிஜமா நீங்க என்னோடவே வந்தர்றீங்களா? Thanks மா…நான் கூட நீங்க எங்க அப்பா இருந்த வீட்ல தான் நானும் இருப்பேன்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன்” ன்னு என் மகனே சொன்னத நினச்சா தான் சிரிப்பு வருது.

அவர் போய்டாரு…முப்பத்திரெண்டு வருஷம் அழகா வாழ்ந்தோம். அதுக்காக? அந்த வீட்ல தான் அந்த நினைவுகள் எல்லாம் இருக்குன்னு அர்த்தமா? என் மனசுல எல்லாமே பத்திரமா இருக்கும், எந்த ஊர் போனாலும்…போனவங்கள நினச்சு உருகி, இருக்கறவங்கள கஷ்டப் படுத்தறது தான் இந்த ஊர்ல பாசமா?

அவர் இருந்த வரைக்கும் தான், ’நான் வீட்டை விட்டுட்டு வர மாட்டேன்…எங்க பரம்பரை வீட்ல தான் என் உயிர் போகும்’ ன்னு பிடிச்ச பிடிவாதாத்தால, மகன், மருமக, பேத்தி இவங்களை எல்லாம் விட்டுட்டு இருந்துடேன். இனி என்ன? எனக்காக இருக்கறவங்களுக்காக, ஏன் எனக்காகவும் கூட சந்தோஷமா வாழ்வேன்.

அவர மாதிரி பரம்பரை வீட்ல பக்கத்துல யாருமே இல்லாம சாகறத விட, ஏதோ ஒரு ஊர்ல, ஏதோ ஒரு வீட்ல, என் அனு குட்டி மடில சந்தோஷமா சாவேன். "

டைரியின் மேல் ஒரு துளி கண்ணீர் சொட்டியது. அதற்கு மேல் படிக்க முடியாமல் டைரியை மூடி வைத்து விட்டு, அப்படியே தரையில் அமர்ந்து சுவர் மேல் சாய்ந்தாள்.

கேவலம் நாலு மாசப் பழக்கம், அந்த பாலா…அவன் ஏதோ சொன்னான்னு சுக்கு நூறாய் உடைந்து போனோமே…பாட்டி எப்படி முப்பது வருஷம் பழகிய தாத்தாவை விட்டு இவ்வளவு சந்தோஷமா, அதுக்கப்புறம் இருபது வருஷம் வாழ்ந்துருக்காங்க? ’போனவங்கள நினச்சு உருகி, இருக்கறவங்கள கஷ்டப் படுத்தறது’ இத தான, நானும் இப்ப பண்ண இருந்தேன்…எனக்கே, எனக்காக இருக்குற அம்மா, அப்பாவ, கோவப் பட்டு கத்தி, குத்தி கிழுச்சு, இப்ப அவங்கள ஒரே அடியா விட்டுட்டு போற அளவுக்கு துணிஞ்சிட்டனே…
தன் கண்களை பார்த்த வண்ணம், தன் மடியிலேயே உயிரை விட்ட பாட்டியின் கண்கள் ஒரு கனம் அவள் மனக்கண் முன் தோன்றியது.
---
மறுநாள் விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரி தொடங்க இருந்ததால், அன்று மாலையே அடுத்த நாளுக்கு வேண்டியதை தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் இளமதி. கவிதாவோ, ஊரில் இருந்து கொண்டு வந்த பையை கூட பிரிக்காமல், ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஜன்னல் கம்பிகளின் ஊடே, மேற்கே விரிந்து கிடந்த செவ்வானப் படலம், அவள் கண்களிளும் பிரதிபளித்துக் கொண்டிருந்தது.

“கவி!” என்ற இளமதியின் அழைப்பு, கவிதாவின் விழி நீரை தாங்கி நிற்கும் அணை போல், கண்ணீரை அவள் கண்களுக்குள்ளேயே தடுத்து நிறுத்தியது.

தோழியின் கண்ணீர் திரையிட்ட கண்களை பார்த்ததும், மெல்ல அவளருகே சென்ற இளமதி, “என்ன ஆச்சு கவி?” என்றவாறே ஆதரவாய் அவள் கரம் பற்றிக் கொண்டாள்.

“போன வருஷம் முதல் நாள், நானும் அனுவும், கையை கோத்துகிட்டு, எப்படி சிரிச்சுகிட்டு க்ளாஸுக்கு ஓடி வந்தோம் தெரியுமா? நாளைக்கு…ஃபைனல் இயர் முதல் நாள்…” அதற்கு மேல் பேச முடியாமல் திணறிய கவிதாவையும், இவள் அழுதால் எப்படி தேற்றுவது, என்று தெரியாமல் தர்மசங்கடத்தில் தவித்த இளமதியையும், மீட்பதற்காகவே ஒலித்தது போல் இருந்தது, அவர்களுது விடுதி தோழி ஒருத்தியின் குரல்.

“இளமதி!! இளமதி! உன்ன HOD கூப்டறார். கீழ ஆஃபிஸ் ல வெய்ட் பண்ணிட்டு இருக்காரு”
திடீரென்று HOD அழைக்கவும், என்னவோ ஏதோ என்று கவிதாவுகம், இளமதியும் கீழே வேக வேகமாக இறங்கி சென்றனர்.

அவர்களை பார்த்ததும் ஆச்சர்யமும், கோபமும் ஒரு சேர ஆக்கரமித்தது அவர் முகத்தை, “என்னம்மா? ரெண்டு பேரும் இங்க தான் இருக்கீங்களா? அனு உங்கள யாராச்சும் கூட்டிட்டி போறேன்னு இல்ல சொன்னா? அவள எங்கன்னே தெரியலையேம்மா…”

இளமதி, “ஸார் …நாங்களும் அவள தேடினோம், அனு உங்களோட இருக்கான்னு நினச்சிகிட்டோம் …”

“என்ன இந்த பொண்ணு இப்படி பன்றா? ஏம்மா? நீங்க எதுவும் சொல்றதில்லையா? எனக்கும் என்ன நடக்குதுன்னே புரியல…அவ அப்பன் என்னடான்னா, டீ.ஸி யை வாங்கி பொண்ண அனுப்பி வைங்கறான்…”

அதுவரை அமைதியாக இருந்த கவிதா, “என்னது டீ.ஸி யா? என்ன ஸார் சொல்றீங்க?” கேட்கும் போதே அவள் குரல் உடைந்து, வார்த்தைகள் அழுகைக்குள் சிக்கிச் சிதறிப் போய் வெளிப்பட்டன.

“என்ன? உங்களுக்கு தெரியாதா? சரி, ஆனது ஆகட்டும், மொதல்ல அவ எங்கன்னு கண்டுபிடிக்கனும், நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருங்க, அவ வந்தான்னா, உடனே எனக்கு ஃபோன் பண்ணுங்க…நான் அவங்க ப்ளாட்டுக்கு போய் பாக்குறேன்…ஃபோன் நம்பர் நோட் பண்ணிக்கோங்க…”

அவர் அலைபேசி எண்ணை கொடுத்து விட்டு திரும்பி சிறுது தூரம் தான் சென்றிருப்பார். அதற்குள் அனுவே அவர் எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

“அனு!!! எங்க போய்ட்ட? ஃபோன ஏன் எடுக்கல?” மிரட்டும் தொனியில் சண்முகம் வினவ, அனு, “சாரி அங்கிள்…சைலன்ட்ல போட்டுடேன்…பாக்க மறந்துட்டேன்…”

“நல்ல பொண்ணு மா…இவங்க ரெண்டு பேரையும் வேற இங்க பாக்கவும், ஒரு நிமிஷம் அப்படியே பதறி போய்ட்டேன்…சரி, வா…கிளம்பு, ஆன்ட்டி காத்துக்கிட்டு இருப்பாங்க…”

“இல்ல அங்கிள், நான் வீகெண்ட் வரேனே…இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்ன்னு தோனுது…”

“சரி ஓகே…அப்ப நீ ரெஸ்ட் எடு…நாளைக்கு காலைல எந்திருச்சு தெளிவா யோசிக்கலாம்…I advise you not to take any major decision today”

“இல்ல அங்கிள்…நான் டிசைட் பண்ணிட்டேன்…படிச்சு முடுச்சிட்டு தான் இங்கிருந்து கிளம்ப போறேன்…”

ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் மலர்ந்தது அவர் முகம், “அனு!! நிஜமாவா? இப்ப தான் ரகு பொண்ணு மாதிரி பேசுற…I am so proud of you…so proud…சரி, சரி, நேரம் ஆச்சு, நீ போய் ரெஸ்ட் எடு…meet you fresh in a fresh year tomorrow”

HOD யுடன் பேசிக் கொண்டிருந்த அனுவுக்காக காத்து நின்று கொண்டிருந்த கவிதாவையும், இளமதியையும் திரும்பிப் கூட பார்க்காமல், விடு விடுவென நடந்து அவர்கள் மூவரும் தங்கி இருந்த அறை எண் 113 க்குள் நுழைந்தாள். அவளுக்குள் எத்தனையோ எண்ணங்கள் அலைமோதியது. கடைசியாக நடந்த சண்டை…கவிதாவை பார்த்து அவள் உமிழ்ந்த நெருப்பு வார்த்தைகள்…அவள் அந்த அறையை விட்டு கிளம்பிய போது, கவிதாவின் அழுது சிவந்திருந்த முகம்…அதன் பிறகு பேச முயற்சித்த இளமதியை, தான் நிராகரித்தது…இப்படி எல்லாமே, ஒரு நொடியில் அவள் கண் முன்னால் விரிந்தது. அவர்களிவர் முகத்தில் விழிப்பதற்கு பதில், அந்த பூமி பிளந்து தன்னை விழுங்கிக் கொண்டால் தேவலை என்றிருந்தது.

“அனு…” வெகு நாட்களுக்கு பிறகு கவிதாவின் அந்த அழைப்பு! ஆனால் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் உற்சாகம் இல்லாமல்…துக்கம், சந்தோஷம், நிம்மதி, ஏக்கம், ஒரு வித தவிப்பு…இப்படி பல வித உணர்வுகள் தோய்ந்திருந்தது.

“கவி!!!” என்று கதறியவாரே ஓடிப் போய் அவளை இறுக கட்டிக் கொண்டாள் அனு. என்றும் போல் அன்றும் அமைதியாய், கண்கள் பனிக்க, தன் தோழிகள் இருவரையும் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இளமதி.
கண்களில் நீர் பெருக்கெடுக்க அனு, “சாரி கவி…என்ன மன்னிச்சுடு…ப்ளீஸ்”

கவிதா, “எதுக்கு அனு சாரி எல்லாம்? அழாத அனு….ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு அவளும் அழ ஆரம்பித்தாள்.
இளமதி, “ஹய்யோ…ரெண்டு பேரும் மொதல்ல அழுகறத நிறுத்தறீங்களா? ஹேய் லூசு கவி! நீயும் அவளோட சேந்து அழுதுகிட்டு இருக்கியா?”
அனு, “இளம்ஸ்…நான் பண்ணது தப்புன்னு புரிஞ்சிகிட்டேன்…மறுபடியும் என்னை உங்களோட சேத்துக்கோங்கன்னு சொல்றதுக்கு கூட…”
இளமதி, “நாங்க எப்ப அனு உன்ன பிரிச்சு வச்சோம்? இப்ப சேத்துகறதுக்கு? ஹே அழுமூஞ்சி கவி…சொல்லேன்…”
கவிதா, “ஆமா அனு! We are there! We are there for you always…”
அனு, “இல்ல…நான் உங்க ரெண்டு பேத்தயும் எவ்ளோ ஹர்ட் பண்ணிட்டேன்…உங்கள மொத்தமா அவாய்ட் பண்ணி, ச்சே…நினச்சாலே, எனக்கே…”
இளமதி அனுவின் தோள்களை வளைத்துக் கொண்டு, “அனு! காம் டெளன்…இத பாரு…நீ எங்கள எதுவும் பண்ணல…சந்தோஷம்ன்னா சேந்து சிரிக்கறதுக்கு மட்டும் ஃபரெண்ட்ஸ் இல்ல…சோகம்ன்னா சாய்ஞ்சு அழுகறதுக்கும், தோல்வின்னா தட்டி குடுக்கறதுக்கும், கோவம்ன்னா திட்டி தீக்கறதுக்கும் தான் ஃபரெண்ட்ஸ் நாங்க இருக்கோம்…”

கண்ணீரை துடைத்துக் கொண்ட அனு, “ஆமா…அதே மாதிரி, தப்பு செஞ்சா தட்டி கேக்கறதுக்கும் தான் ஃபரெண்ட்ஸ்…அத நான் புரிஞ்சுக்கல…”

கவி மேலும் மேலும் தொடர்ந்து அழுதுட்டே இருக்கவும், இளமதி, “கவி! இப்ப அழுகறத நிறுத்தப் போறியா இல்லையா? அனுவ பாரு…அவளே சமாதானம் ஆய்ட்டா…”

கவிதா, “இதுக்கெல்ல்லாம் காரணம் அந்த பாலா தான்…அவன கொல்லனும் போல ஆத்திரம் வருது எனக்கு…”

அனு விரக்தியாக சிரித்துக் கொண்டே, “தப்பு அவன் மேல மட்டும் இல்ல கவி! என் மேலையும் தான்…”
கவிதா, “நீ என்ன அனு தப்பு பண்ண? ஒருத்தன உண்மையா லவ் பண்ணது தப்பா?”

அனு, “இல்ல கவி! நான் லவ் பண்ணது தப்பில்லை…அவன் சும்மா டைம் பாஸ்க்காக தான் லவ் பண்ணேன்னு சொன்னானதுனால அவன் மேல கோவப் பட்டேன்…யோசிச்சு பாத்தா நான் மட்டும் ஏன் லவ் பண்ணேன்? எங்க பாட்டி இருந்தப்போ, உங்களோட காலேஜ்ல சந்தோஷமா இருந்தப்போ, அப்பெல்லாம் நான் அவன திரும்பி கூட பாத்தேனா? இல்லயே…பாட்டி போய்டாங்க, யாரும் இல்ல, லோன்லி ஆய்ட்டேன்…டிப்ரெஸ்டா இருந்தேன், இப்படி பல காரணங்கள்னால அவனோட பழக ஆரம்பிச்சேன்…அதுக்கு அப்புறம் அந்த உறவை நான் எவ்ளோ தான் உண்மையா நேசிச்சாலும், ஆரம்பிச்ச காரணம்? அது தப்பு தான? இப்படி ரெண்டு பேரோட தப்புகளோட ஆரம்பிச்ச என்னோட காதல்ங்கற குழந்தை எப்படி கவி நல்ல படியா பிறக்க முடியும்? அதான், கருவிலேயே அழிஞ்சு போச்சு…”

அழாமல் தெளிவாக பேசிய அனுவை, கவிதாவும், இளமதி மிகவும் ஆச்சர்யத்துடனும், சோகத்துடனும் வெறித்தார்கள். சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சி வசப்படும் அனு, இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று அவர்கள் இருவரும் மிக பயந்துதான் போயிருந்தார்கள்.

