Sunday, September 21, 2008

கூடப் பிறந்தவன்(ள்)…

***
தனக்கு விவரம் தெரிந்த நாள் முதல், இன்று வரை எனக்கு இன்னொரு தாயாக இருக்கும் என் அக்காவுக்காக…
***

“அம்மா…” ஆசையாக அழைத்துக் கொண்டே வீட்டிற்க்குள் நுழைந்தான் அருண்.

“கண்ணா!!! வந்துட்டியா…அம்மா இதோ வரேன்…பாப்பாவ சாப்ட வச்சுட்டு இருக்கேன்…” ஏதோ ஒரு உள் அறையில் இருந்து அம்மாவின் குரல் ஒலித்தது.

பையை சோஃபா மீது எறிந்து விட்டு, அவனும் அதில் சரிந்தான்.

அருண்…இரண்டாம் வகுப்பு படிக்கும் சுட்டி பையன். அம்மா, அப்பாவின் செல்லகட்டி.

“அருண்…எத்தன தடவை சொல்லி இருக்கேன்? பேக அப்படியே சோஃபா மேல போடாதன்னு? பாரு, இன்னும் ஷூ கூட கலட்டல…இன்னும் சின்ன பையன் மாதிரி….” கையில் தங்கையோடு வந்த அம்மா அப்படி சொன்னதும் அருண் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

இதே அம்மா தான், அவனை பஸ் ஸ்டான்டில் இருந்து தினமும் அழைத்து வந்து, வீட்டிற்கு வந்ததும், அவன் ஷூ, ஸாக்ஸ் எல்லாம் கலட்டி விட்டு, எதாவது சாப்பிட குடுத்து, ஹோம் வர்க் செய்து, அவனோடு விளையாடி, தூங்க செய்வார்.

இப்போ இந்த பாப்பா வந்தனால, அம்மா என்ன கண்டுக்கவே மாட்டிங்கறாங்க…
நினைக்க, நினைக்க அருணுக்கு விக்கி விக்கி அழ வேண்டும் போல இருந்தது. அதற்குள் மீண்டும் ஒலித்தது அம்மாவின் குரல்,

“அருண் கண்ணா…ஷூ வ கலட்டிட்டியா? அங்க ஷெல்ஃல பிஸ்கட் இருக்கும் பாரு, எடுத்து சாப்ட்டுட்டு ஹோம் வர்க் பண்ண ஆரம்பி…அம்மா பாப்பாவ தூங்க வச்சிட்டு வந்து பூஸ்ட் போட்டு குடுக்கறேன்…”

கிட்சனுக்கு சென்று அலமாரியை திறந்தான்…அவனுக்கு ரொம்ப பிடித்த ஆரஞ்சு க்ரீம் பிஸ்கட்…ஆனால் சாப்பிட தோன்றவில்லை. நேராக திரும்பி வீட்டுக்கு வெளியே ஓடினான்.

“டேய்…எங்க போற??? பூஸ்ட் குடிச்சுட்டு போ…”

“நான் விளையாட போறேன்…” கத்தி விட்டு வீட்டுக்கு வெளியே ஓடினான்.

கால் போன போக்கில் நடந்தான் அருண். அவனுக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கல.

’ச்சே…இந்த பாப்பா ஏன் தான் பொறந்ததோ? யாருமே என்ன கண்டுக்க மாட்டிங்கறாங்க…’

மனதின் பாரம் தொண்டையை அடைக்க, ’அம்மாஅ….”என்று ஒரு முறை உரக்க சொல்லி பார்த்தான். கண்களில் நீர் புரண்டு ஓடியது.

நீ அளித்த உணவை கூட பகிர்ந்துண்டதில்லை…
இப்போது உன்னையே பகிர்ந்து கொள்ள சொன்னால்,
நீ அளிக்கும் உணவு கூட இறங்க மறுக்கிறதம்மா…

என் தலை கோதும் உன் விரல்கள், எனக்கு மட்டுமே சொந்தம்…
என்னை தூங்க வைக்கும் உன் தாலாட்டு, எனக்கு மட்டுமே சொந்தம்…
நான் பற்றி திரியும் உன் சேலைத் தலைப்பு, எனக்கு மட்டுமே சொந்தம்…

நான் மட்டுமே தூங்க, மறுபடி உன் முழு மடி கிடைக்குமா அம்மா?

அருண் வீட்டிற்குள் சென்ற போது, குழந்தை மட்டும் ஒரு அறையில் தனியாக தூங்கி கொண்டிருந்தது. அம்மா கிட்சனில் ஏதோ வேலையாக இருந்தார்.

மெதுவாக குழந்தை அருகில் சென்று அதன் விரலை பிடித்து முறுக்கினான். வீறிட்டு அழுத தன் தங்கையை பார்த்ததும், துக்கமும், குதூகலமும் ஒரு சேர வந்தது அவனுக்கு. அம்மா அங்கு வருவதற்குள் அந்த அறையை விட்டு வெளியே ஓடினான்.

ஞாயிற்றுக் கிழமை விடுமுறை…’ஒரு நாள் தான கிடைக்குது’ என்று பாப்பாவை கொஞ்சிக் கொண்டிருந்த அப்பா, என்னேரமும் ஏதோ வேலையாகவே இருக்கும் அம்மா… இவர்களுக்கு இடையில் பெரியப்பா, பெரியம்மாவின் குரல் கேட்க, கதவருகே ஒடினான் அருண்.

அவன் பெரியம்மாவுக்கு ரொம்ப செல்லம். அவரை பார்த்ததும், அவனுக்குள் ஒரே குதூகலம்.

“அருணு….எப்டி தங்கம் இருக்க?” ஆசையாக வினவிய பெரியம்மாவை அப்படியே கட்டிக் கொண்டான்.

அவனை தூக்கிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த பெரியம்மா, “அட டே….தங்க பாப்பா அதுக்குள்ள குளிச்சாச்சா…” அவனை இறக்கி விட்டு, அப்பா கையில் இருந்து குழந்தையை பெற்றுக் கொண்டார்.

கானாததை கண்டது போல குழந்தையை அவர் கொஞ்சுவதை பார்த்து,
’பெரியம்மாவுமா…’ என்பது போல வெறித்துக் கொண்டு எதுவுமே பேசாமல் நின்று கொண்டிருந்தான்.