அனு, “என்ன கேர்ள்ஸ்? எதுவுமே பேச மாட்டேங்கறீங்க? நம்ம ரீ ஜாயினிங்க்கு நாளைக்கு கான்டீன்ல ட்ரீட்?”

இளமதி அப்படியே அனு, கவிதா இருவரையும் அனைத்துக் கொண்டாள்.

சற்று நேரம் கழித்து, அனு அவள் அப்பாவை தொலை பேசியில் தொடர்பு கொண்டாள்.

“அப்பா!”
“அனும்மா…என்னடா?”
“அப்பா…வந்து…நான்…இங்கயே இருக்கேன்…ஃபைனல் இயர் முடிச்சுட்டே வரேன்…”
“என்ன? நிஜமாவா சொல்ற? அனு! ரொம்ப சந்தோஷம் …எதுக்கும் நான் இப்ப உடனே அங்க கிளம்பு வரேன்…”
“வேண்டாம்ப்பா…I’ll take care…நான் ஒழுங்கா படிச்சு, அரியர்ஸ் க்ளியர் பண்ணிட்டு, அப்புறம் வேக்கேஷன்ல அங்க வரேன்…”
“அனு! I am proud of you…I know…I know, you’ll be back to normalcy very soon…”
“ஹ்ம்ம்…தாங்ஸ் பா…அப்புறம்…வந்து…” என்று அனு இழுக்கவும்,
“என்னடா சொல்லு…”
“அந்த…ஃப்ளாட்ட…வேணும்ன்னா, ஹ்ம்ம்ம்…வித்துடுங்கப்பா…”
“என்ன??? ச்சே…ச்சே…அது இருக்கட்டும் அனு …நீ தான் அன்னிக்கு சொன்னியே, அந்த வீடு உனக்கு எவ்ளோ க்ளோஸ்ன்னு…”
“இல்லப்பா, அந்த வீட்ட விட பாட்டி தான் எனக்கு க்ளோஸ்…பாட்டியே போனப்புறம், நீங்களும், அம்மாவும் தான்…வீடெல்லாம் எனக்கு முக்கியம் இல்ல…சாரி ப்பா…”
“அனும்மா…என்னடா? என்னவோ மாதிரி பேசற?”
“இல்லப்பா…I am alright…எனக்கு தூக்கம் வருது…ஃபோன வச்சர்ட்டுமா?”
“இரு, இரு…உங்கம்மா பக்கத்துல நின்னுட்டு ஃபோன பிடிங்கிட்டு இருக்காங்கா…ஒரு நிமிஷம் அவங்களோட பேசிடு…”
“அனும்மா…” என்று அம்மாவின் குரல் கேட்கவும், "மம்மீ!!” என்று குரலில், கஷ்டப்பட்டு ஒட்ட வைத்த உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தாள் அனு. அந்த உற்சாகம், நிஜமாகவே அவளுள் இருந்து ஊற்றெடுத்து, பொங்கி பெருகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நீண்ட நாட்களுக்கு பின், அன்று, நிம்மதியாக உறங்கினாள் அனு.
அப்போது அவள் பாட்டி மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அனு எப்போது விழிப்பாள், என்று அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் அவளுடைய பாட்டி. சட்டென்று முழித்துப் பார்த்த போது தான், அது வெறும் கனவென்று உணர்ந்தாள். மீண்டும் அந்த கனவுக்குள்ளே போக மாட்டோமா என்ற ஏக்கத்தோடு தூங்கிப் போனாள் அனு.

“இருளின் கருமையையும் மீறிக் கொண்டு…
வெள்ளிக்கீற்றாய் தெரிந்த,
உன் இரு கண்கள் உணர்த்தியது…
அன்றும், இன்றும், என்றென்றும்,
நீ என்னுடன் இருக்கிறாய் என்று”


முற்றும்

Wednesday, October 22, 2008

3rd year - 6

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4, பாகம் 5

ரூம் நம்பர்: 113

இது தான் கவிதா, அனு, இளமதி, இவர்கள் மூவரின் அறை.

 

வீடு ஒரளவிற்க்கு அருகிலேயே இருப்பதாலும், சின்னதிலிருந்தே ஹாஸ்ட்டல் வாசத்தாலும், வாரம் தவறாமல், சனி ஞாயிறு ஊருக்கும் போகாவிட்டால் கவிதாவுக்கு பைத்தியமே பிடித்து விடும்.அனு வேறு புதிதாக ஹாஸ்டலில் சேர்ந்திருப்பதால், கவிதா அனுவையும் அவள் வீட்டிற்க்கு அழைத்துப் பார்த்தாள். ஆனால், அவள் வீட்டிற்க்கு சென்றால், தன் அப்பா, அம்மாவின் ஞாபகம் அதிகமாக வந்து விடுமென்ற பயம் அனுவிற்க்கு… விடாப்பிடியா அனு வர மறுக்கவும், அனுவுக்காக கவிதா ஒரு வாரம் ஊருக்கு போகாமால் இருந்தாள். அவளும் என்ன தான் செய்வாள் பாவம்? அடுத்த வாரமே, மறுபடியும், அனுவ அழைத்துப் பாத்த்து விட்டு, ஊருக்கு கிளம்பிட்டாள்.

 

கவிதா இப்படின்னா, இளமதி, அந்த செம்ல தான் CAT க்ளாஸ் போக ஆரம்பித்திருந்தாள். வார நாட்கள்ல எதுவும் தெரியாவிட்டாலும், வார இறுதியில், அனுவை தனிமை வாட்டி எடுத்தது.இளமதி மாதிரி என்னேரமும் எதோ ஒரு புத்தகம் படிப்பதில் அவளுக்கு ஈடுபாடும் இல்லை, கவிதா மாதிரி ஊருக்கு செல்வதற்கும் வழியில்லை.அப்படி, தனிமையில் தோய்ந்த ஒரு சனிகிழமை மதியம் தான் காலேஜ் லைப்ரரியில் பாலாவை சந்தித்தாள் அனு. ஏனோ, அன்று அவனை பார்த்ததும், அவள் உதட்டில் மெலிதாக ஒரு புன்னகை.

 

பாலா ஒரு நொடி தயங்கி விட்டு, பின்பு அனுவிடம் வந்து, “அனு…உன் பாட்டி போய்டாங்கன்னு….i m sorry அனு”

 

அனு அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல், விரக்தியான ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக அளித்தாள்.அவளிடம் இருந்து எந்த பதிலும் எதிர்பார்க்காதவன் போல, பாலாவே தொடர்ந்தான், “ரொம்ப நல்லவங்க அனு…உனக்கு தெரியுமா? நீ என்ன அன்னிக்கு அடிச்சப்ப உன் பாட்டி என்கிட்ட வந்து பேசினாங்க…”

 

அனு முகத்தில் ஆச்சர்ய ரேகைகள், “என்னது? உன்கிட்ட வந்து பேசினாங்களா?”

 

“ஆமா அனு…என் பேத்தி கோபத்துல அவசரப் பட்டுடா…அவ மேல உனக்கு ஏதாவது கோபம் இருந்தாலும், எனக்காக அதை எல்லாம் மறந்துடு…அப்படீன்னாங்க…”

 

“ஹ்ம்ம்….”

 

“நான் அதையெல்லாம் எப்பயோ மறந்துடேன் அனு, எதையும் நான் ப்ளான் பண்ணி செய்யல, அப்ப நடந்த விஷயம் எல்லாம், அப்படி இருந்துச்சு…அவ்ளோ தான்…”

 

அனு எதுவுமே சொல்லாமல் இருக்கவும், பாலா, “சரி…உனக்கு என்கிட்ட மறுபடியும் பேசறதுக்கு இஷ்டமில்லைன்னு நினைக்குறேன்…அப்ப நான் வரேன்…”

 

“ஹே…இல்ல பாலா, அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல…”

 

“ஹ்ம்ம்…குட்…நம்ம அபார்ட்மென்ட்ல independence day function நடந்துச்சே…ஞாபகம் இருக்கா? உன்கிட்ட இத சொல்ல தான் முக்கியமா இப்ப வந்து பேசினேன்…”

 

“ஹ்ம்ம்ம்…அதுக்கென்ன?”

 

“அதுல உன் பாட்டி, பாடினாங்களே…அந்த வீடியோ, என்கிட்ட இருக்கு…”

 

வாடி வதங்கி போயிருந்த பூ ஒன்று, திடீர் என்று புத்தம் புதிதாய் மலர்ந்தது போல ஆனது அனுவின் முகம், “ஹே….நிஜமாவா சொல்ற???”

 

“ஆமா…அனு…என்கிட்ட இருக்கு…”

 

“இப்பயே பாக்கலாமா?”

 

“எங்க வீட்ல இருக்கே…வீட்ல டி.வீ.டி player வேற repair…”

 

“அதனால என்ன? எங்க flat சாவி தான் என்கிட்ட இருக்கே…நான் கூட ரொம்ப நாளா அந்த வீட்டுக்கு போகனும், போகனும்ன்னு நினச்சுட்டு இருந்தேன்…நாம இப்பயே போலாமா? உனக்கு வேற எதாவது வேலை இருக்கா இப்போ?”

 

“இத விட, எனக்கு வேற என்ன பெரிய வேலை? இப்பயே போகலாம்…”

 

ஃப்ளாட்டில் இருந்து நேரம் கழித்து திரும்பிய அனுவை பார்வையாலே அளந்தவாறு இளமதி, “அனு! எங்க போய்ட்டு வர?” என்று கேட்க, சாதாரணமாக அவள் கேட்டது கூட, அனுவுக்குள் ஏதோ செய்தது.

’அன்னிக்கு வண்டில கூட்டிட்டு வந்ததுக்கே என்னென்னவோ சொன்னா…இப்ப என்ன சொல்லுவாளோ’ என்ற பயமா, இல்லை தான் செய்தது தவறு என்ற எண்ணமா, எதோ ஒன்று அவளை தடுத்தது.

“நான்…வந்து…லைப்ரரிக்கு தான் போய்ட்டு வரேன்…” முதன் முறையாக தோழியிடம் பொய் சொன்னாள் அனு. அந்த பொய்யே அவர்கள் பிரிவுக்கு அடித்தளமாக இருந்தது.

 

வார இறுதி கொடுத்த தனிமை, அனுவின் புலம்பல்களையும், அவளுடைய பழைய நினைவுகளையும் காது குடுத்து கேட்பதற்துக்கு ஒரு நல்ல நண்பனாய் ஆரம்பத்தில் அவளோடு பழக ஆரம்பித்த பாலா, ஒன்றிரெண்டு மாதத்திலேயே அவள் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறி, வெகு விரைவில் அவள் மனதில் காதல் துளிர்ப்பதற்கும் காரணமாக இருந்தான். பாலாவே ப்ரோப்ஸ் செய்வதற்காக காத்திருந்து, அதை அனுவும் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்ட நாளும் வந்தது.

 

இந்த விஷயம் கவிதா, இளமதிக்கு தெரிந்த போது தான் பிரச்சனையே ஆரம்பமானது. அவர்கள் பார்வையில் அனுவின் இந்த காரியம் தவறு என்றே பட்டது. ’நண்பர்கள் இழைப்பது பிழை என்று பட்டால், அதை சுட்டி காட்ட துணிவில்லை என்றால், அவர்கள் உண்மையான நண்பர்களே இல்லை’ கவிதாவும், இளமதியும் அனுவிடம் இது தவறு என்று நேரடியாகவே சொல்லி பார்த்தார்கள், ஆனால் அனு தான் அதையெல்லாம் ஏற்கும் மனநிலையில் இல்லை. ’பாலாவோட பழகாதேன்னு’ அவர்கள் இருவரும், கண்மூடித்தனமாய் எதிர்த்து, எவ்வளளோ எடுத்துச் சொல்லியும் அனு காது குடுத்து கேட்பதாய் இல்லை.

எப்படியோ ஒழிந்து போகட்டும் என்று நினைக்கவும் முடியவில்லை, அதே நேரத்தில் சொல்லி புரியவைக்கும் முடியாமல், செய்வதறியாது இருவருமே குழம்பி தவித்தனர்.

ஒரு நாள் ஹாஸ்டல் ரூமில் கவிதாயும், இளமதியும்…

 

கவிதா, “பேசாம அங்கிளுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுவோமா?”

 

இளமதி, “என்ன கவிதா பேசுற? அவ்ளோ தூரத்துல இருக்கறவங்கள இப்படி எல்லாம் சொல்லி பயமுறுத்த சொல்றியா?”

 

“அப்புறம் வேற என்ன தான் பண்றது?”

 

இளமதி, “இரு…கொஞ்ச நாள் பொறுத்து பாப்போம்…எப்படியும், இந்த வருஷத்தோட பாலாவுக்கு காலேஜ விட்டு போய்டுவான்…”

 

இளமதி அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்கவும், கவிதா ஆவேசமாகி, “ஆமா இளம்ஸ்…நீ சொல்றதும் சரி தான்…இன்னும் மூணு மாசம் தான்…அவன் காலேஜ விட்டு மட்டும் இல்ல, அனு வாழ்கைய விட்டும் போய்டுவான்…எப்படியோ, அந்த கழிசடை ஒழிஞ்சா சரி தான்…”

 

இவர்கள் இருவரும் மும்பரமாக பேசிக் கொண்டு இருந்ததில், ரூம் வாசலில் நின்று கொண்டிருந்த அனுவை பார்க்கவே இல்லை.

 

“கவிதாஆஅ!!! how dare u? அவன் என்ன விட்டுட்டு போகனும்ங்கறது தான் உன்னோட ஆசையா…” வெடித்து அழும் நிலைக்கு சற்று முந்தைய நிலை போல் இருந்தது அவள் முகம்….

 

அனுவை அங்கே கொஞ்சம் கூட எதிர் பார்க்காத இளமதியும், கவிதாவும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை.