குசலம் விசாரிப்பெல்லாம் முடிந்த பின்னர் அவனது அப்பாவும், பெரியப்பாவும் கிளம்பி எங்கோ வெளியில் சென்றனர்.

“ஹ்ம்ம்…நல்ல வேளை, பொண்ணாவது தம்பி கலர்ல பிறக்காம, உன் கலர்ல பிறந்துச்சு…” இது அவன் பெரியம்மா…

உடனே அவன் அம்மா, “ஆமாங்க்கா…அவர் கூட அதே தான் சொல்லிட்டு இருந்தாரு…” என்று சொல்லி சிரித்தார்.

அவன் கைகளை இப்படி, அப்படி ஆட்டிப் பார்த்தான். மாநிறமான அவன் தோல், அப்போது மட்டும் ஏனோ அட்டை கரியாக தோன்றியது. முதன் முறையாக அவன் நிறத்தின் மீது வெறுப்பு வந்தது. அந்த வெறுப்பு, தங்க கலரில் ஜொலித்துக் கொண்டிருந்த தங்கை மீது திரும்பியது.

பெரியம்மா அருகில் சென்று அமர்ந்து கொண்டு, அவர் கவனிக்காத நேரத்தில் தன் தங்கையை நறுக்கென்று கிள்ளினான்.

பெருங்குரலெடுத்து குழந்தை அழும் முன்பு, படீர் என்று அவன் கால்களில் இடியென விழுந்தது ஒரு அடி. அடித்தது அவன் அம்மா தான், “ஏய்…இப்ப எதுக்குடா பாப்பாவ கிள்ளின? பிச்சுருவேன் பிச்சு…ராஸ்கல்…”

பெரியம்மாவிம் சமாதானம் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், அழுது கொண்டே வீட்டை விட்டு ஓடினான்.

தன் அப்பாவுடன் வெளியே சென்று விட்டு தனியாக திரும்பிய பெரியப்பா மீது மோதினான்.

“அருண்…ஏன்டா கண்ணா, அழற?”

“ஹ்ம்ம்ம்…ஹ்ம்ம்…அம்மா….அம்மா…அடிச்சுட்டாங்க…” அழுகையினூடே திக்கித் திக்கி சொன்னான்.

“அடிச்சிட்டாங்களா? வா….என்னன்னு போய் கேப்போம்…”

“வேண்டாம்…நான் உள்ள வரல…”

“சரி வா…இந்த ஊஞ்சல்ல உக்காந்துக்குவோம்…” வாசலருகே இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு, அவனை தன் மடியில் வைத்துக்கொண்டார் அவன் பெரியப்பா.

“என்னடா அருண் செஞ்ச? அம்மா தான் உன்ன அடிக்கவே மாட்டாங்களே…”

“நான்… நான்…பாப்பாவ கிள்ளி வச்சுட்டேன்…”

“அச்சச்சோ…அப்படி செய்யலாமா? தப்பில்லை? நீ good boy தான?”

“எனக்கு அவள பிடிக்கல…பெரீப்பா… பெரீப்பா…ஹ்ம்ம்ம்… ஹ்ம்ம்ம்…நீங்க…அந்த பாப்பாவ உங்க வீட்டுக்கு தூக்குட்டு போய்டறீங்களா?”

“உன் தங்கச்சி டா…”

“எனக்கொன்னும் தங்கச்சி வேணாம்…”

“அப்படி எல்லாம் சொல்லக் கூடாது அருணு…சாமி உனக்கே உனக்காக தான் அந்த தங்கச்சி பாப்பாவ அனுப்பி இருக்காரு…தெரியுமா?”

“ஒன்னும் இல்ல…”

“ஆமாடா கண்ணா... இப்ப நீ விளையாடுறதுக்காக…பெரியவனானப்புறம் நீ பேசி சிரிக்கறதுக்காக…நீ எங்கள மாதிரி ஆனப்புறம், உனக்கொன்னுன்னா ஓடி வர்ரதுக்காக…வயசாகி, அம்மா அப்பா, பெரியம்மா, பெரியப்பா எல்லாரும் செத்தப்புறமும், உனக்கு துணைக்கு தங்கச்சி மட்டும் தான்டா இருக்கும்…”

அருண் எதுவும் பேசாமல் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான்.

“உனக்கொன்னு தெரியுமா? பாப்பாக்கு ஒரு ரெண்டு வயசு ஆகுர வரைக்கும் தான் உங்கம்மா பாத்துக்குவாங்க…”

“அதுக்குப்புறம்?”

“நீ தான் பாத்துக்கனும்…சாமி என்ன தெரியுமா பண்ணுவாரு? யாரெல்லாம் குட் பாய், குட் கேர்ள்ன்னு பாத்து, அவங்களுக்கு தான், தங்கச்சி, தம்பி எல்லாம் அனுப்பி வைப்பாரு…நீ குட் பாய், அதான் உனக்கு தங்கச்சி பாப்பாவ அனுப்பி வச்சுருக்காரு…நீ என்னடான்னா எனக்கு வேணாங்கற…”

“நிஜமாவா பெரியப்பா?” ஆச்சர்யத்தில் அவன் கண்கள் விரிந்தது.

“ஆமாடா என் சிங்க குட்டி…நிஜம்மா…”

லேசாக புன்னகைத்துக் கொண்டே, “அப்டீன்னா…எங்க அப்பா, பாப்பா எல்லாம் பேட் பாய்ஸ் தான?” என்று கேட்டான்.

“ஹா ஹா ஹா….அப்படி இல்ல டா…அவங்கெல்லாம் போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணி இருக்காங்க…அதான், தம்பி தங்கச்சியா பிறந்திருக்காங்க…”

“ஹ்ம்ம்…சரி, நான் இனிமே பாப்பாவ கிள்ள மாட்டேன்…”

“கிள்ளாம இருந்தா மட்டும் போதாது, இனிமே அவள ரொம்ப பாசமா பாத்துக்கனும்… அவ தப்பு பண்ணா, திருத்தனும்…நல்லது பண்ணா, பாராட்டனும்…அவள ஜாக்கரதையா பாத்துக்கனும்…ஏன், அவ கல்யாணத்த கூட நீ தான் முன்னாடி நின்னு நடத்தனும்…அவளும் அதே மாதிரி தான் இருப்பா...உன் மேல ரொம்ப பாசமா இருப்பா…யாராவது உன்ன எதாவது சொன்னா, உடனே அவங்ககிட்ட சண்டைக்கு போவா…கல்யாணம் ஆகி குழந்தை குட்டின்னு ஆனாலும், கூட பிறந்தவன்…தாய் மாமன்ன்னு சொல்லி, அவ வீட்ல நடக்குற எந்த விஷேசத்திலையும் உனக்கு தான் முதல் மரியாதை குடுப்பா…”

எதுவுமே புரியாவிட்டாலும், ரொம்ப புரிந்தது போல கேட்டுக் கொண்டிருந்த அருண், “கூட பிறந்தவனா? நான் பொறந்து ஆறு வருஷம் ஆய்டுச்சே…அவ இப்ப தான பொறந்தா?”