 

கவிதா, “அனு…புரிஞ்சுக்கோ அனு…அவன் உன்ன ஏமாத்துறான்…”

 

“ஒரு வார்த்தை…இன்னும் ஒரு வார்த்தை பேசின…அப்புறம் நடக்கறதே வேற…”

 

கவிதா, “என்ன பண்ணுவ? சொல்லு…என்னடி பண்ணுவ? ஒன்னா சுய புத்தி வேணும், இல்ல சொல் புத்தியாவது வேணும்….ரெண்டுமே இல்ல உனக்கு, தருதலைன்னு தெரிஞ்சே அவனோட சேந்து சுத்திட்டு இருக்கியே…I m ashamed of you…”

 

அனு, “who are you? Who the hell are you? இது என் லைஃப், எனக்கு தெரியும், யாரும் எனக்காக மெனக்கெட தேவையில்லை…”

 

எதோ பேச வந்த கவிதாவ இடைமறிச்சு இளமதி, “போதும் கவி…வேண்டாம்…கோபத்துல விழற வார்த்தைகளுக்கு பதிலுக்கு பதில் பேசினா பிரச்சனை தான் வரும்…மூணு வருஷமா, அழகா செதுக்கி வச்சிருக்கற நம்ம நட்ப, நாமளே வார்த்தைகளால துண்டு துண்டா உடைக்க வேண்டாம்…”

 

அனு, “ஓ, இப்ப கூட தத்துவம் பேசறயோ? இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க...எப்ப என் காதல் உடைஞ்சு போகனும்ன்னு நீங்க நினைச்சீங்களோ, அப்பயே உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல….நம்ம so called நட்பு, உடைஞ்சு மட்டும் இல்ல, மண்ணோட மண்ணா போய்டுச்சு”

 

ரூம் நம்பர் 113 யில் இருந்து, ரூம் நம்பர் 306 என்ற தனி அறைக்கு ஒரே வாரத்தில் மாற்றிக் கொண்டு சென்றாள் அனு. இதில் அதிகம் பாதிக்கப் பட்டது அனு கூட இல்லை, கவிதா தான்! அது வரை அவளுக்கு கிடைத்த எத்தனையோ தோழிகளில், அனுவை மட்டும் அவள் அளவுக்கு அதிகாம நேசித்தது தான் அதற்கு காரணம்! அனு ஏற்படுத்திச் சென்ற ரணம், நீண்ட நாட்களுக்கு ஆறாமல் அவளுள் தீயாய் கொதித்துக் கொண்டிருந்தது. அனுவை பார்க்கும் போதும், அவளை பற்றி பேசும் போதும், ஏன் நினைக்கும் போது கூட, அவளே ஒரு தீப்பிழம்பாய் உருமாறி அனுவை பார்வையாலேயே சுட்டெரித்தாள்.

----

ஆறாவது செமஸ்டர் தேர்வும் நெருங்கி வந்தது. எப்போதும் போல் இல்லாவிட்டாலும் அனு ஒரளவிற்க்கு நன்றாகத் தான் தயார் செய்திருந்தாள்.கடைசி பரிட்சைக்கு முந்தய தினம் தான், பாலாவுக்கு வேலை கிடைத்தது. அவனுக்கு வேலை கிடைத்ததில், அவனை விட அனுவுக்கு தான் நிரம்ப சந்தோஷம்.

 

“ஹப்பா…பாலா! இப்ப தான் எனக்கு ஒரு தைரியமே வந்துச்சு…எப்படிடா, எங்கப்பா கிட்ட சொல்ல போறேன்னு நினைச்சுட்டு இருந்தேன்…நீ வேற ப்ளேஸ் ஆகலையா…ஆனா இனி பிரச்சனையே இல்ல….எக்ஸாம் முடிஞ்ச உடனே சொல்லிட போறேன்…”

 

“என்ன அனு சொல்ற? உங்கப்பா கிட்ட என்ன சொல்ல போற?”

 

“நம்ம விஷயத்த பத்தி தான் பாலா…”

 

“நம்ம விஷயம்ன்னா, என்ன அனு? தெளிவா சொல்லு…”

 

“நம்ம லவ் பண்றது, கல்யாணம் பண்ணிக்க ஆசைபடறது…இதப்பத்தி தான்…”

 

சொல்ல கூடாத வார்த்தைய அனு சொல்லிவிட்டது போல் ஒரு ரியேக்ஷனோடு பாலா, “என்னது??? கல்யாணமா? என்ன அனு சொல்ற? நான் எப்ப உன்ன கல்யாணம் பண்ணிகறேன்னு சொன்னேன்?”

 

“பாலா…விளையாடாத…”

 

“நீ தான் அனு விளையாடுற…let me make myself clear…I am not ready for any sort of commitment now…”

 

“அப்டீன்னா… அப்டீன்னா…நீ…நீ…என்ன லவ் பண்ணலையா?”

 

“இப்ப கூட சொல்றேன்….நான் உன்ன லவ் பண்றேன்…உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்….ஆனா, அதுக்காக உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு அவசியம் இல்லையே…”

 

“கல்யாணம் பண்ணிக்குற ஐடியா இல்லனா, இத்தன நாளா சும்மா என்கூட ஊர் சுத்தினியா? சொல்லு…பாலா! சொல்லு…”

 

அனு உடைந்து அழுகவும், “Just stop it அனு…don’t behave like a kid…பெரிய இவ மாதிரி பேசுற? யு.யெஸ்ல நீ போகாத டேட்டிங்கா? உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு நான் இது வரைக்கும் நினைச்சது இல்ல…but…hey…don’t worry…may be, I’ll consider you when I think of a serious relationship…but definitely not now…”

 

கடைசி பரிட்சை…

 

ஏற்கனவே குழம்பிப் போயிருந்த அனு, முதல் நாள் இரவு முழுதும், படிப்பதற்காக என்று முழித்திருந்து, ஆனால் படிக்காமல் பாலா சொன்னதெல்லாம் நினைத்து நினைத்து மனதிற்குள் மறுகிக் கொண்டிருந்தாள்.

 

கடைசி நேரத்தில் ஏதோ புரட்டி விட்டு, ஒன்பது மணி பரிட்சைக்கு ஒன்பது ஐந்துக்கு பரபரவென்று ஹாலில் நுழைந்த அனுவை பார்த்து, இளமதியால் ஒரு பெருமூச்சு மட்டும் தான் விட முடிந்தது.

 

வினாத்தாளில் தெரிந்த கேள்விகளுக்கெல்லாம் ஏதோ சுமாராக பதில் எழுதிக் கொண்டிருந்தவளின் காதில், டங், டங் என்ற ஒலி ஒலிக்க, அந்த அறையின் கடிகாரத்தை பார்த்தாள். மணி பத்து…”ஐயோ, பன்னென்டு மணிக்குள்ள வீட்டுக்கு போகனுமே…போனா பாட்டியை ஹாஸ்பிட்டல்ல சேத்தி காப்பாதிடலாம்’ என்ற விசித்திரமானதொரு எண்ணம் குழம்பிப் போயிருந்த அவள் மனதில் உதிக்க,

’அனு, எங்க போற? எக்ஸாம் எழுதி முடிச்சுட்டு போ’ என்ற ராமமூர்த்தி ஸாரின் கத்தல்கள் எதுவும் காதில் விழாமலே அந்த அறையை விட்டு வெளியே ஓடினாள் அனு!!!

 

அதன் பிறகு, ஒரு வாரம் அறையை விட்டு, எப்போதாவது சாப்பிடுவதற்கு மட்டும் வெளியே வந்த அனுவை பார்த்து, அவள் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச கோபம் கூட பறந்து விட்டது இளமதிக்கு. பரிட்சை முடிந்ததும் கவிதா ஊருக்கு போனது வேறு வசதியாய் இருக்கவே, மெல்ல மெல்ல அனுவிடம் பேசி அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்று கொண்டு தான் இருந்தாள் இளமதி.

 

பாலா பற்றின செய்தியும் அப்போது அவளுக்கு அப்போது தெரியாததால், ’சரி, கொஞ்சம் நாள் பொறுத்துத் தான் பார்ப்போம்…அவளுக்கு தனிமை பிடித்திருந்தால், சில நாள் அப்படியே இருக்கட்டும’ என்று இளமதி நினைத்தது எவ்வளவு தவறென்று அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. இளமதியை பொறுத்த வரை, ’என்ன தான் தோழியாக இருந்தாலும், ஒருவருகென்று இருக்கும் ’space’ ஐ மதிக்க வேண்டும், அவர்களாக சொல்ல வேண்டும் என்று நினைத்தால் சொல்வார்கள், அது வரை அவர்களை ’என்ன’, ’ஏது’ என்று கேட்டு தொன தொனகக் கூடாது’.

 

இதுவே கவிதா அங்கு இருந்திருந்தால், அனுவின் இந்த நிலையை பார்த்து, அவளை தோண்டி துருவி, ஏதாவது செய்து அவளை பழைய படி மாற்றி இருப்பாள்…முடிந்தவரை இவ்வளவு பெரிய முடிவு எடுக்கும் அளவிற்காவது செல்லாமல் பார்த்திருப்பாள் என்று பிற்பாடு தான் இளமதிக்கு தோன்றியது.

 

-----

“டங் டங் டங்”  கடிகாரம் மூன்று முறை ஒலி எழுப்பியது. இன்னும் இரண்டு மணி நேரம் தான் இருக்குறது, ‘இப்படி அழுது அழுதே நேரத்தை கடத்திட்டனே, ச்சே’ என்று அனு தனக்குத் தானே நொந்து கொண்டாள்.

 

“ஃபெயில் ஆய்டேன் சொல்லி அப்பா முகத்துல எப்படி முழிப்பேன்? பாலா இப்படி

பண்ணிடான்னு சொல்லி, கவிதா, இளமதி முகத்துல எப்படி முழிப்பேன்? இப்பயே காலேஜ்ல எல்லாரும் ஒரு மாதிரியா பாக்க ஆரம்பிச்சுடாங்க, இனி ஒரு வருஷம் எப்படி காலேஜுக்கு போவேன்? சொல்லு…பேசாம நான் உன்கிட்டயே வந்தர்றேன் பாட்டி” பாட்டியின் படத்திற்கு முன்னால் நின்று கொண்டு தனியாக பேசிக் கொண்டிருந்தாள் அனு.

 

இதற்கு முன் பிரச்சனை என்று எதையும் சந்திததில்லை. அவளுக்கு நினைவு தெரிந்தது முதல், அம்மா திட்டினார், அப்பா அடித்தார் என்று கூட ஞாபகம் இல்லை. எப்போதுமே, நல்ல நண்பர்கள், நல்ல படிப்பு, எல்லாவற்றிக்கும் மேலாக, எப்போதும் உடனிருந்த பாட்டி. இப்படி பொத்தி பொத்தி அவளை வளர்த்த விதமே, இன்று அவளுக்கு எமனாக வந்து நின்றது.

 

சிறு தோல்வி, பிரச்சனைக்கு கூட, மனம் வெதும்பி, உணர்ச்சி பிளம்பாய் மாறி, இன்னும் வாழ வேண்டிய எத்தனையோ காலங்களை மறந்து, காலனை வரவேற்க துணிந்து நின்றாள்.

 

எதையோ தேட ஆரம்பித்த அவள் கண்கள், பாட்டி படத்திற்கு கீழ் இருந்த அந்த கத்தியில் நிலைத்து நின்றது.

காலத்தின் சுவடுகளை தாங்கிக் கொண்டிருந்த ஒரு 1988 ஆம் ஆண்டு டைரி தான், அந்த கத்தியையும் தாங்கி கொண்டிருந்தது.

 

[அடுத்த பகுதியில் முடியும்]

Monday, October 20, 2008

3rd year - 5

பாகம் 1பாகம் 2பாகம் 3, பாகம் 4

“பாட்டி! பாட்டி! கதவ திற…”

 

கடைசி பரிட்சையை அரை மணி நேரம் முன்னதாகவே முடித்து விட்டு, லீவ் விட்ட சந்தோஷத்தில் வீட்டுக்கு வேகமாய் வந்த அனு, பாட்டி அதிக நேரம் கதவைத் திறக்காமல் இருக்கவும், வெளியே நின்று பெல் அடித்துக் கொண்டு, கத்திக் கொண்டிருந்தாள்.

 

உள்ளே இருந்து வந்து கதவை திறந்த பாட்டிய பார்த்ததும், லீவ் சந்தோஷம் எல்லாம் பறந்து போனது அனுவுக்கு.

 

நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு, நிரம்பிய வேதனையான முகத்துடன் வந்த பாட்டிய பார்த்ததும் ஒரு நிமிடம் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

 

“பாட்டி…என்ன ஆச்சு பாட்டி…”

 

“அனு….அனு….” பாட்டியால் அதுக்கு மேல பேச முடியல.

மெதுவாய் பாட்டியை நடத்திக் கொண்டு போய் சோஃபால உக்கார வைத்துவிட்டு டாக்டருக்கு ஃபோன் பண்ண போன அனுவிற்க்கு, பாட்டியின் தீனமான குரல் ஒலித்தது.

 

“அனு…தண்ணி….தண்ணி…”

 

ஓடி போய் தண்ணிர் எடுத்து வந்து, பாட்டி குடித்த பின்னர், வேக வேகமாய் டாக்டருக்கு ஃபோன் செய்தாள், “அங்கிள்…நான் அனு….”

 

“அனு, சொல்லுமா…என்ன விஷயம்?”

 

“அங்கிள், பாட்டிக்கு…”

 

அதற்க்கு மேல் டாக்டருக்கு ஒன்றுமே கேட்கவில்லை, “அனு, அனு…ஹலோ, ஹலோ…அனு…”

 

அனுவுக்கும் டாக்டர் சொன்னது எதுவுமே கேட்கவில்லை, ஃபோன் ரிசீவர் கீழே தொங்கிக் கொண்டிதுந்தது, தன் மடியில் சரிந்த கிடந்த உயிரில்லாத, அவளின் உயிரான பாட்டிய, பல நிமிடங்கள் பிரம்மை பிடித்தது போல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். தன் கண்களை ஒரு நொடி பார்த்துக் விட்டு, பின் மேலே எழுந்த பாட்டியின் ஒளியிழந்த கண்களுக்குள் எதையோ தேடுவது போல ஊடுருவி பார்த்துக் கொண்டே இருந்தாள். எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ, அவளுக்கே தெரியாது. அந்த நிமிடங்கள் பல யுகங்களாய் கடந்தன.

 

டங் டங் என்று அந்த அறையின் கடிகாரம் பன்னிரெண்டு முறை அடித்து ஓய்ந்தது.

--------------------

 

முழங்காலிட்டு அமர்ந்து, தலைய அதில் புதைத்து, வாழ்கையே பறி குடுத்தது போல் அமர்ந்திருந்த மகளை பார்த்து, சாதாரணமாக எதற்க்கும் கலங்காத ரகுநாதன் கூட உடைந்தே போய்விட்டார், அம்மா இறந்த செய்தி வந்த உடனே கிளம்பியவருக்கு, அம்மா போன துக்கத்த விட, மகள் தனியாக என்ன செய்வாளோ என்கிற கலக்கம் தான் அதிகமாக இருந்தது.

 

பாட்டி இறந்து இரண்டு நாள் கழித்து வந்து இறங்கிய அம்மா, அப்பாவை பார்த்ததுமே, அனு, ’அம்மாஆஅ’ என்று ஒடி போய் அம்மா மடியில் படுத்து அழ ஆரம்பித்து விட்டாள்.

 

அனுவை தேற்றும் நிலையிலும் அவள் அம்மா இல்லை, அவரும் அனுவுடன் சேர்ந்து ’ஓ’ என்று அழுக ஆரம்பித்து விட்டார். திருமணம் ஆன நாள் முதல், சொந்த பெண் போல் பார்த்துக் கொண்ட மாமியாரை, கடைசி காலத்துல் உடன் இருந்து கவனித்துக் கொள்ள முடியாமல் போன துக்கம் தான் அவருக்கு அதிகமா இருந்தது.

 

“அனு…ஈஸி…பாட்டி லிவ்டு ஹெர் லைஃப், கஷ்டப்படாம போய்டாங்கன்னு நினைச்சுக்கோ…” கொஞ்சம் கூட குரல் பிசிராமல், தெளிவாக பேசிய அப்பாவை ஆச்சர்யமாக பாத்தாள் அனு.

 

அப்படியே, அனு அப்பா அம்மா கிளம்ப வேண்டிய நாளும் வந்தது.

HOD சண்முகமும், ரகுநாதனும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

“ஹ்ம்ம்…சரி, சண்முகா…அனுவ பாத்துக்கோன்னு நான் சொல்ல வேண்டியதில்லை…”

 

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன்…ஆனா, அனு தான் பாட்டிய ரொம்ப மிஸ் பண்ணுவா…என்ன அனு?”

 

அனுவிடமிருந்து ஒற்றை வரியில் “ஹ்ம்ம்…” என்று பதில் வந்தது.

 

ரகுநாதன், “என்ன தான் சொல்லு, அம்மா போய்டாலும், கடைசி காலத்துல கஷ்டமே படாம டக்குன்னு போய்ட்டாங்க பாரு, ஒரு விதத்துல எனக்கு சந்தோஷம் தான் சண்முகா…”

 

அது வரை பெரிதாக எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து அனு, “எப்படிப்பா உங்கனால இப்படி பேச முடியுது? செத்தது வேற யாரும் இல்ல, உங்கம்மா…”

 

“ஹா ஹா…என்ன அனு, எனக்கு தெரியாதா? உண்மைய தான சொன்னேன். பாட்டி ரொம்ப காலம் பெட்டோட படுத்து கஷ்டப்பட்டு…அப்படி எல்லாம் எதுவும் ஆகலையே, அத தான் நல்லதுன்னு சொன்னேன்…”

 

“ஆமா…உண்மை தான், ஏன்னா பாட்டிக்கு உடம்பு சரியில்லாம போயிருந்தா, நீங்கள்ள வச்சு பாத்திருக்கனும்? இப்படி பாட்டி திடீர்ன்னு செத்தது உங்களுக்கு நல்லது தான் பா” குரலில் ஒரு வித வெறுப்போட சொன்னாள் அனு.

 

ஏதோ வேலையாய் இருந்த அனுவின் அம்மாவுக்கு அனு பேசியதை கேட்டு கோபம் பொத்துக் கொண்டு வந்தது, “அனு!!! என்ன பேசுற? உங்கப்பா கிட்ட பேசிட்டு இருக்கேன்னு ஞாபகம் இருக்கா?

 

“இருக்கு, நல்லா இருக்கு, பெத்த அம்மா செத்துடாங்களேன்னு கொஞ்சம் கூட கவலை இல்லாம, வந்ததுல இருந்து, she lived her life…what a great death…கஷ்டம் குடுக்காம போய்டாங்க, அது இதுன்னு சந்தோஷமா பேசிட்டு இருக்காரு.!!!”

 

ரகுநாதன், “இப்ப என்ன அனு சொல்ல வர?”

 

“என்ன சொல்றது? அவங்கனால உங்களுக்கு இப்ப எந்த பிரியோஜனமும் இல்ல, அதனால தான், உங்களுக்கும் கஷ்டம் குடுக்காம போய்டாங்கன்னு குதிக்கறீங்க…You just threw her off like an old useless bucket”

 

“அனு!!!”

 

மகளை பார்த்து ஒரு வார்தை கூட அதிர்ந்து பேசாத ரகுநாதன், பக்கத்து வீட்டுக்களுக்கே கேட்பது போல் கத்தவும், சண்முகம்,

 

“ரகு…பொறுமையா பேசுப்பா…”

 

“என்ன சண்முகா சொல்றா இவ? ஏன் இப்படி எல்லாம் பேசுறா? எனக்கு ஒன்னுமே புரியலப்பா…”

 

“விடு ரகு, சின்ன பொண்ணு, புரியாம பேசுறா…அத போய் பெருசா எடுத்துக்கிட்டு, சரி வாங்க, நேரம் ஆகுது, கிளம்புங்க, இப்ப காலேஜ் போனா சரியா இருக்கும்…”

 

“ஷீலா! அனுவோட திங்ஸ் எல்லாம் பேக் பண்ணியாச்சா? கிளம்புவோம்…”

 

“உங்க பொண்ணையே கேளுங்க…”

 

“ஏன்? என்ன அனு, ரெடியா இல்லையா?”

 

“நான் ஹாஸ்ட்டலுக்கு எல்லாம் வரல, இந்த வீட்ல இருந்தே காலேஜுக்கு போறேன்…”

 

“விளையாட நேரம் இல்ல அனு! இங்கிருந்து தனியா போவியா? அது மட்டும் இல்லாம, இந்த வீட்ட வச்சுகிட்டு இனிமே என்ன பண்றது? இத பாக்கறதுக்காக எல்லாம் என்னால இன்னொரு தடவை வர முடியாது, விக்கறதுக்கு பேசி வச்சிட்டேன்…”

 

“என்னது, விக்க போறீங்களா? என்னப்பா சொல்றீங்க...” கேட்கும் போதே அனுவுடைய குரல் பாதி உடைந்து அழுகையாக தான் வெளிப்பட்டது.

 

“ஆமா அனு, இனி இந்த வீடு எதுக்கு…”

 

“எதுக்கா? இது தான் பாட்டி கடைசியா இருந்த வீடு, பாட்டி இன்னும் இங்க தான் இருக்காங்க, இந்த வீட்டையா விக்க போறீங்க?”

 

“Don’t be silly anu…”

 

“silly? I am damn serious…நான் இந்த வீட்ட விட்டு எங்கயும் போக மாட்டேன்…நானும் பாட்டியும் இருந்த வீடு, இங்க இருக்குற ஒவ்வொரு செங்கல்லையும் எங்க சிரிப்பு சத்தம் கேக்கலையா உங்களுக்கு? அதோ அந்த இடத்துல தான்…பாட்டி எனக்கு சாதம் ஊட்டி விடுவாங்க, அங்க சாப்பாட்டா தான் என்னால சாப்ட முடியும்…அதோ அந்த இடத்துல தான்…நான் பாட்டி மடில படுத்துகிட்டு, கதை கேட்டுகிட்டே தூங்குவேன்…அங்க படுத்தா தான் எனக்கு தூக்கம் வரும்…அதோ அங்க தான்….”அதுற்கு மேல் பேச முடியாமல் ’ஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள்…

 

அனு அழுவதை பார்த்த அவள் அம்மா, பெருகி வங்க கண்ணீரை கூட துடைக்காமல் செய்வதறியாது அப்படியே திகைத்து நின்று கொண்டிருந்தார்.

 

ஆனா ரகுநாதன் மட்டும், “என்ன பேசுறா இவ? பைத்தியம், கியித்துயம் பிடிச்சுருச்சா இவளுக்கு…” அதற்க்கு மேல் அவரை பேச விடாமல், சண்முகம் ரகுநாதனை வெளியே தள்ளிக் கொண்டு போனார்…

 

“ஏய்…இப்ப எதுக்குப்பா உனக்கு இந்த வீட்டை விக்கனும்? பணம் ஏதாவது வேணும்ன்னா என்னை கேளு…”

 

“என்னப்பா நீயும்? பணத்தக்காக இல்லை, இந்த வீட்டை பாக்குறதுக்காக மறுபடியும் இந்த ஊருக்கு வர முடியுமா? அனுவும் ஹாஸ்டல் போக போறா, இந்த வீட்ட என்ன பண்ண சொல்ற?”

 

“அட்லீஸ்ட் அனு படிச்சு முடிக்குற வரைக்கும் இருக்கட்டுமே…”

 

ஒரு வழியாக, அழுது அடம் பிடித்த அனுவை ஆறாவது செமெஸ்டர் முதல் நாள், ஹாஸ்டலில் சேர்த்தார்கள்.

 

ஹாஸ்ட்டலில் அனுவும், அவள் அன்புத் தோழிகள் இருவரும் ஒரே அறையில் இருந்தும், தனிமையின் உச்சத்தில் அனு…

 

இன்று

மணி: இரண்டு

ஹாஸ்டலில் தன் தோழிகளோடு ஏற்பட்ட சண்டையை நினைத்தவுடன், அனு கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.

Saturday, October 18, 2008

3rd year - 4

பாகம் 1, பாகம் 2, பாகம் 3

"ஹேய் கவி!!!என்ன ஆச்சு? காந்தி செத்த நியூச இப்ப தான் கேட்ட மாதிரி முகத்த வச்சிருக்க?" நக்கல் சிரிப்போடு அனு கவிதாவை பார்த்து கேட்டாள். லேப் முடிந்து வந்த அனுவும் இளமதியும், வேறு ஒரு லேபில் இருந்து வந்த கவிதாவை அப்போது தான் பார்த்தனர்.


கவிதா, "இங்க வேண்டாம்...வாங்க, ஒரு முக்கியமான விஷயம்..."
அவர்கள் இருவரையும் காரிடாரின் கடைசி வரை இழுத்துக் கொண்டு போன கவிதா, கவலை தோய்ந்த முகத்தோடு "இளம்ஸ்...நீ சொன்னது சரியா தான் போய்டுச்சு..."


இளமதி, "என்ன கவிதா? என்ன விஷயம்ன்னு சொல்லு மொதல்ல..."


கவிதா, "அனு! இன்னிக்கு எங்க லேப்ல பசங்க பேசிட்டு இருந்தத கேட்டேன்... பாலா உன்ன அவனோட ஆளுன்னு சொல்லிட்டு திரியரானாம்...ஹாஸ்ட்டல் முழுக்க இப்ப இது தான் ஓடிட்டு இருக்கு போல இருக்கு...லீவ்லயே ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாமேன்னு என்கிட்டயே கேக்கறாங்க!!!"

எப்போதும் பால் போல வெண்மையாய் இருக்கும் அனுவின் முகம் ஒரு நொடியில் ரத்தக் சிவப்பானது...
"என்னது??? அப்படியா சொன்னான்?" அனு துரிதமாக நடக்க ஆரம்பிக்கவும்,

இளமதி, "அனு! எங்க போற?"

அனு,"இப்பயே போய் அவன என்னன்னு கேக்கறேன்...How dare he is!!!"

கவிதா, "ஆமா அனு! எவ்ளோ கொழுப்பு இருக்கணும் அவனுக்கு!!! வா, நேரா HOD கிட்ட போய் சொல்லுவோம்..."

இளமதி, "உங்க ரெண்டு பேத்துக்கும் என்ன பைத்தியமா? சின்ன விஷயத்தப் போய்..."

அனு, "வாட்??? சின்ன விஷயமா? எப்டி இளம்ஸ் உன்னால..."

இளமதி, "பாரு அனு...கோவபடாம கொஞ்சம் பொறுமையா யோசி...சும்மா ஏதாவது கிண்டலுக்கு ஓட்டி இருந்துருப்பாங்க... இதுக்கெல்லாமா ரியாக்ட் பண்ணுவாங்க? Just ignore it…அவ்ளோ தான்..."

அனு,"நீ தான் இளம்ஸ் லூசு மாதிரி பேசற...ஓட்டறது வேற...அதுக்காக இப்படியா ஹாஸ்ட்டல் ஃபுல்லா ஆளு அது இதுன்னு பேசுவாங்க? அவன என்னன்னு கேக்காம விடறதில்ல...ஒரு கை பாத்துக்கறேன் அவன..."

பேசிக்கொண்டே அனு, இறுதி ஆண்டு வகுப்பறைக்குள் நுழைந்தாள். அப்பொழுது தான் காலை இடைவேளை முடியும் நேரமென்பதால், எல்லோரும் மீண்டும் வகுப்பறைக்குள் வந்து கொண்டும், அங்குமிங்கும் நின்று பேசிக் கொண்டும் இருந்தார்கள்.

நம் ஹீரோ பாலா, கால்களை அகல பரப்பி, வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டு, பெஞ்சில் தாளம் போட்டுக் கொண்டிருந்தான்.
அவனருகில் சென்று அவனை முறைத்துக் கொண்டு நின்ற அனுவை பார்த்ததும் அவன் கைகள் தாளம் போடுவைதை தானாக நிறுத்தி விட்டு, கண்கள் அனுவை கேள்விக்குறியோடும், ஆச்சர்யத்தோடும் நோக்கின.

மிரட்டும் தொனியில் அனு, "என்ன பாலா!! என்னை உன் ஆளுன்னு உன் பிரெண்ட்ஸ் கிட்ட சொன்னியா?"

உடனே பதறிப் போய் எழுந்து நின்ற பாலா "இல்ல அனு...அது வந்து..." என்று இழுக்கவும், அனு பிடிவாதமான குரலில், "சொல்லு! சொன்னியா, இல்லையா?"

பாலா, “இல்ல….அது…சும்மா எல்லாரும் ஓட்டினாங்களா…அதான்…”

அனு,”அதுக்கு? நீயும் கூட சேந்து சொல்லிக்குவியா? என்ன சொல்லி வச்சிருக்க? மரியாதையா சொல்லு!”

கண்களில் ஒரு சின்ன சிமிட்டலோடு பாலா, "ஆமா!!! சொன்னேன்...இப்ப இல்லன்னாலும், கூடிய சீக்கரத்துல அதுவே உண்மையாக கூட ஆக..." அவன் பேசி முடிக்கும் முன்பே, அந்த அறையே ஸ்தம்பிக்கும் வண்ணம் பளார் என்ற சத்தம் கேட்டது.

கைகளை கன்னத்தில் வைத்துக் கொண்டு, நடந்ததை நம்ப முடியாமால் உறைந்து போய் நின்றிருந்த பாலாவையும், ஓடிக் கொண்டிருந்த காட்சியை ’பாஸ்’ பட்டன் சொடுக்கி நிறுத்தியது போல் அப்படியே நின்று விட்ட மற்ற மாணவர்களையும், திரும்பி கூட பார்க்காமால், அனு அந்த அறையின் வாயிலை நோக்கி காற்றை மிஞ்சும் வேகத்தில் புயல் போல் நடக்க ஆரம்பிக்கவும் தான், சுயநினைவுக்கு வந்தவர்களாய், இளமதியும், கவிதாவும் அவள் பின்னால் தலை தெறிக்க ஓடினார்கள்.

அதிகம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத இளமதி முகத்தில் கூட அன்று எள்ளும், கொள்ளும் வெடித்தது. என்ன விதமான உணர்ச்சி என்றே பிரித்துப் பார்க்க முடியாத ஒரு குழப்பம் கவிதாவின் முகத்தில்.
ஆனால் அனுவோ, அம்மன் படத்தில் கடைசியில் வரும் அம்மன் முகம் போல், கோபம் தணிந்து சாந்த சொரூபியா காட்சியளித்துக் கொண்டிருந்தாள்.