“ஹா ஹா ஹா….அப்படி கேளுடா என் சிங்கக் குட்டி…கூட பிறந்தவங்கன்னா, ஒன்னா ஒரே சமயத்தில பிறந்தவங்கன்னு அர்த்தம் இல்ல…வாழ்க்கை முழுக்க கூடி வாழ பிறந்தவங்கன்னு அர்த்தம்…”

பெரியப்பா மடியில் இருந்து எழுந்து உள்ளே ஒடிய அருணிடம் , “அருண்! நான் எடுத்துட்டு போட்டா உங்க பாப்பாவ?” என்று பெரியப்பா கேட்க…

“அஸ்கு…புஸ்கு…ஆசை தோசை அப்பள வடை…அது எங்க பாப்பாவாக்கும்…” என்றபடி வீட்டிற்குள் ஓடி சென்று, தூங்கிக் கொண்டிருந்த தங்கையின் கன்னத்தில் முத்தமிட்டான் அருண்.


P.S: அக்கா அண்ணா தம்பி தங்கை இல்லாமல் ஒரே குழந்தையா இருக்கறவங்கெல்லாம், “நாங்க மட்டும் என்ன?’ ன்னு கேக்காதீங்க. அப்பா, அம்மா, சொந்த பந்தம், எல்லாருடைய பாசமும் ஒட்டு மொத்தமா கிடைக்கறதுக்கும், ரொம்பவே புண்ணியம் பண்ணி இருக்கனும்.

Thursday, September 18, 2008

காதல் எனப்படுவது யாதெனில்…


இந்த தொடர் விளையாட்டில் என்னை மாட்டி விட்ட திவ்யப்ரியாவுக்கு ர்ர்ர்ர்ர்ர் நன்றி (என்ன முழிக்கறீங்க? நானா தான போய் சரவணகுமார் தொடர் பதிவுல மாட்டிகிட்டேன் :-( கத்திரிக்காய், சாரி சாரி காதல பத்தி ஏதோ எழுதி இருக்கேன்…பாத்து கொஞ்சம் பாஸ் மார்க் போடுங்க…)
***

காதல் எனப்படுவது யாதெனில்…
வேறென்ன? வெறும் பேராசை தான்…
பின்னே?
கண் மூடி கண் திறக்கும் போதெல்லாம்,
நீ தெரிய வேண்டும் என்றல்லவா ஆசைப்படுகிறேன்…

***
என்ன பெரிய காதல், கத்திரிக்காய்?
இப்படித் தான் கொக்கரித்துக் கொண்டிருந்தேன்…
உன்னை பார்க்கும் வரை…
***
பல மையில்களுக்கு அப்பால் நீ சென்ற பிறகும் கூட,
என் கண்களின் உள்ளே என் உருவம் தெரிவதெப்படி?

***

காதல் என்றால் என்னவென்று,
தூக்கத்தின் ஊடே எழுப்பிக் கேட்டாலும் சொல்வேன்…
நீ என்று!!!

***

உன் மெளனங்களின் அர்த்தம் கூட புரிகிறதே…
இந்த காதல் வந்த பின்னாலே…

***

காதல் என்றால் என்னவென்பதை பற்றி
கவிதைகள் பல,
கிறுக்கிக் கொண்டே இருக்கிறேன்…
பேனாவில் மை தீர்ந்து விட்டது கூட தெரியாமல்…
சும்மாவா சொன்னார்கள்?
காதலுக்கு கண்ணில்லை என்று?

***

“காதல் எனப்படுவது யாதெனில்” இந்த தலைப்பை இரு காதலர்களிம் கொடுத்துப் பார்த்தேன் (சும்மா கற்பனையில் தான் ;-) )…
அப்போது அவர்களுக்கிடையே நடந்து ஒரு சிறு சொல்லாடல்…

காதல் என்றால்?
விட்டுக் கொடுத்தல்…

விட்டுக் கொடுத்தல் என்றால்?
எனக்கான உன் கண்ணீர்…

எனக்கான உன் கண்ணீர் என்றால்?
அன்பின் வெளிப்பாடு…

அன்பின் வெளிப்பாடு என்றால்?
பாசப் பறிமாற்றம்…

பாசப் பறிமாற்றம் என்றால்?
நேசத்தின் உச்சகட்டம்…

நேசத்தின் உச்சகட்டம் என்றால்?
நான்…

நான் என்றால்?
நீ தான்…

நீ என்றால்?
காதல்…

காதல் என்றால்?

மீண்டும் முதல் வரியில் இருந்து ஆரம்பித்து விட்டார்கள்!
அடச்சே…இப்போ நான் சொல்கிறேன் கேளுங்கள்…

காதலர்கள் என்றால்?
பைத்தியங்கள்…

***

சரி, எனக்கு தெரிந்த ஒரு நாலு பேரிடம் "காதல் எனப்படுவது யாதெனில்"…விளக்குங்கள் என்று கேட்டேன்…

அனு: அது ஒரு வலி…

கவிதா: காதல்? அதெல்லாம் சுத்த பேத்தல்…

இளமதி: அது ஒரு உணர்வு…சரியான தருணத்தில் சரியான நபர் மீது மட்டும் தான் வரணும்…

பாலா: என்ன பொறுத்த வரைக்கும் காதல் கல்யாணத்துல தான் முடியனும்ன்னு எந்த அவசியமும் இல்ல…இப்போதைக்கு, எனக்கு it’s just a time pass…அவ்ளோ தான்…