இளமதி, "Seriously anu!!! You are an emotional idiot!!!"

அதை சட்டை செய்யாமல் அனு தொடர்ந்து நடக்கவும், இளமதி, "அனு! என்ன தான் இருந்தாலும், நீ அவன அடிச்சது தப்பு...அப்படியே அவன் செஞ்சது தப்பா இருந்தாலும், அவன தனியா கூப்ட்டு சொல்லி இருக்கலாமே? அத விட்டுட்டு, இப்படியா? மொத்த க்ளாஸ் முன்னாடி? ச்சே..."

அனு, "என்ன தைரியம் இருந்தா என்கிட்டயே வந்து,”ஆமா, சொன்னேன் இப்ப என்ன’ன்னு அவ்ளோ தெனாவெட்டா பேசுவான்? என்ன யாருன்னு நினைச்சான்?"

அனு பொருமித் தள்ளவும், கவிதா, "ப்ளீஸ் அனு! காம் டௌன்... க்ளாசுக்கு லேட் ஆச்சு..வாங்க"
---

காலையில் இருந்து உர்ரென்று இருந்த இளமதியையும், எதையும் சட்டை செய்யாதது போல் நடந்து கொண்ட அனுவையும் வைத்துக் கொண்டு கவிதாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைசி பீரியடும் வந்துவிட்டது. ஆனால் அவர்கள் இருவருமே சமாதானம் ஆவது போல் எந்த வித அறிகுறியும் தெரியவில்லை.


அவள் ஏதாவது பேசினாலும், அதற்குறிய பதிலை மட்டும் அளித்து விட்டு மெளன நிலைக்கு போனாள் இளமதி. ’அட ச்சே…அடி வாங்கினது என்னவோ, அவன்…இவள அடிச்ச மாதிரி இவ்ளோ பிகு பண்றாளே’ என்று இளமதிக்கு கேட்காத வண்ணம் அனுவிடம் நகைச்சுவையாக சொல்லி பார்த்தாள், ஆனால் அனுவோ, “ஹய்யோ…very funny!” என்று நக்கலாக பதிலளித்து விட்டு அந்த பக்கம் திரும்பி கொண்டாள். ’என்னடா இது, ஒரே பெஞ்சில ஆயுத எழுத்து மாதிரி உக்காந்திருக்கமே’ என்று நொந்து கொண்டவளுக்கு அப்போது தான் ஒரு உத்தி தோன்றியது. வயிற்றை பிடித்து கொண்டு ஒரு விதமாக முகத்தை மாற்றி, “ஹய்யோ…அம்மா…ரொம்ப பசிக்குதே…இந்த க்ளாஸ் முடிய வேற இன்னும் அரை மணி நேரம் இருக்கு…”

உடனே நோட்ஸ் எடுப்பதை நிறுத்து விட்டு இளமதி, “அச்சச்சோ…ரொம்ப பசிக்குதா கவி? க்ளாஸ் முடிஞ்ச உடனே கான்டீன்னுக்கு போவோம்…”
’ஹ்ம்ம் சரி’ என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன கவிதாவின் கையில், குனிந்து கொண்டு தன் பையில் எதையோ நோண்டிக் கொண்டிருந்த அனு, ஒரு டைரி மில்க் மிட்டாயை தினித்தாள்.
வகுப்பு முடிந்ததும், மூவரும் கான்ட்டீனை நோக்கி எதுவுமே பேசாமல் புறப்பட்டனர்.

கவுன்டர் அருகே சென்ற உடன் இளமதி, “என்ன கவி சாப்டற?” என்று தனது பையை திறந்து கொண்டே கேட்கவும்,
கவிதா ஒரு வித குறும்பு சிரிப்புடன், “இல்ல, இல்ல…நீ பேக மூடு, இன்னுக்கு அனு தான் ட்ரீட்…”
அதுவரை அமைதியாக இருந்த அனு, “என்னது? நானா? எதுக்கு?” என்று வினவ,
கவிதா, “என்ன அனு? தெரியாத மாதிரி கேக்குற? இன்னிக்கு எவ்ளோ பெரிய காரியம் பண்ணி இருக்க? ஜான்ஸி ராணி மாதிரி ஃபைனல் இயர் க்ளாஸ் ரூம்குள்ள மார்ச் பண்ணி போய் ஒரு பையன அறைஞ்சுட்டு வந்துருக்க…இதுக்கு ட்ரீட் குடுக்கல்லன்னா எப்படி?”

ஹா ஹா ஹா என்று சத்தமாக சிரித்துக் கொண்டு அனு, “கவி!!!! நீ தாம்மா என் பெஸ்டு ஃபரெண்டு” என்றவாறு அவளை தோளோடு கட்டிக் கொண்டாள்.
இதை சிறுதும் எதிர்பார்க்காத இளமதி, “அட ச்சே…உங்க ரெண்டு பேத்தையும் திருத்தவே முடியாது” என்று தலையில் அடித்துக் கொண்டாலும், அவர்களுடன் சேர்ந்து அவளும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவர்களின் சிரிப்பொலி கான்டீன் முழுதும் அழகாக ரீங்காரமிட்டது.

---

அனு வீட்டிற்குள் நுழைந்ததும், அவள் பாட்டி பல்லவியை ஆரம்பித்து விட்டார்.
அனு, “உனக்கெப்படி பாட்டி தெரியும்? அதுக்குள்ள அந்த இளமதி ஃபோன் பண்ணி வத்தி வச்சுடாளா?”

உடனே பாட்டி, “ஆமா…அந்த பொண்ணு ஃபோன் பண்ணி சொல்லன்னா, நீ சொல்லி இருக்க மாட்டியாக்கும்? ஏன் அனு இப்படி பண்ண?”

அனு, “எனக்கு பசிக்குதுஉஉஉ”

“ஏம்மா? ஒரு பையன அவன் க்ளாஸ்ல அத்தன பேர் முன்னாடி வச்சு அடிக்கலாமா? தப்பில்லையா?”

“போ பாட்டி! உன்ன மாதிரி கோவப் படாம எல்லாம் என்னால இருக்க முடியாது…ஓவரா பேசினான், So I taught him a lesson…that’s it!!!”

“என்ன அனு குட்டி இப்படி பேசுற?”

ஏதேதோ பேசி, ஒரு வழியாய் பாட்டியை சமாதானப் படுத்தினாள் அனு. தினமும் சாப்பிட்டு முடித்ததும், டீ.வியை போட்டுக் கொண்டு, ஆனால் அதை பார்க்காமல், அரட்டை அடித்துக் கொண்டிருப்பது தான், பாட்டி பேத்தியின் வேலை. அன்றிரவும் வழக்கம் போல், பாட்டி மடியில் படுத்துக் கொண்டு டீ.வி பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.
“ஏன் அனுகுட்டி… அந்த பையன் வீடு இங்க தான இருக்கு?”

“ஆமா! அதுக்கென்ன இப்ப?”
“அவங்க அப்பா, அம்மா கிட்ட சொல்லி இருந்தா, அவங்க கண்டிக்க போறாங்க…நீ போய் ஏம்மா அவனோட வம்பு வளத்துட்டு வந்துட்ட? நாளைக்கு அவன் உன்ன எதாவது பண்ணிட்டான்னா…”

“ஹய்யோ பாட்டி! நிறுத்து…நீ இருக்கும் போது என்னை யாரு என்ன பண்ண முடியும்? சரி, அதெல்லாம் விடு…இப்ப நீ உன் கதையை சொல்லு…தாத்தா ஒன்னு சொல்லுவாரே, அத சொல்லு…”

“அட போ!!! எத்தன தடவ தான் கேப்ப?” என்று பாட்டி அலுத்துக் கொள்ளவும், சிரித்த படி அனு, “ஹா ஹா…சும்மா வெக்கப் படாம சொல்லு பாட்டி!!!”

நினைவின் அழகிய சுழல்களில் விரும்பி போய் சிக்கி கொள்வது மனித இயல்பு தானே? அந்த சுருங்கிய முகத்திலும் லேசான வெட்கம் குடியேற, அதரத்தில் புன்னகை மலர, கண்களில் இரு நட்சதிரங்கள் மின்ன, பாட்டி அவர் கதையை ஆரம்பித்தார். “கல்யானம் ஆன புதுசு…உங்க தாத்தா வேலை செய்ற ஆஃபீஸுக்கு என்னை கூட்டிடு போயிருந்தாரு, அப்ப அங்க இருந்த எல்லாரும், உங்க மனைவியை அறிமுகப் படுத்தலையேன்னு கேக்கவும், ஒரு நிமிஷம் கூட யோசிக்காம உங்க தாத்தா,
இவங்க தான்

“என் அன்பு மனைவி
என் ஆருயிர் தோழி
என் ஆசை கண்மணி
என் அருமை காதலி”

ன்னு சொன்னாரு…
பாட்டி சொல்லி முடிக்கவும், எப்போதும் போல அனுவும், “copy cat…copy cat…இருவர் படத்துல வர மாதிரி இருக்கு…” என்று கத்தவும், பாட்டு, “போடி! அப்பெல்லாம் அந்த படம் வரவே இல்ல” என்று வழக்கம் போல் மறைந்த தன் கணவருக்காக வக்காலத்து வாங்கினார்.

அப்படியே சிரித்துக் கொண்டும், கதை பேசிக் கொண்டும் அன்று பாட்டி மடியிலேயே தூங்கி போனாள் அனு.

இப்படியே ஆடி, பாடி ஒரு வழியாக ஐந்தாவது செமஸ்டர் தேர்வும் வந்தது.
மறுநாள் கடைசி பரிட்சை, அனு படித்துவிட்டு தூங்க போகும் போது மணி ஒன்று.
படுக்கையறைக்குள் தட தடவென நுழைந்த அனுவை திடுக்கிட செய்தது அந்த நேரத்தில் பாட்டியின் தெளிவான குரல், “ஏன் அனுகுட்டி…இப்படி ஓடி வர?”

“பாட்டி! நீ இன்னும் தூங்கலையா? மணி ஒன்னாச்சு, தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க?”

“தூக்கம் வரல தங்கம்…ஆமா, ஏன் இப்படி தல தெறிக்க ஓடி வர?”

“லைட் ஆஃப் பண்ணிட்டேனா…அதான், பயந்துட்டு வேகமா வந்தேன்…”

“அடப் புள்ள, இங்க லைட்ட போட்டுட்டு, அப்புறம் ஹால்ல லைட்டு ஆஃப் பண்ணிட்டு இங்க வர வேண்டியது தான?

“இங்க லைட்ட போட்டா நீ எந்துருச்சிடுவியே…அதான்”

“ஹய்யோ…என் ராசாத்தி!!! வா, வந்து படு வா…”

அப்போது அனுவுக்கு தெரிந்திருக்கவில்லை, அன்று தான் பாட்டியுடன் படுத்து உறங்கும் கடைசி இரவு என்று அனுவுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

மறுநாள் காலை, அந்த வீடு வழக்கத்துக்கு மாறாக விடிந்தது. பாட்டி தூங்கிக் கொண்டிருக்க, அனு அவசர அவசரமாய் கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.
அனு கிளம்பும் அரவம் கேட்கவும், வேக வேகமாக ஓடி வந்த பாட்டி, “அனு! சாப்டாமயே கிளம்பிட்டயா? இரும்மா…ஐஞ்சே நிமிஷத்துல எதாவது செஞ்சு குடுக்கறேன்…”

“பாட்டி…நான் நூடில்ஸ் செஞ்சு சாப்ட்டுட்டேன்…உனக்கும் இருக்கு, நீயும் சாப்பிட்டு ரெஸ்ட் எடு…நான் கிளம்பறேன்…வந்து கதவ பூட்டிக்கோ”
கதவருகே வந்து நின்ற பாட்டி அனுவை ஒரு நொடி இமைக்காமல் பார்த்து விட்டு, “அனு! All the best” என்றார்.

பரிட்சையை சீக்கரமே முடுத்து விட்டு, விடுமுறை சந்தோஷத்துடன் வீட்டுக்கு துள்ளி குதித்தபடி ஓடி வந்தாள் அனு. அதன் பிறகு, ஒரு சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்த விட்ட சம்பவங்கள் நீண்ட நாட்கள் அவள் நினைவை விட்டு அகல மறுத்தது. பாட்டி இறந்ததை விட, அவர் இறந்த விதம் தான் அவளை மிகவும் உலுக்கி விட்டது.

[தொடரும்]

Sunday, October 12, 2008

நீ இல்லாத வீடு...

நீ இல்லாத அந்த மழை நாளில்...

மழை பொழியும் வேளையில்...
வீட்டை சுற்றி சுற்றி நான் ஓடி விளையாடுவதும்,
என்னை நீ அதிகப் படியாய் கடிந்து கொள்வதும்...

நீர் சேமிக்கிறேன் என்று சாக்கிட்டு, மழையில் நான் அலைவதும்,
பின்னோடு ஒரு குடையோடு, நிழலாய் நீ என்னை தொடர்வதும்...

பார்! இன்று கூட மழை பெய்கிறது!
எப்போதும் போல் வீட்டை சுற்றி வந்து நனைந்தாலும்,
கண்டிக்க யாரும் இல்லை தான்...

என்னவோ! மழைச்சாரல் பட்டுத் தெறிக்கும் அழகை,
எட்டிப் பார்க்கக் கூட தோன்றவில்லை...

காகிதத்தில் கப்பல் செய்வதை விடுத்து
எதையோ கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...

*******
அன்னியலோகம்

பிறந்து வளர்ந்த வீடு கூட அன்னியமாகிப் போனது
நீ இல்லாத நாட்களில்...

*******
படையெடுப்பு

நீ ஊரில் இல்லை என்று யாரோ இந்த எறும்புகளுக்கு தந்தியடிதிருக்கிறார்கள்!
பின்னே? எப்படி மறுநாளே நம் வீட்டிற்க்குள் படை எடுக்கும்?

****
தூக்கம் தொலைத்த இரவு...

தூக்கத்தின் ஆழத்தில்,
தொட்டில் துறந்தது முதல், பிறந்த பழக்கமாய்,
உன் மேல் கை போட யத்தனிக்கையில்,
தொம்மென்று வெற்றுப் படுக்கை மேல் விழுந்த கை,
மனதின் அடியில், பெருவலி ஒன்றை கிளப்பியது...
அன்று, நடுநிசியிலேயே விடிந்தது என் இரவு...

Friday, October 10, 2008

3rd year - 3

பாகம் 1
பாகம் 2

ஞான பண்டிதா, சரணம்…சரணம்…
ஞான ஸ்காந்தா, சரணம்…சரணம்…

“பாட்டீஈஈஈஈ!!!! பாட்டீஈஈஈஈ!!!!” ஹய் பிட்சில் ஒலித்தது அனுவின் குரல்.

“என்ன குட்டி? சாமி கும்பிட்டுட்டு இருக்கேன்ல? ஒரே நிமிஷம், தோ வரேன்…” பூஜை அறையில் இருந்து கொண்டே பதில் அளித்தார் அனுவின் பாட்டி, காந்திமதி. நல்ல வெள்ளை நிறம், அதை விட வெண்மையான, மேகம் போன்ற கூந்தல். என்னேரமும் திருநீரு துலங்கும் நெற்றி, எப்போதும் சிரித்த முகம், இப்படி தான் பாட்டியை பார்த்து பழக்கப் பட்டிருந்தாள் அனு, பிறந்தது முதல்.

“சீக்ரம் வா…லேட் ஆச்சு, 3rd year ஃபர்ஸ்ட் டே…லேட்டா போக போறேன் போ…சீக்கரம் வாஆஆஆஅ”

ஒரு நிமிடம் ஆனது, இரண்டு நிமிடம் ஆனது, ஐந்து நிமிடமும் ஆனது, ஆனால் பாட்டி பூஜை அறையிலிருந்து வெளியே வரவே இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அனு, பூஜை அறைக்குள்ளே சென்றாள்.

“என்ன பாட்டி, இத்தன நேரம் என்ன பண்ணிட்டு இருக்க? ஹேன், ஹேன்னு சத்தம் மட்டும் வருது…”

“இந்த விளக்கு ஏத்தறேன், ஏத்தறேன்…அனஞ்சுகிட்டே இருக்குது…பாரு, அட…என்னன்னே தெரியலயே…”

அருகில் இருந்த பாட்டிலை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள் அனு.
“என்ன சிரிப்பு? என்ன தான் ஆச்சோ இந்த விளக்குக்கு…”

“ஹய்யோ…பாட்டி, எண்ணைக்கு பதில் தேன ஊத்திட்டு…ஹா ஹா, இதுல எழுபத்தி ஐஞ்சு வயசு ஆனாலும், எனக்கு கண்ணாடி இல்லமையே, கண்ணு நல்லா தெரியும்னு சீனு வேற…சரி சரி, லேட் ஆச்சு…சீக்கரம் வந்து எனக்கு சாப்பாடு குடு…வா…”

“என்னச் சொல்ற…இவ்ளோ வயசு ஆச்சு, ஊட்டி விட்டாத் தான் சாப்பிடுவியா? நீயே சாப்பிட வேண்டியது தான?”

“சரி, அப்ப எனக்கு சாப்பாடு வேண்டாம் போ…நான் போறேன்…”

“ஐயோ! அனுக்குட்டி…இரு, இரு, கையை கழுவிட்டு வந்தர்றேன்…போய்டாத”

க்ரீச்ச்ச்ச்….
ப்ரேக் போட்டு ஸ்கூட்டியை நிறுத்தினாள் அனு.
“ஹேய்…பாலா!!! எங்க காலேஜுக்கா கிளம்பிட்ட?”
“ஆமா அனு…”
“எப்டி போகப் போற?”
“பஸ்ல தான்…”
“அப்ப வா என்னோட…நான் உன்ன ட்ராப் பண்றேன்…”
“தாங்ஸ் அனு…” என்றவாரே அவள் பின்னால் அமர்ந்தான் பாலா, பாலக்குமார். அனுவுக்கு ஒரு வருடம் சீனியர். சென்ற வருட விடுமுறை சமயத்தில் தான், அனு குடியிருக்கும் ஃப்ளாட்டுக்கு அவன் குடும்பமும் குடி வந்திருந்தது. இன்டேர்ன்ஷிப், அது, இது என்று இருந்ததனால், அனுவும் ஒரு மாதத்திலேயே, விடுமுறை முடிந்து யு.யெஸில் இருந்து இந்தியா திரும்பி விட்டாள். அது வரை, முகத்தளவில் மட்டுமே தெரிந்திருந்த அவர்கள் இருவரும், அந்த ஒரு மாதத்தில் தான், ஓரளவிற்கு பேசி பழகி இருந்தனர்.

ஐந்தே நிமிடங்களில் கல்லூரியும் வந்துவிட்டது. அனு வண்டியை நிறுத்தவும், கவிதா அப்பாவின் கார் அங்கு வரவும் சரியாக இருந்தது.
“அனு!!!” ஆயிரம் வாட்ஸ் ஒளி முகத்தில் பிரகாசிக்க, உற்சாக மிகுதியில் கத்திக் கொண்டே காரை விட்டு இறங்கி, நீண்ட கூந்தல் அலைபாய, ஓடி வந்தாள் கவிதா.

“ஹே…கவி!!!” துள்ளி குதித்துக் கொண்டு ஓடினாள் அனுவும். கரை புரண்டு ஓடிய அவர்களது உற்சாகமும், அலப்பறையும் ரொம்ப நாள் கழித்து பார்த்துக் கொண்ட தோழிகள் போல் இருந்தாலும், ஒரு வாரம் முன்பு தான் இருவரும் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.
அனு, “கவி…ஊஊஹ்ஹ்…what a bingo man!!! ரெண்டு பேருமே லேட்டு…ஹாய் அங்கிள், எப்படி இருக்கீங்க?”

“நான் இருக்கறது எல்லாம் இருக்கட்டும், 8.35 ஆச்சு…ஓடுங்க…ரெண்டு பேரும் நல்லா தான் செட்டு சேந்திருக்கீங்க…”

கைகள் கோர்த்துக் கொண்டு தட தட வென ஓட ஆரம்பித்தனர் அனுவும், கவிதாவும். அனு…கவி…இவர்கள் இருவருமே கிட்ட தட்ட ஒரே மாதிரியான கேரக்டர்ஸ் தான். கொட்டும் அருவி போல், ஒரு இடத்தில் நிற்காமல், எப்பொழுதும் சிரித்துக் கொண்டோ, விளயாடிக் கொண்டோ, சந்தோஷமாக, full of life என்று சொல்வார்களே, அப்படி! ஆனால், கவிதா கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி, அந்த வகையில் அனு கொஞ்சம் தேவலை.

“Excuse me, sir…”

“Sorry, you are too early for the next class…” ராமமூர்த்தி ஸார் கொஞ்சம் கண்டிப்பு தான். வாசலருகே நின்று கொண்டு ஸார், ஸார் என்று இருவரும், ஒரு ’ஐயோ பாவம்’ முகபாவனையுடன் இழுக்கவும், சரி, போனாப் போகுது, முதல் நாள் வேற, நல்லா படிக்கற பொண்ணுக தானே என்று, ஒரு எச்சரிக்கையுடன் அவர்களை உள்ளே அனுமதித்தார்.

இருவரும் ஹப்பாடா என்று வகுப்புக்குள் நுழைய, முதல் பென்ச்சில் அமர்ந்து கொண்டு, இவர்கள் இருவரையும் முறைத்த படி இளமதி…படிய வாரிய தலை முடி…எப்போதும், திருநீரும் குங்குமுமாகத் தான் காட்சி அளிப்பாள். அனுவும், கவிதாவும், அருவி போல என்றால், இளமதி, தெளிந்த நீரோடை போல. எப்பொழுதும் ஒரே மாதிரி, ஒரே சீராய் ஓடிக் கொண்டு, எந்த வித சலசலப்பும் இல்லாமல், ஆனால் ஆழ்ந்த சிந்தனைகளோடு இருக்கும் ஒரு பெண்…இல்லை இல்லை… டீச்சர்!!! இப்படி தான் அனுவும் கவிதாவும் சொல்வார்கள்.



கவிதா ஊர் பொள்ளாச்சி அருகே ஒரு கிராமம், விவசாயக் குடும்பம். நல்ல கல்விக்காக, சிறு வயதிலிருந்தே விடுதி வாசம். அதனால், அவள் வாழ்வில், எப்போதுமே நண்பர்களுக்கென்று மிக மிக முக்கிய இடம் உண்டு. இளமதி ஊர் திண்டுக்கல் அருகே காந்தி கிராமம்…அம்மா, அப்பா இருவருமே தமிழ் பேராசிரியர்கள். அனுவோ பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்க நாட்டில். ப்ளஸ் ஒன் முதல் தான், பாட்டியுடன் அந்த ஊரில் வசிக்க ஆரம்பித்திருந்தாள்.

இப்படி எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த அவர்கள் மூவரும், கல்லூரிக்கு வந்த நாள் முதல், ஒன்றாகவே தான் சுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் எப்படி, ஏன் நண்பர்களானார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், கல்லூரியின் முதல் நாள், மற்ற இருவர் அமர்ந்திருந்த பென்சில் சென்று அமர்ந்தது தான் செய்த பாக்கியம் என்று தான் மூவருமே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதோ இதோ என்று மூன்றாம் ஆண்டும் வந்தாச்சு. அன்று தான், மூன்றாம் ஆண்டின் முதல் நாள். வழக்கம் போல், இன்டர்வெல்லில், கேண்டினில் மூவரும் ஆஜர்.
அனு, “ஹே…இன்னிக்கு ட்ரீட்…” தொட்டதற்கெல்லாம், ட்ரீட் கேட்பதும், கொடுப்பதும் அனுவுடைய பகுதி நேரத் தொழில்.

இளமதி, “எங்கடா இன்னும் ஆரம்பிக்கலையேன்னு பாத்தேன்…சொல்லுங்க, இன்னிக்கு என்ன?”

கவிதா, “ஹே…வெய்ட், வெய்ட்…நான் சொல்றேன், நான் சொல்றேன்…இன்னிக்கு ஃபர்ஸ்ட் டே, அதான அனு?”

அனு, “naa…bad guess”

இளமதி, “ஹாங்ங்…நாம இனிமே சூப்பர் சீனியர்ஸ் ஆய்ட்டோம்…அதான?”

அனு, “இன்னும், ஃபர்ஸ்டு இயர்ஸே வரல, அதுக்குள்ள என்ன சூப்பர் சீனியர்ஸ்?”

கவிதா, “ஹான்…கண்டு பிடிச்சுட்டேன்…இன்னிக்கு லேட்டா, லேட்டஸ்டா வந்தமே, அதுக்கு…”

அனு, “ஹ்ம்ம்…குட் ரீசன்…ஆனா, அதுவும் இல்ல…”

இளமதி, “இதுல பெருமை வேறயா? என்னன்னு சொல்லு அனு…”

அனு, “இன்னிக்கு வீட்ல இருந்து வந்துருக்கனால, ரொம்ப நாளைக்கு அப்புறம் கவி, குளிச்சுட்டு காலேஜ் வந்துருக்கா…அதுக்கு நான் ட்ரீட் குடுக்கறேன்…” சொல்லி விட்டு அனு சிரிக்கவும், இளமதியும் அவளுடன் சேர்ந்து கொண்டாள். “பாவி…கொரங்கு, பன்னி” என்று கவிதா சிணுங்கவும், அவர்கள் சிரிப்பு மேலும் தொடர்ந்தது.

இப்படியே சிரிப்பும், கூத்துமாகவே நகர்ந்தது அந்த வாரம். வெள்ளி கிழமை, வழக்கம் போல பாலாவை அழைத்துக் கொண்டு கல்லூரியை வந்தடைந்தாள் அனு. வண்டியை பார்க் செய்யப் போனவள், அவளுக்காக இளமதி காத்துக் கொண்டிருப்பதை பார்த்து, “இளம்ஸ்…நீ எப்படி? மணி எட்டேகால் தான் ஆச்சா? என் வாட்சுல 8.26 காட்டுது?” என்றவாரு தன் வாட்சை பார்த்தாள் அனு.

“இல்ல, அனு…இன்னிக்கு லேட் ஆய்டுச்சு…”

“ஹய்யயோ, அப்ப இன்னிக்கு மழை தான்…ஜர்கின் கூட எடுத்துட்டு வரலையே…சரி, சரி, எங்க அந்த கவி கொரங்கு? இன்னிக்கும் ஃபர்ஸ்ட் பீரியட் கட்டா?”

“என்னது நான் கொரங்கா? நீ தான் பன்னி…” எங்கிருந்தோ தீடிரென்று அங்கு வந்து நின்றாள் கவிதா.

இளமதி, “காலங்காத்தால ஆரம்பிக்காதீங்க…ஆமா அனு! அது…அந்த பாலக்குமார் தான? நம்ம சீனியர்?”

“ஆமா இளம்ஸ்…நான் தான் சொன்னனே, அவனும் இப்ப எங்க ஃப்ளாட்ல தான் இருக்கான்…”

“ஓஹ்ஹ்…” எதுவும் பேசாமல் ஒரு வித சிந்தனையுடன் இளமதி வகுப்பறையை நோக்கி நடக்கவும், கவிதாவும், அனுவும் எப்பொழுதும் போல் ஒருவர் காலை ஒருவர் வாரிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் அவளை தொடர்ந்தனர்.
சில வினாடிகள் பொறுத்து இளமதி, “அனு…நீ ஏன் அவனை வண்டில எல்லாம் கூட்டிட்டு வர?”

அனு, “அவன் பஸ்ல தான் வரனும்னு சொன்னான்…சரின்னு நான் தான் தினமும் என்னோடயே வந்துடுன்னு சொன்னேன்…”

பெரும் அதிர்ச்சி அடைந்தவளாய் இளமதி, “என்னது??? தினமுமா? ஏன் அனு இப்படி எல்லாம் பண்ற? ஏதோ ஒரு நாளைக்குன்னா பரவாயில்ல…எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க அனு, சில பேர் இத தப்பா கூட பேசுவாங்க…”

அனு, “என்னது? தப்பா பேசுவாங்களா? What the…இளம்ஸ்…come on!!! This is 21st century…ஒருத்தனுக்கு லிஃட் குடுத்தா தப்பா? I just…just…don’t understand”

“யு.யெஸ் இல்ல அனு இது…ஒரு பொண்ணும், பையனும் பேசிக்கறது கூட தப்புன்னு சொல்ற ஊர்ல இருந்து கூட இங்க வந்து படிக்கறவங்க இருக்காங்க…அவங்கள சொல்லியும் தப்பில்ல…நாம தான ஒழுங்கா இருக்கனும்? சரி, ஒரு பேச்சுக்கு சொல்றேன்…இதயே சில பேர் கதை கட்டி பேசுனா, என்ன பண்ணுவ?”

“ஹ்ம்ம்ம்… பல்ல ஒடப்பேன்…”

கவிதா “அனு! அதுக்கு பக்கத்துல டென்டல் காலேஜ் இருக்கு…அங்க படிச்சிருக்கனும்” உடனே, சூழல் மறந்து அனுவும், கவிதாவும் சத்தம் போட்டு சிரிக்க,
இளமதி, “எப்ப பாத்தாலும் சிரிப்பு தானா? இங்க பாரு அனு! உன் நல்லதுக்கு தான் சொல்றேன்…இனிமே அவனுக்கு லிஃட் எல்லாம் குடுக்காத…சொல்லிட்டேன்” என்ற படி விடு விடு என்ற நடக்க ஆரம்பித்து விட்டாள்.