அட, யாரு இவங்கெல்லாம்ன்னு முழிக்கறீங்களா? இவங்க தாங்க, என்னோட அடுத்த தொடர் கதை “3rd year” ல வர முக்கிய கதா பாத்திரங்கள்…
கதைக்கு இந்த intro போதுமா? ;-)

விதிமுறைகள்

1. பதிவின் தலைப்பு - “காதல் எனப்படுவது யாதெனில்…” (மாற்றக்கூடாது).
2. என்ன பதிவிடலாம் - இது தான் எழுதணும் என்கிற கட்டாயம் கிடையாது. பதிவு எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம். கதை, கவிதை, நக்கல், கட்டுரை, மொக்கை………. என்ன வேணும்னா எழுதுங்க உங்கள் விருப்பம். (ஆனால் தலைப்போட கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கணும்)
3. பதிவு போட இன்னும் ஒருவரை அழைக்கணும். முன்பெல்லாம் இரண்டு மூன்று பேர் அழைக்கப்பட்டதால் தொடர் சங்கிலிகள் எங்காவது ஒரு தொடர்பு அறுந்தாலும் அவை கொஞ்சம் பயணித்தன. இங்கு ஒருவர் தான் அழைக்கப்படுகிறார் அதனால் நீங்கள் அழைப்பவரின் வசதியைக் கேட்டுவிட்டு கூப்பிடுங்கள்.

நான் அழைப்பவர் – என் அன்புத் தோழி ரம்யா

Saturday, September 13, 2008

சிக்கன் பாக்ஸ் - 4

பகுதி – 4
பகுதி 1

பகுதி 2

பகுதி 3

“டெல்லி…எத்தனையோ போராட்டங்கள பாத்த ஒரு நகரம், என் மனப் போராட்டங்களும் மறுபடியும் ஆரம்பிச்ச நகரம்”

“வேலை விஷயமா நான் டெல்லி போய் இருந்தேன்…என் காதல் எனக்கு தெரிஞ்சு, அவளுக்கும் தெரிஞ்சு, அதுக்கு அப்புறம் அந்த கலவையான உணர்ச்சி பிரபாவங்கள்ள இருந்து ஓரளவுக்கு ரெண்டு பேருமே மீண்டு வந்திருந்த நேரம்”

“டெல்லியில இருந்து அவளுக்கு ஃபோன் செஞ்சேன்…அவளுக்கு டெல்லில இருந்து என்ன வேணும்ன்னு கேட்டேன்…அவளும், விளையாட்டா, எனக்கு ஒரு தாஜ்மஹால் ஷோ பீஸ் வேணும்ன்னு சொன்னா…”

“ஹ்ம்ம், அப்புறம்?”

“தாஜ்மஹால் தான? நாளைக்கு ஆக்ரா போறேன், அங்கயே போய், கண்டிப்பா வாங்கிட்டு வந்துடறேன்னு சொன்னேன்…ஆனா அவ சிரிச்சுகிட்டே, ’இல்ல, இல்ல, எனக்கு வெள்ள கலர் தாஜ்மஹால் வேண்டாம், மஞ்சளும், மெஜெந்தா கலரும் கலந்த மாதிரி இருக்குற தாஜ் மஹால் வேணும்’ ன்னு கேட்டா…அவளுக்கு எதுவும் வேண்டாம்ங்கறத தான் அவ அப்படி என்கிட்ட சொன்னான்னு எனக்கு புரிஞ்சுது…”

“என்ன செஞ்ச? ஒரு வெள்ள தாஜ்மஹால் வாங்கி, பெயிண்ட் பண்ணி குடுத்திட்டியா?”

“ச்சே, இல்லடா…அவளுக்காக ஆசை ஆசையா தேடி, ஒரு அழகான வெள்ளை தாஜ்மஹால வாங்கினேன்…ஏனோ, உலகத்தையே வாங்கிட்டதா ஒரு இருமாப்பு, ஒரு சந்தோஷம். வாங்கிட்டு ரூம்முக்கு வந்தப்ப தான் படீர்ன்னு யாரோ அடிச்ச மாதிரி இருந்துச்சு. நட்புங்குற போர்வைக்குள்ள ஒளிஞ்சுகிட்டு அவளோட பழகிட்டு, மனசெல்லாம் நிறைஞ்ச காதலோட வாங்கின அந்த தாஜ்மஹால எப்படி அவ கிட்ட குடுக்கறது? நான் பண்றதெல்லாம் நியாயமான்னு எனக்கே தோணுச்சு”

“என்ன பண்ண அத?”

“அந்த தாஜ்மஹால அவ கிட்ட குடுக்கவே இல்ல, நானே வச்சிகிடேன்…இப்படியே மனசுக்குள்ள போராட்டங்களோட இதுக்கு மேல தொடர முடியாதுன்னு ஒரு கட்டத்துல தோனுச்சு, சரின்னு ஒரு முடிவெடுத்து, சூழல் மாறினா, எல்லாத்தையும் மறக்கலாம்ன்னு இங்க யு.யெஸ் வந்து படிப்ப கண்டின்யு பண்ணலாம்ன்னு முடிவு பண்ணேன்…”

“ஹ்ம்ம்…”

“அன்னிக்கு தான் ஆபிஸ்ல கடைசி நாள், ஷிவானி, எனக்கு முன்னாடியே படிக்கறதுக்காக, வேலைய விட்டுட்டு மும்பை போய்ட்டா…ஸோ, நாங்க ரெண்டு பேரு தான்…கடைசி நாள், பேசாம அந்த தாஜ்மஹால அவ கிட்டயே குடுத்தர்லாம்ன்னு முடிவு பண்ணேன்…அந்த தாஜ்மஹால எடுத்து அவ ட்ரா உள்ள வச்சிடேன், எப்பயும் போல ரெண்டு பேரும் காஃபிக்கு போனோம். அன்னிக்கு அந்த காஃபி ப்ரேக் முடியவே கூடாதுன்னு நான் ஆசைபட்டேன்…அவளும் அப்படி தான் நினைக்கனும்ன்னு கூட குழந்தை தனமா ஆசைப்பட்டேன்…”

“திரும்பி வந்து, அவ ட்ரா திறந்திருக்கறத பாத்தா, உள்ள இருந்த பார்சலையும் பாத்தா…”

“ஹ்ம்ம்ம்”