குழம்பிய முகத்துடன் அனு, “கவி!!! Whats her problem?
கவிதா, “எல்லாம் பேஸிக் ஜீன் ப்ராளம் தான்…ரெண்டு தமிழ் professors பெத்த நம்ம டீச்சர் அம்மா, இப்படி பேசலைன்னா தான் அதிசயம்…”
அனு, “ஹய்யோ…டீச்சர் திரும்பி நின்னு மொறைக்குது கவி…வா சீக்கரம்”
ஆனால் அங்கிருந்து நகராமல் விஷமமான முகத்துடன் கவிதா, “ஹே….ஒரு வேளை இப்படி இருக்குமோ? Actually, இளம்ஸ் is J on you…”
“You mean Jealous?”
“ஆமா…அந்த பாலா பையன் வேற பாக்கறதுக்கு கொஞ்சம் நல்லா இருக்கானா…” என்று சொல்லி விட்டு சிரிக்க ஆரம்பித்தாள் கவிதா.
அனு, “என்னது? நம்ம சாமியார் இளமதியா? கவி! என்ன வார்த்தை சொல்லி விட்டாய்? அபச்சாரம், அபச்சாரம்…ஹே…இரு, இரு…என்ன சொன்ன…என்ன சொன்ன? அப்படியே சைடு கேப்ல அவன் நல்லா இருக்கான்னு சொல்ற? ஹ்ம்ம்…சொல்லு, சொல்லு, என்ன நடக்குது? ஹாங்?” மறுபடியும், சத்தமாய் ஒலித்தது அவர்களது சிரிப்பொலி.
சற்று தூரம் சென்று விட்ட இளமதி திரும்பி நின்று, “அங்க என்ன சிரிப்பு? க்ளாஸுக்கு லேட் ஆச்சு…சீக்கரம் வாங்க” என்று அதட்டவும், வேகமாக நகர்ந்தனர் இருவரும்.

இவர்கள் இப்படி என்றால், அதே நேரத்தில், நான்காம் ஆண்டு வகுப்பறையில்...
“டேய் பாலாஆஆ!!! என்னடா? நம்ம சானியா மிர்ஸா உனக்கு லிஃட்டு எல்லாம் குடுக்குது போல?” ஒரு நாள் கல்லூரிக்கு, தெரியாத் தனமாக ஸ்கர்ட் அணிந்து கொண்டு சென்றதால், அப்படி ஒரு பட்டப் பெயர் அனுவுக்கு, பசங்க மத்தியில்.

“லிஃட்டு என்னடா பெரிய விஷயம்? இந்த லீவ்லயே அவள கரெக்ட் பண்ணிட்டேன்…” சொல்லி விட்டு, ஸ்டைலாக காலரை தூக்கி விட்டுக் கொண்டான் பாலா.

இருங்க, இருங்க…இப்படி சொன்னதால, பாலாவ பத்தி தப்பா நினைச்சுடாதீங்க. ஏதோ நண்பர்கள் மத்தியில், ஒரு கெத்து காட்டுவதற்காக, அவன் அப்படி சொல்லி விட்டான். மற்றபடி, அவன் ரொம்ப மோசமான பையன் எல்லாம் இல்லை. கொஞ்சம் பொறுப்பில்லாத, எதையும் ஒரு ஜாலிக்காக செய்யக் கூடிய, சாதாரணப் பையன் தான்.

ஆனால் இந்த விஷயம் தெரிந்ததும், அனு செய்த காரியம் இருக்கே…’இந்த பொண்ணு எதையும் வேகத்துல செஞ்சிட்டோ, பேசிட்டோ அப்புறம் தான் யோசிப்பா…” என்று இளமதி சொல்வது கூட சரி தாங்கற மாதிரி இல்ல பண்ணிட்டா?

[தொடரும்]

Tuesday, October 7, 2008

3rd year - 2

பாகம் 1

கல்லூரியை நோக்கி நடந்தவாரே, சென்ற ஒரு வாரத்தில் அனுவிடம் தெரிந்த மாற்றங்கள் குறித்து, கவலையோடு சொல்லிக் கொண்டிருந்தாள் இளமதி.

கவிதா, “என்ன இளம்ஸ்? இப்ப வந்து சொல்ற? முன்னாடியே எனக்கு கால் பண்ணி சொல்லி இருக்கலாம்ல? போ…” கவிதா வேறு எக்ஸாம் ஹால் என்பதாலும், உடனே ஊருக்கு கிளம்பிவிட்டதாலும் அவளுக்கு அனுவை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை.

“என்னை என்ன பண்ண சொல்ற கவி? லாஸ்ட் எக்ஸாம் அன்னிக்கு, ஹால விட்டு வெளிய வந்ததுமே, உன்கிட்ட அவ சீக்கரமா போனத பத்தி சொல்ல ஆரம்பிச்சேன்…நீ தான் எதுவும் கேக்கல, அப்புறம் உடனே ஊருக்கு வேற ஓடிட்ட…”

“சரி விடு, இப்ப டிபார்ட்மெண்ட் போய் பாப்போம்…”

எதிரில் யார் வருவது என்று கூட பார்க்காமல் சென்று கொண்டிருந்த அவர்களை நிறுத்தினாள், அவர்களின் வகுப்புத் தோழி சுமித்ரா. வம்பு பேசுவதென்றால், கரும்பு சாப்பிடவது போல சுமித்ராவுக்கு.

“ஹேய் இளமதி…கன்கராட்ஸ்…நீ தான் க்ளாஸ் ஃபர்ஸ்டாமே…”

“தாங்ஸ்…” என்று கூறி உடனே அங்கிருந்து நகரப் பார்த்தாள். கவிதாவோ நிற்கக் கூட இல்லை.

“யேய்…இரு, இரு, நம்ம அனு பாத்தியா? இவ்ளோ நாளா க்ளாஸ் ஃபர்ஸ்டு வாங்கிட்டு, இப்ப அரியர்ஸ் விழுந்துடுச்சு…அனு போய் கப் வப்பான்னு யாருமே எதிர் பாக்கலைல்ல? எல்லாம் அந்த பாலானால தான், இப்ப என்னடான்னா, அதுவும் புட்டுகிச்சு…”

இளமதி பதறிப் போய் “என்ன சுமித்ரா சொல்ற?”
எட்ட நின்ற கவிதாவும், உடனே அவர்கள் அருகில் வந்தாள்.

“உங்களுக்கு தெரியாதா? இன்னிக்கு காலைல தான் யாரோ பேசிகிட்டாங்க…எதோ ப்ரச்சனையாம்…அவங்களே, இனிமே அவ்ளோ தான்னு முடிவு பண்ணிட்டாங்களாம்!”

கவிதாவும், இளமதியும் இதற்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் விக்கித்து நின்றார்கள். அவர்கள் எதிர் பார்த்தது தான், நடக்க வேண்டும் என்று ஆசைப் பட்ட ஒன்று தான். இருந்தாலும், அனுவின் நிலையை நினைத்துப் பார்த்தால், சிறிது கலக்கமாகத் தான் இருந்தது. இவ்வளவு பிரச்சனைக்கு நடுவில், நாமும் வேறு அவளோடு கோபித்துக் கொண்டு பேசாமல் இருந்தோமே, என்று நினைத்து, கவிதாவின் கண்களில் நீர் முட்டியது.

---

HOD சண்முகத்திற்கு சிறிதல்ல, பெரும் கலக்கமாகவே இருந்தது. விரக்தியின் உச்சியில், தன்னிலை அறியாமல் கத்திக் கொண்டு நின்ற சிறு பெண்ணிடம் கோபம் காட்டி அவளை சாந்தப் படுத்துவதா, இல்லை சமாதானமாக பேசிப் பார்ப்பதா என்று விளங்காமல் குழம்பித் தவித்தார். “எனக்கு ஹாஸ்டல் பிடிக்கல…இந்த காலேஜ் பிடிக்கல…இந்த ஊரும் பிடிக்கல…எதுவுமே பிடிக்கல…” மீண்டும் ஒரு முறை அவள் சொன்ன வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ள முயற்சித்து தோற்றுப் போனார்.

“அனு…பாட்டி போனப்புறம் உன்னை ஃபோர்ஸ் பண்ணி ஹாஸ்ட்டல்ல சேத்தது உனக்கு பிடிக்கல, புரியுது…valid reason…ஆனா, இந்த காலேஜ் உன்னை என்ன பண்ணுச்சு? இல்ல, இந்த ஊர் தான் என்ன பண்ணுச்சு?”

“யு.யெஸ் ல இல்லாத ஸ்கூலா, காலேஜா? அப்புறம் எதுக்கு என்னை கொண்டு வந்து இங்க தள்ளினாரு எங்கப்பா? சொல்லுங்க அங்கிள், சொல்லுங்க?”

“இவ்ளோ நாள் இதெல்லாம் பிடிச்சு தான இங்க இருந்த? இப்ப மட்டும் என்ன வந்துச்சு? யு. யெஸ் ல இத விட பெரிய பெரிய காலேஜ் இருக்கு, வேர்ஸிட்டீஸ் இருக்கு…ஆனா, நம்ம காலேஜ், தமிழ் நாட்லயே, one of the finest. இங்க தான், நான், உங்கப்பா, உங்கம்மா எல்லாரும் படிச்சோம்…இங்க படிப்ப மட்டும் இல்ல, வாழ்கையும் கத்துகிட்டோம்…அந்த வயசுல அவனுக்கு கிடச்ச அனுபவங்கள், படிப்பினைகள், சந்தோஷங்கள் எல்லாத்தையும் நீயும் அனுபவிக்கனும்ன்னு குழந்தைத் தனமா ஆசைப்பட்டான் உங்கப்பன்…அது கூட ஒரு நியாயமான ஆசை தானே? அதுல தப்பெதும் இருக்கறதா எனக்கு தோனல…He has given you the best!!!”

“yeah…given me the best…ஹா…அங்கயே இருந்தா எங்க பொண்ணு ரொம்ப ஊர் சுத்துவாளோன்னு பயந்துட்டு, 10th முடிச்சவுடனே, என் மேல நம்பிக்கை இல்லாம என்னை இங்க அனுப்பி வச்சுருக்காரு”

“அனு! பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கனும்னு தான் எந்த அப்பாவும் நினைப்பாங்க…அதையா தப்புன்னு சொல்ற? இதுக்கு மேல என்னால உன்ன ஹேன்டில் பண்ண முடியாது…உங்கப்பா கிட்ட இப்ப தான் பேசினேன்…கொஞ்ச நேரத்துல கூப்பிடுவான்…நீயே அவனோட பேசிக்கோ…”

அவர் சொல்லி முடிப்பதற்குள் அவரது அலைபேசி அழகாய் பாடியது.

“ரகு தான்…நீயே பேசு…”

சிறிது நேரத்திற்கு பின் அலைபேசியோடு திரும்பி வந்த அனு, “அப்பா உங்ககிட்ட பேசனும்ன்னு சொல்றாரு”

எதிர்முனையில் ரகுநாதன், “சண்முகா…என்ன பண்றதுன்னே தெரியலப்பா…கொஞ்ச நாளாவே அவ சரியா பேசலை, எனக்கு ரொம்ப பயமா இருக்கு…ஷீலா வேற அழுக ஆரம்பிச்சுட்டா…”

“என்ன ரகு இது? நான் எதுக்கு இருக்கேன்? நான் பாத்துக்கறேன்…”

“இல்ல சண்முகா…போதும், படிப்பு அது இதுன்னு தனந்தனியா அவள விட்டு வச்சிருந்தெல்லாம் போதும்…ரொம்ப டிப்ரெஸ்டா இருக்கா…எங்கம்மா போனது இவ்ளோ தூரம் பாதிச்சிருக்குன்னா, நாங்க கூட இல்லாதது தான்ப்பா காரணம்…தப்பு பண்ணிட்டேன்…”

அது மட்டுமே காரணமில்லை என்று நண்பனிடம் எப்படி சொல்வது என்று தயங்கிக் கொண்டிருந்தவரிடம் அடுத்த குண்டை தூக்கிக் போட்டார் ரகுநாதன்.
“நான் டிக்கட் பாக்கறேன்…உடனே வந்து அவள கூட்டுட்டு போறேன்…நீ கொஞ்சம் டீ.ஸி க்கு மட்டும் ஏற்பாடு பண்ணிடுப்பா…”

“என்னது டீ.ஸீ யா? என்னப்பா நீயும்? அவ தான் ஏதோ சொல்றான்னா, உனக்கென்ன பைத்தியமா?”

“இல்ல சண்முகா…என் பொண்ணு இவ்ளோ டிப்ரெஸ்டு ஆகி நாங்க பாத்ததில்லை…அவ படிப்பு முக்கியம் தான், ஆனா அத விட அவ தான் எங்களுக்கு முக்கியம்…படிப்ப எப்ப வேணா கண்டின்யு பண்ணிக்கலாம்…”

அரை மனதாக சண்முகமும் நண்பனிடம் விடை பெற்று, இனைப்பை துண்டித்தார்.
பின்பு அனுவிடம், “சரி ஓகே அனு…யோசிச்சு முடிவு பண்ணுவோம்…ஹ்ம்ம்… இப்ப மணி என்ன? பன்னன்டா? ஆண்ட்டிய லஞ்சு ரெடி பண்ண சொல்றேன்…சாப்டுட்டு ரெஸ்ட் எடு, இப்ப ஹாஸ்டலுக்கெல்லாம் போக வேண்டாம்.”

“இல்ல அங்கிள்…வந்து…எனக்கு எங்க ஃப்ளாட்டுக்கு போகனும்…”

“அங்க போய் என்ன பண்ண போற?”

“இல்ல, கிளம்பறதுக்கு முன்னாடி பாட்டியோட திங்ஸ் எல்லாம் கொஞ்சம் எடுக்கனும்…அதான்…”

“எனக்கு வேற 1.30 டூ 5.30 ஒரு மீட்டிங் இருக்கேம்மா…சரி ஒன்னு பண்ணுவோம்…நீ நம்ம வீட்ல போய் சாப்டுட்டு ரெஸ்ட் எடு, 5.30 க்கு நானே உன்னை அங்க கூட்டிட்டு போறேன்…”

“இல்ல அங்கிள்…நானே போறேன்…ஆண்ட்டி கிட்ட டின்னருக்கு வரேன்னு சொல்லிடுங்க…”

மீண்டும் மீண்டும், கிளிப்பிள்ளை போல் சொன்னதையே சொல்பவள் மேல் எரிச்சல் மூண்டது அவருக்கு, கடுமையான குரலில், “நான் தான் உன்ன கூட்டிட்டு போறேன்னு சொல்றன்ல? அப்புறம் எதுக்கு அங்க தனியா போகனும்னு பிடிவாதம் பிடிக்கற?”