“என்ன பாத்து, ’என்னதிது’, அப்டீன்னு கேட்டா…நான், ’எனக்கென்ன தெரியும்? உன்னோட ட்ரா, என்ன இருக்குன்னு உனக்கு தான தெரியும’ ன்னு சொன்னேன்…”


“என்ன பாத்து செல்லமா முறைச்சிகிட்டே அந்த கவர திறந்தா, உள்ள இருந்தத பாத்து அவளுக்கு ஒரே ஆச்சர்யம்…இத எப்ப வாங்கினேன்னு கேட்டா…”

நான், “அன்னிக்கே வாங்கிட்டேன்…நீ கேட்ட மாதிரி மஞ்சள் அன்டு மெஜெந்தா கலர்ல இல்லாட்டியும், still…It’s a Tajmahal.” ன்னு சொன்னேன். ’நீ விரும்புற மாதிரியான துணை…நான் இல்ல, But still, என் மனசுல இருக்கறதும் உண்மையான காதல் தான்…’ ன்னு சொல்லத் துடிச்சேன். ஆனா சொல்லல.

“ச்சே…போடா, பேசாம மறுபடியும் சொல்லி பாத்திருந்துருக்கலாம்…”

“இல்ல ப்ரவீன், மனசும், கண்ணும் பேசாத பாஷையா உதடு பேசிட போகுது? முதல்ல இருந்தே, அவ என் காதல ஒத்துக்கணும், அவளும் என்ன காதலிக்கனும்ன்னு எனக்கு தோனினது இல்லடா, ஏன்னா…”

“உனக்கு அவள பத்தி தெரியும், அதான?”

“அதே தான்…இப்ப கூட நான் அவ கூட தினமும் பேசுறேன்…என்னோட பெஸ்டு ஃப்ரெண்டுஸ்ன்னா அதுல நிரு எப்பயுமே இருப்பா… என் அன்றாட வாழ்கைல அவளும் ஒரு அங்கமா இருக்கா…இருந்தாலும், என் முதல் காதல்ன்னா அது நிரு தான்! ஆனா, அதுக்காக தினமும், அவள நினச்சு உருகறதெல்லாம் இல்ல, இருந்தாலும், ஏதோ ஒரு தருனத்துல, ஒரு சின்ன வலி, ஒரு இதம், ஒரு துக்கம், ஒரு சந்தோஷம், ஒரு வேதனை, ஒரு பரவசம்ன்னு பல வித உணர்வுகள் வரத தவிர்க்க முடியல…”

“சரி, நீ இப்டின்னா, அவளுக்கு உன் மேல இருந்த ஒப்பீனியன் மாறவே இல்லயா?”

“இல்ல டா, இப்ப கூட ஒரு மாசம் முன்னாடி, இந்த ஷிவானி கிட்ட பேசும் போது, ஷிவானி சொன்னா, அவளும் நிருவும், ஏதோ பேசிட்டு இருந்திருக்காங்க…அப்ப என்னோட பேச்சு அடி பட்டுருக்கு, அப்ப நிரு சொன்னாலாம், ’என்ன தான் இருந்தாலும், shiva is a gem of a person’ ன்னு… அது தான் என் நிரு”

“ஹ்ம்ம்…இந்த காதல் குடுத்த தளும்புகள் இன்னும் மறையல, இன்னொரு காதல் வரதுக்கான அறிகுறியும் இப்போதைக்கு இல்ல…அதான், நான் சொல்றேன், Love is a chicken pox…”

“ஓஹ்…அப்ப கல்யாணம்ன்னு பண்ணிகிட்டா அரேஞ்சுடு மேரேஜ் தான்னு சொல்லு…”

“இல்லயே, கண்டிப்பா இல்ல, உனக்கே நல்லா தெரியும்…எனக்கு அரேஜ்சுடு மேரேஜ்ல நம்பிக்கை இல்லை, ஸோ, கண்டிப்பா லவ் மேரேஜ் தான்…”

“எப்டி டா? Chicken pox – அனாலஜி என்ன ஆச்சு?”

“சிக்கன் பாக்ஸ் ஒரு தடவ வந்தா, மறுபடியும் வர்ரது கஷ்டம் தான்…ஆனா வரக் கூடாதுன்னு சட்டமா என்ன?”

[முற்றும்]

Thursday, September 11, 2008

சிக்கன் பாக்ஸ்-3

பகுதி 1

பகுதி 2


“சில நேரங்கள்ள நாம பேச முடியாத பல வார்த்தைகள நம்ம மெளனம் பேசிடும். அன்னிக்கு முழுக்க அவ என்கிட்ட பேசவே இல்ல…”

“ஹ்ம்ம், அப்புறம் எப்ப பேசினா?”

“அவ என்கிட்ட பேசலைன்னாலும், என் மேல கோவப்பட்டு வந்த மெளனம் இல்ல அது, என் மனசு புண்படாம என்கிட்ட எப்படி மறுக்கறதுன்னு அவ யோசிச்சுட்டு இருந்தனால வந்த மெளனம்ன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சுது”

“எப்படிடா?”

“ஏன்னா, எனக்கு நிருவ பத்தி தெரியும்…அதனால, அன்னிக்கு வேலை முடிஞ்சதுமே, அவள ஆஃபிஸ் பக்கத்துல இருக்க ஒரு அழகான, அமைதியான, தெருவுக்கு ஒரு வாக் கூட்டுட்டு போனேன்…”

“ஹ்ம்ம்…”

“கொஞ்ச நேரம் அமைதியா ரெண்டு பேரும் நடந்தோம். நான் பேச ஆரம்பிக்கனும்ன்னு அவளும், அவ ஏதாவது பேச ஆரம்பிக்க மாட்டாளான்னு நானும்…இப்படியே ஒரு அஞ்சு நிமிஷம் கரைஞ்சுது.”

“ஒரு பொண்ண பாக்கறப்ப இருக்குற தைரியம்…அவளோட பேசி, பழகறப்ப இருக்குற தைரியம்…அவள தான் காதலிக்கறோம்ன்னு முடிவு பண்ணறப்ப இருக்குற தைரியம்…ஏனோ, அவ கிட்ட காதல சொல்றப்ப மட்டும் இருக்க மாட்டேங்குது…அவளா எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே, அவ கண்டிப்பா தன்னை நிராகரிச்சுடுவாங்கற குழப்பமும், பயமும் நம்ம ஊர்ல பாதி பசங்களுக்கு இருக்கு…நான் மட்டும் விதி விலக்கா என்ன? அவளுக்கு நான் பொறுத்தமானவன் இல்லைன்னு, அவ சொல்லாமலே, நானே முடிவு பண்ணிகிட்டேன்… ’ஏன்னா எனக்கு அவள பத்தி நல்லா தெரியும்…’ ன்னு என் முடிவுக்கு ஒரு காரணமும் தேடிகிட்டேன்.”

“அதனால, நான் பேச ஆரம்பிக்கறப்பயே, ஒரு ’ப்ரோபோஸல்’ மாதிரி இல்லாம, ஒரு ’கன்ஃபஷன்’ மாதிரி தான் ஆரம்பிச்சேன்…”

“நிரு, உனக்கு நிஜமாவே என்கேஜ்மெண்ட் ஆகி இருந்தா, என்னோட வாழ்த்துக்கள்…அப்படி இல்லன்னாலும், ஒரு அழகான உணர்வ…ஒரு சுகமான வலிய….எனக்கு தந்ததுக்காக, தேங்ஸ்…என் கிட்ட என்ன சொல்றதுன்னு நீ ஸ்பெஷலா எதுவும் யோசிக்க வேண்டாம், எனக்கு உன்ன பத்தி தெரியும், உன் விருப்பு, வெறுப்புகள், தெரியும்…I m not your cup of tea ன்னு எனக்கு நல்லா தெரியும்…அதனால, என் உணர்வுகள புரிஞ்சுக்கோ, என்ன ஏத்துக்கோன்னு நான் உன்ன கேக்க போறதில்லை.”

அதுக்கு நிரு, “ஷிவா…எனக்கு தெரியும்…நீ புரிஞ்சுக்குவன்னு எனக்கு தெரியும்...ஆனாலும் உன் ஃபீலிங்ஸோட விளையாடிட்டனோன்னு எனக்கு கஷ்டமா இருக்கு” ன்னு சொன்னா.

இல்லமா, அப்படி எல்லாம் இல்ல, ன்னு சொல்ல முடியல, ஆனா, ’அதுக்கு நீ பொறுப்பில்ல நிரு’ ன்னு மட்டும் சொன்னேன்.

“என்னடா, ரொம்ப நேரமா அமைதியா இருக்க? தூங்கிட்டியா?” ரொம்ப நேரமா ப்ரவீன் அமைதியாவே இருந்தான்.

“ஒன்னும் இல்ல டா, சும்மா நினைச்சு பாத்தேன்…அந்த அழகான தெரு, அதுல நீங்க ரெண்டு பேர் மட்டும்…ஹ்ம்ம்”



“ஆமா, ரொம்ப அழகா இருக்கும்…அதே தெருவில இன்னொரு விஷயம் கூட நடந்துச்சு…ஆனா, இதெல்லாம் நடக்கறதுக்கு கொஞ்சம் முன்னாடி”

“என்னது?”

“அன்னிக்கு நிருவோட பிறந்த நாள்…காலைல இருந்து ஒரு கிஃட்டு கூட கொடுக்காம, சாய்ந்தரம் அந்த தெருவுக்கு அவள ஒரு வாக் கூட்டுட்டு போனேன்…என்னோட ஃபோட்டோஸ்லயே அவளுக்கு ரொம்ப பிடிச்ச ஃபோட்ட ஒன்ன அவளுக்கு கிஃப்டு பண்னேன்”

“என்னது? உன்னோட போட்டோவா? நீ எடுத்த ஃபோட்டோவா?”

“இல்ல, இல்ல, என்னோட ஒரு சோலோ ஸ்னாப்”

“ஓஹ்ஹ்”

“அத அவ கிட்ட குடுத்தேன், ’ஹே இத வச்சுகிட்டு நான் என்ன பண்றது’ன்னு கேட்டா…”

ப்ரவீன், “அதேயே தான் நானும் கேக்கனும்ன்னு நினச்சேன்”

“இந்த ஃபோட்டவ நீ பாட்டி ஆகுற வரைக்கும் பத்திரமா வச்சுட்டு இரு, இந்த ஃபோட்டோவில இருக்கறது, யாருன்னு உன் பேரன் வந்து கேட்கும் போது, ’இது என் ஃப்ரெண்டு ஷிவா’ ன்னு சொல்லு போதும்னு சொன்னேன்.

“ஓஹ்…அவ்ளோ வருஷத்துக்கு அப்புறமும் கூட அவ ஃப்ரெண்டா இருப்பேன்னு சொல்லாம சொல்லிட்ட, சரி தான?”

“ஆமா…”

“இப்படி எல்லாம் நல்ல ஃப்ரெண்டா இருந்துட்டு, மனசுல காதலோட இருக்கமேன்னு உனக்கு ஒரு நாள் கூட உறுத்தலா இல்லயா?”

“ஆமா, ஒரு நாள் அப்டி தோனுச்சு, அவளுக்காக, ஆசை ஆசையா வாங்கி வச்சிருந்த ஒரு கிஃப்ட அந்த உறுத்தல் காரணமா அவ கிட்ட ரொம்ப நாள் குடுக்காமலே வச்சிருந்தேன்…”

“அப்படியா? என்ன கிஃப்டு அது?”

[தொடரும்]

Tuesday, September 9, 2008

Gone are the golden days…the school days - 3

Gone are the golden days…the school days - 1 : My first whistling experience

Gone are the golden days…the school days - 2 : A Beautiful Chapel

It was not just another day….That day was really something special…A much awaited day!


After the morning assembly, all the students of 11B rushed back to the class, chattering and giggling…God!!! Only 5 more minutes left…


And there was Meenaakshi Sundaram, fondly called as Meenu, our class teacher, all set to start yet another long session on Physics.


We started explaining him the importance of that special day…but no, he was not ready to spare even 3 mins.


And all of us chanted in chorus "sirrrrrrrrrrrrrrr! Only 2 more minutes sir….pleaseeeeeeeeeeee"


After so many arguments and counter arguments, finally he gave up and said
"You guys are real crackpots…do whatever you want!!!" he too was giggling.


At last, we were almost there…much awaited for so many days…all of us started the countdown in chorus...