“இல்லல்ல, நான் கவிதா, இளமதி யாரையாச்சும் கூட்டிட்டு போலாம்னு தான் இருக்கேன்…”

“சரி, உன் இஷ்டம்…But remember, sharp 5.30, I am expecting you here…ok?”

“ஓகே அங்கிள்…”

---

அவசர அவசரமாக, படிகளில் ஏறி அவர்களது டிபார்ட்மெண்ட் தளத்துக்கு சென்ற இளமதியும், கவிதாவும், அந்த தளம் முழுக்க தேடிப் பார்த்தும், அனுவையோ HOD யையோ கண்டு பிடிக்க முடியாமல் அனுவை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர்.

“The subscriber you are trying to reach is currently switched off”

---

மணி, 12.15

ஷோபா அபார்ட்மெண்ட்ஸ், உயர்ந்து கம்பீரமாய் நின்றிருந்த அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் அமைந்திருந்த அவர்களது ஃப்ளாடிற்குள் நுழைந்தாள் அனு.

ஐந்து வருடங்களாக, அவளும் அவள் பாட்டியும் வாழ்ந்த, இல்லை இல்லை சிரித்து, மகிழ்ந்து, ஆடி, பாடி, விளையாடி, குதூகலித்த வீடு.
ஆனால், இன்று…அதற்கு சாட்சியாய் இருந்தது அந்த வீட்டின் செங்கல்கள் மட்டுமே!

உடலை துறந்த பின்னும், அனு நெஞ்சில் அன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருந்த அவள் பாட்டி, அழகாக சிரித்துக் கொண்டிருந்தார், சுவற்று ஆனியில் தொங்கியவாறே.

அனு! ஆறு மாதங்களுக்கு முன்பு, கவலை என்றால் என்னவென்றே தெரியாமல், பட்டு சிறகை விரித்து, சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி… அப்பா, அம்மா, பாட்டியின் செல்லக்கட்டி…க்ளாஸ் டாப்பர்…எல்லோரும் பார்த்து ஏக்கப் படும் அளவிற்கு கவிதா, இளமதியின் நட்புக்கு சொந்தக்காரி.

ஆனால் இன்று, காதல் தோல்வியில் சுக்கு நூறாக உடைந்து போன இதயம்… பாட்டி இல்லாத வெறுமை… அப்பா, அம்மா உடன் இல்லாத தனிமை…அது வரை வாழ்நாளில் அனுபவப் பட்டிராத பரிட்சை தோல்வி…நண்பர்களை பிரிந்த துயரம்…” இப்படி அத்தனை கழிவிரக்கங்க எண்ணங்களும், இரக்கமே இல்லாமல் அவளை ஆட்கொள்ள, டிப்ரஷனின் உச்ச கட்டதில் அனு!

ஆனால், இது எதுவுமே அப்போது அவள் மனதில் ஓடவில்லை. அவள் மனதில் அப்போது இருந்ததெல்லாம் ஒரே ஒரு கேள்வி தான்.

“மணி இப்ப பன்னன்டே கால்...மறுபடியும் என்னை 5.30 க்கு தான் தேடுவாங்க…அதுக்குள்ள சாகனும்னா, அதுக்கு என்ன வழி?”

சாகனும்ன்னு முடிவெடுக்கற அளவுக்கு அப்படி என்ன தான் அவளுக்கு பிரச்சனை? பெருசா, ஒரு பிரச்சனையும் இல்லங்க…எல்லாருக்கும் சாதாரணமா வர பிரச்சனைக தான். ஆனா, எல்லாமே ஒரே சமயத்துல சேந்து வந்ததுல, அனு ரொம்பவே சோந்து தான் போய்ட்டா பாவம்…

[தொடரும்]

Sunday, October 5, 2008

3rd year - 1

"ஹேய்!!! ரிஸல்ட் வந்துடுச்சு… ரிஸல்ட் வந்துடுச்சு…" யாரோ உச்சஸ்தாதியில் கத்தவும், ஹாஸ்டல் முழுதும் பற்றிக் கொண்டது பரபரப்புத் தீ!

’தட தட தட’ ஹாஸ்ட்டலே அதிரும் அளவிற்க்கு சத்தம். விரித்து விட்ட கூந்தலோடு ஓடிக் கொண்டிருந்தாள் கவிதா.

"கவி! மெதுவா... இப்ப என்ன அவசரம்?" அதட்டும் குரலில், ஆனால் அமைதியின் திருவுருவாய் இளமதி.

"இல்ல இளம்ஸ், அப்புறம் சிஸ்டமே கிடைக்..."

அவர்களை கடந்து சென்ற அனுவை அப்போது தான் பார்த்தாள்...மேலே எதுவும் பேசாமல் அமைதியாய் அந்த இடத்தை விட்டு வேகமாய் நகர்ந்தாள் கவிதா.

இளமதி சற்றே தயங்கி நின்று, "அனு...செம் ரிஸல்ட்ஸ் வந்தடுச்சு...வா போய் பாக்கலாம்"

அவர்களை பார்த்தது போல் எந்த வித முகமாற்றமும் காட்டாமல், இளமதி பேசியது காதில் விழாதது போல், ஏதோ கனவில் நடப்பது மாதிரி மாடிப் படிகளில் ஏறலானாள் அனு.

முகம் கடுகடுக்க கவிதா, "உனக்கு அறிவே இல்லையா இளம்ஸ்? இப்ப எதுக்கு அவ கிட்ட போய் பேசி இப்படி வாங்கிக் கட்டிக்கற? அவ நம்மல மதிச்சாளா பாரு?"

இளமதி, "இல்ல கவி...உனக்குத் தெரியாது...அனு ஒரு வாரமாவே ரொம்ப ஒரு மாதிரயா இருந்தா..."

"அவ எப்படி இருந்தா உனக்கென்ன? “

“கவி…அவ நம்ம ஃபெரண்டு்!!!”

“ஹ்ம்ம் பெரிய ஃபெரண்டு…”

“சரி, சரி மறுபடியும் ஆரம்பிக்காத, வா போலாம்…”

எப்போதும் போல, இளமதியும் கவிதாவும் எதிர்பார்த்த மதிப்பெண்களே வாங்கியிருந்தாங்க.

நிம்மதி பெருமூச்சுடன் அந்த வின்டோவை மூடப் போன கவிதாவை, தடுத்தாள் இளமதி.“ஹே கவி…ஒரு நிமிஷம்…க்லோஸ் பண்ணிடாத…இரு அனுவோட மார்க் என்னன்னு பாப்போம்…”

அவளை முறைத்து விட்டு, அந்த வின்டோவை க்லோஸ் செய்ய போனவளின் கையை பிடித்து நிறுத்தி, மெளஸை பிடிங்கினாள் இளமதி.

அனுவின் ரோல் நம்பரை அடித்ததும், திரையில் தெரிந்த அனுவின் மதிப்பெண்களை பார்த்துக் கொண்டே வந்தர்வர்களுக்கு, கடைசியில் இருந்த மதிப்பெண்னை பார்த்ததும், ஒரு நிமிடம் அவர்கள் கண்களையே சந்தேகப்பட்டனர்.

எல்லா பாடங்களிலும் ஓரளவு நல்ல மதிபெண்களே இருந்த போதும், கடைசி பரிட்சையில் மட்டும், F என்று இருந்தது.

கவிதாவின் முகத்தில் ஆச்சர்யம், கூடவே அதிர்ச்சியும். ஆனால் இளமதியின் முகத்திலோ எப்போதும் இருக்கும் அமைதி, அதில் கொஞ்சம் வருத்தமும் தோய்ந்திருந்தது.

கவிதா, “என்ன இளம்ஸ்? F ன்னு காட்டுது…அனு நம்பர் தான்…ஏதோ தப்பா இருக்குமோ?”

“இல்ல கவி, அனு மார்க் தான்…” அன்று ஒரு மணி நேரத்திலேயே எக்ஸாம் ஹாலை விட்டு அரக்கப் பரக்க ஓடிய அனுவின் குழம்பிய முகம் இளமதி கண் முன்னால் ஒரு முறை தோன்றி மறைந்தது.

“வா கவி, போய் முதல்ல அனு எங்கன்னு பாப்போம்…”

அறை எண் 306, திறந்தே தான் கிடந்தது…ஆனால் அனுவை தான் காணவில்லை. அவளை அழைப்பதற்காக, கைபேசியை எடுத்த கவிதாவை நிறுத்தியது, அந்த ஜூனியர் பெண்ணின் குரல்.

“கவிதாக்கா…அனுக்காவையா தேடறீங்க? HOD வரச் சொன்னார்ன்னு நான் தான் இப்ப வந்து சொன்னேன், காலேஜுக்கு தான் போயிருப்பாங்க…”

----

பெரு மழையாய் பூமிக்கு வருகை தரும் முன், மை தீட்டி ஆயத்தமாகிக் கொண்டிருந்தது மேகம். போதாகுறைக்கு, துணைக்கு பலமான காற்றை வேறு அழைத்துக் கொண்டது. காற்றின் தூதுவனாய், எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு காய்ந்த சருகு, அனு மேல் பட்டு கீழே விழுந்தது.

தூக்கத்தில் நடப்பது போல், கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்த அனு, அந்த உலகத்திலே இல்லாதை போல் ஒரு இலக்கே இல்லாமல் நடந்து, இல்லை இல்லை மிதந்து சென்று கொண்டிருந்தாள்.

“No anu, I am not ready for any commitment now…”

“இப்ப கூட சொன்றேன்…நான் உன்ன லவ் பண்றேன்…அதுக்காக…உன்னை கல்யாணம் பண்ணிக்கனும் எந்த அவசியமும் இல்லயே…”

பாலா சொன்னதெல்லாம் மறுபடியும், மறுபடியும் அவள் காதுகளில் நாராசமாய் ஒலித்தது. அப்போது மட்டும் அல்ல, எவ்வளவு முறை மறக்க முயன்றும், கடந்த வாரம் முழுக்க, அவள் என்ன வேலை செய்தாலும், தூங்க முயற்சித்தாலும் கூட, அவனின் குரல் அவள் தலைக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே தான் இருந்தது.

அன்று காலையில் அவனை ஹாஸ்டல் ஜன்னல் வழியே பார்த்த போது கூட, அவளை பார்ப்பதற்காக தான் வந்திருக்கிறான் என்று பைத்தியம் போல எண்ணி எப்படி எல்லாம் பூரித்துப் போனாள்?

அவளை பார்த்த போது கூட, எதுவுமே நடக்காதது போல் அவன் பேசவும், அனு ஒரு நிமிடம் இந்த உலகத்தையே மறந்தாள். தான் தொலைத்து விட்டதாய் நினைத்திருந்த சந்தோஷம், புதையலாய் மீண்டும் கிடைத்ததை போல உணர்ந்தாள்.

“ஹேய் அனு! ஒரு வாரம் ஃபோன் எடுக்கல, கால் பண்ணல…நான் கூட அவ்ளோ தான்னு நினைச்சுட்டேன்…க்ரேட் யார்…நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?”

பல வித உணர்சிகள் பூக்கோலம் இட்டது அனுவின் முகத்தில், “எனக்கு தெரியும்…எனக்கு தெரியும் பாலா…இந்த ஒரு வாரத்துல நீ என்ன மிஸ் பண்ணுவேன்னு…” மேலே பேச முடியாமல் தினரிய அனுவை பார்த்ததும், மீண்டும் பழைய பல்லவியா என்றவாறு, “ஹே…வெய்ட்…வெய்ட்…நான் இப்பயும் அதே தான் சொல்றேன்…என்னோட ஸ்டான்ட விட்டு இப்போதைக்கு மாறதா இல்ல, …புரிஞ்சுக்கோ அனு…எவ்வளவோ இருக்கு வாழ்க்கைல என்ஜாய் பண்ண, அத விட்டுட்டு, இப்பயே கல்யாணம், அது இதுன்னு உயிர வாங்காத, ப்ளீஸ்…”

மழை தூர ஆரம்பித்ததை கூட கவினிக்காமல், நனைந்து கொண்டே எங்கோ சென்று கொண்டிருந்த அவளை தடுத்து நிறுத்தியது HOD சண்முகத்தில் குரல்.

“அனு! எங்க போய்ட்டு இருக்க? சரி சரி, வா என் ரூமுக்கு போய் பேசலாம்”

“அனு! ரிஸல்ட்ஸ் பாத்தியா?”

“---“

“உன்ன தாம்மா கேக்கறேன்…ரிஸல்ட்ஸ் பாத்தியா?”

குரலை உயர்த்தி அவர் கேட்கவும், அனு மெதுவாக, “என்ன ரிஸல்ட்ஸ் அங்கிள்?”

“என்ன ரிஸல்ட்ஸா? நீ இன்னும் பாக்கவே இல்லயா? செம் ரிஸல்ட்ஸ் தான் சொல்றேன்…ராமமூர்த்தி ஸார் வந்து சொல்லவும், ஒரு நிமிஷம் அப்படியே தூக்கி வாரி போட்டுடுச்சு…ஐஞ்சு செமஸ்டர்லையும், க்ளாஸ் ஃபர்ஸ்ட், இப்ப ஒரு சப்ஜட்ல பெயில் ஆகுற அளவுக்கு என்ன தான் நடந்துச்சு?”

அனு தலையை குனிந்து கொண்டு எதுவும் பேசப் பிடிக்காதது போல் நிற்கவும், “சொல்லு அனு…சொல்லு, எக்ஸாம் அன்னிக்கு ஒரு மணி நேரத்துல போய்ட்டியாம்…”

அனுவிடம் இருந்து அதற்கு மேல் பதிலை எதிர்பார்க்காதவர் போல சண்முகமே தொடர்ந்தார், “பாலான்னு ஒரு ஃபைனல் இயர் பைனனோடு வேற சுத்தறியாம்? இதெல்லாம் என்ன அனு? இது வரைக்கும் ஒரு HOD மாதிரி உன்கிட்ட பேசியிருக்கேனா? You are my best friend’s daughter!!! எனக்கும் பொண்ணு மாதிரி தாம்மா…first, understand that I am answerable to your dad!!! ரகு வந்து என்கிட்ட கேட்டா, நான் என்ன பதில் சொல்றது? என்ன ப்ரச்சனை உனக்கு? Give me one solid reason அனு!!!”

வெடித்திச் சிதறும் எரிமலை போல், “எனக்கு ஹாஸ்டல் பிடிக்கல…இந்த காலேஜ் பிடிக்கல…இந்த ஊரும் பிடிக்கல…எதுவுமே பிடிக்கல…என்னால இதுக்கு மேல முடியாது, என்ன விட்டுடுங்க…”

அதற்கு மேல் பேச முடியாமல், கடந்த ஒரு வாரமாய் நெஞ்சில் தேக்கி வைத்திருந்த பாரமெல்லாம் அழுகையாய் ஊற்றெடுத்தது. உடைந்த கண்ணாடித் துண்டு போல சில்லு சில்லாய் உடைந்திருந்தது அவளது தன்னம்பிக்கை.

[தொடரும்]