9 (wondering why the count down didn’t start from 10? Wait…Wait…"
8
7
6
5
4
3
2
1



"Happy birthday to you…happy birthday to you…happy birthday dear Vivek…"


Wondering what’s so funny in a birthday???


All this happened when the clock showed 9.09 on 9/9/1999


Loads of fun it was...I swear :-D


Btw, did u notice today is 9th Sep :-)

Monday, September 8, 2008

சிக்கன் பாக்ஸ் - 2

பகுதி 1

“ஷிவா…ஷிவா…நில்லு, நில்லு நானும் வரேன்…”

அன்னிக்கு தான் ஆபிஸ்ல முதல் நாள், ஷிவா ஷிவான்னு கத்திகிட்டே, ஒரு கருப்பு கலர் சுடிதார்ல தேவதை மாதிரி ஒடி வந்தா நிரு.

ப்ரவீன், “நிறுத்து…நிறுத்து…தேவதைகளோட யுனிஃபார்ம் வெள்ள ட்ரெஸ் தான? கருப்பு சுடிதார்ங்கற?”

“டேய்…டிஸ்டர்ப் பண்ணாம கதைய ஒழுங்கா கேளு டா…”

“சரி, சரி, நீ கண்டின்யு பண்ணு…”

“ஒரு அழகான பொண்ணு, நமக்கு யாருன்னே தெரியாத ஒரு பொண்ணு, நம்ம பேர கத்திகிட்டே இப்படி வேகமா ஓடி வருதே…யாரா இருக்கும்ன்னு நினைச்சுகிட்டே ஒரு நிமிஷம் நின்னு அவளயே பாத்தேன்…ஆனா, அவ என்ன தாண்டி இன்னொரு பொண்ணு கிட்ட போய் பேச ஆரம்பிச்சிட்டா…அப்புறம் ட்ரைய்னிங் க்ளாஸ்ல தான் தெரிஞ்சுது, அந்த இன்னொரு பொண்ணு பேரு ஷிவானி ன்னு”

“ஓ…ஷிவானி, உன் ஃப்ரெண்டு…அந்த நார்த் இன்டியன் பொண்ணு…”

“ஹ்ம்ம்…அவளே தான்…”

“நகரத்திலயே பிறந்த வளந்திருந்தாலும், எனக்கு சாதாரணமா பொண்ணுங்க கிட்ட அவ்வளவா பேசி பழக்கமில்லை…கூச்ச சுபாவம்ன்னு சொல்ல முடியாது, ஆனா, காலேஜ்ல பசங்களோட சேந்துகிட்டு, ஆண்டி கடலை ஃபோர்ஸ் அது இதுன்னும் சும்மா கெத்து காட்டிட்டு திரிஞ்சதுல, எந்த பொண்ணோட நட்புமே முழுசா கிடைக்கல… ஒரு அழகான பொண்ண பாத்த உடனே, அவ அழகா இருக்கா, அவள மாதிரி ஒரு கேர்ள் ஃப்ரெண்டு வேணும், இப்படி எல்லாம் பல தடவ தோனி இருக்கு…ஆனா, ட்ரைய்னிங் க்ளாஸ்ல நிருவ பாத்த அப்புறம், அவ பேச்சு, அவ குணம், அழகான அந்த சிரிப்பு, அமைதியான அந்த முகம், தெளிவான அவ சிந்தனை, இதெல்லாம் பாத்து, இவள மாதிரி ஒரு ஃப்ரெண்டு வேணும்ன்னு முதல் முறையா தோனுச்சு…”

“ஹ்ம்ம்…அப்புறம் எப்டி ஃப்ரெண்டு ஆன?”

“ட்ரெய்னிங் முடிஞ்சு நான், நிரு, ஷிவானி, மூணு பேரும் ஒரே ப்ராஜக்ட்…வழக்கமா நடக்குற மாதிரி, காஃபி, லஞ்சு, கான்டீன் ன்னு எங்க சந்திப்புகள் அதிகமாச்சு, இப்படியே ஒரு வருஷத்துல எங்க மூணு பேர் நட்பும் அதிகமாச்சு…அந்த ஒரு வருஷத்துல நான் என்னையே இன்னும் நல்லா புரிஞ்சுகிட்டேன், நிரு மூலமா…பொண்ணுங்க உலகம், அவங்க நட்பு, இதெல்லாம் ரொம்பவே புதுசா, வித்யாசமா இருந்துச்சு, இத்தனை நாள் இதெல்லாம் மிஸ் பண்ணிடோம்ன்னு கூட எனக்கு சில தடவ தோணும்… நிருவ விட ஷிவானி கிட்ட தான் அதிக நேரம் பேசி இருக்கேன்…ஆனா, ஷிவானி கிட்ட இல்லாத ஏதோ ஒரு ஈர்ப்பு எனக்கு நிரு மேல இருக்குன்னு எனக்கு ஆரம்பத்தில இருந்தே தெரியும்…அத நான் வெளிய அதிகமா காட்டிக்கவும் இல்ல, அதே சமயம், மறைக்கவும் முயற்சி பண்ணல…”

“அவங்க ரெண்டு பேருக்கும் அது தெரியுமா?”

“ஹ்ம்ம்…அவங்களுக்கும் தெரியும்…ஒரு நாள் நிரு என்கிட்ட, உனக்கு எந்த மாதிரி பொண்ண பிடிக்கும்ன்னு கேட்டா…நான் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, “என் ட்ரீம் கேர்ள் ஒரு ஐஞ்சு வயசு பொண்ணு மாதிரி குழந்தைதனமா இருக்கனும்… ஒரு ஐம்பது வயசு பாட்டி மாதிரி மெச்சூர்ட்டாவும் இருக்கனும்…ஆனா, எப்ப எந்தமாதிரி நடந்துக்கனும்ங்கறது அவளுக்கும் தெரிஞ்சிருக்கனும்” ன்னு சொன்னேன்.

“அதுக்கு அவ என்ன சொன்னா?”

“அவ எதுவும் சொல்லல, நான் தான் அதுக்கு மேலையும் என்னென்னவோ சொல்ல துடிச்சேன்…”
’நிரு, you are so much adorable when you are kiddish and so much admirable when you get practical’

“நாங்க எவ்வளவோ விஷயங்கள பத்தி மணிக்கனக்கா பேசி இருக்கோம்…அதுக்காக எங்க ரெண்டு பேர் சிந்தைனைகளும், எண்ணங்களும் ஒத்துப் போகும்ன்னு சொல்ல வரல…நிறைய தடவை, எங்க உரையாடல்கள் கருத்து வேறுபாடுல தான் முடிஞ்சிருக்கு…ஆனா எத்தனை கருத்து வேறுபாடுகள் வந்திருந்தாலும், ஒரு விதமான புரிதல் மட்டும் எங்களுக்குள்ள என்னைக்குமே அறுபட்டதில்லை….அவ இப்படி தான்னு எனக்கு தெரியும், அதே மாதிரி நான் இப்படி தான்னு அவளுக்கும் தெரியும்.”

“இந்த மாதிரி மனசுக்குள்ள பன்னீர் தெளிச்ச பல அழகான உணர்வுகளுக்கு, காதல்ங்குற பேர குடுக்காம, ’என் முதல் க்ரஷ்” என்ற ஒரு சமாதான உடன்படிக்கைய நானே ஏற்படுத்திகிட்டேன்…ஆனா, எனக்குள்ள பூத்த அந்த உணர்வுகளுக்கு எப்ப ஒரு பேர தேடினேனோ, அந்த நிமிஷமே எனக்குள்ள காதல் மலர்ந்திருச்சுன்னு எனக்கே பின்னாடி தான் தெரிஞ்சுது…”

“எப்போ?”

“ஒரு நாள் மதியம் லஞ்சு போது, நான் எனக்கே தெரியாம அவளயே உத்துப் பாத்துட்டு இருந்தேன்…திடீர்ன்னு அந்த விளையாட்ட, ஷிவானி தான் முதல்ல ஆரம்பிச்சா…அவங்களுக்குள்ள முதல்லயே பேசி வச்சுகிட்டாங்களோ என்னவோ, அது எனக்கு தெரியாது…அந்த சனி, ஞாயிறு, நிருவோட அப்பா, அம்மா வரப் போறாங்கன்னு ஏதோ சொல்ல ஆரம்பிச்சா…”

“ஹ்ம்ம்…”

“ஆனா, அதுக்கு முன்னாடி நிரு அத பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லயே, ஏன்ன்னு அவள கேட்டேன்…
நிரு எதுவுமே பேசாம அமைதியா உக்காந்திருந்தா…
ஷிவானி, ’நிருவுக்கு என்கேஜ்மெண்ட் ஆக போகுது, அது விஷயமா தான் அவ அப்பா, அம்மா வராங்க’ ன்னு சொன்னா…”

“எனக்குள்ள திடீன்னு எரிமலையா வெடிச்ச அந்த உணர்ச்சிய என்னால, என்னைக்குமே மறக்க முடியாது…அந்த ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம், வாழ்கையே அஸ்தமனம் ஆனது மாதிரி இருந்துச்சு…”

“இத்தனையும் நடக்கும் போது நிரு மட்டும், எதுவுமே பேசாம, என் கண்களையே பாத்துட்டு உக்காந்திருந்தா. கலங்கி போன என் கண்கள்ள இருந்த காதல, நான் சொல்லாமையே அவ உணர்ந்துட்டான்னு எனக்கு தெரிஞ்சுது. ஆனாலும், ரொம்ப அமைதியா தான் இருந்துச்சு என் மனசு, என்மேல அவ கோவபடுவாளேன்னு பயமோ, என்ன பதில் சொல்ல போறாங்கற பதட்டமோ எனக்கு கொஞ்சம் கூட வரல, ஏன்னா எனக்கு என் நிருவ பத்தி நல்லா தெரியும்…”

“அப்புறம் அவ என்ன சொன்னா?”

“அப்ப உடனே அவ எதுவும் சொல்லல, வழக்கம் போல சாப்ட்டுட்டு எல்லாரும் அவங்கவங்க க்யூப்புக்கு போனோம், ஆனா, வழக்கத்துக்கு மாறான அமைதியோட… ரொம்ப நாளா வெறும் ஈப்புங்கற வேலிய போட்டு அடக்கி வச்சிருந்த என்னோட மனசு, நான் சொன்ன படி கேட்காம, அவள நேசிக்க தொடங்கிட்டது, எனக்கே அப்ப தான் புரிஞ்சுது. அதுக்கு மேல என்னால தாங்க முடியல…நேரா ஒரு காலி கான்ஃபரன்ஸ் ரூமுக்குள்ள போனேன்”

“அப்பறம்”

“ரொம்ப நாளைக்கு அப்புறம், எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல முதல் முறையா, மனச விட்டு ’ஓ’ ன்னு அழுதேன்…”
“என்னது? அழுதியா? என்ன டா இது? சின்ன புள்ள மாதிரி?”

“சின்ன புள்ள மாதிரியா? இல்ல, I cried like a Man”

[தொடரும்]

Saturday, September 6, 2008

திண்ணை

இந்த பதிவை போட என்னை விரும்பி அழைத்த தோழி ரம்யா விற்க்கு முதல் நன்றி.


எல்லோரும் சொல்லும் அதே வசனம் தான், “எங்க வீட்ல திண்ணை இல்லை, திண்ணைன்னு சொன்னா தாத்தா/பாட்டி வீட்டு திண்ணை தான் ஞாபகம் வருது.” இங்கயும் அதே கதை தான்.



சாதாரணமா, திண்ணை வீட்டுக்கு வெளிய தான் இருக்கும், ஆனா எங்க பாட்டி வீட்ல திண்ணை வீட்டுக்கு உள்ள இருக்கும்! கேட்டை திறந்து உள்ளே போனால், ஹால் போன்றதொரு அமைப்பு, அதில் பாதி இடம் மேல் கூரை (ceiling) இல்லாமல் இருக்கும், பாதி அறை மேல் கூரையோட இருக்கும். பழைய காலத்துல திண்ணைய வீட்டுக்கு வெளிய வச்சு கட்டி இருப்பாங்க போல, பல மாற்றங்கள கண்ட அந்த வீட்ல, திண்ணை மட்டும் மாறாம இன்னும் அப்படியே இருக்கு.



இரண்டு பேர் தாராளமாக படுத்து தூங்கும் அளவுக்கு பெரிய திண்ணை. அந்த திண்ணையின் மேல் ஒரு கட்டில், மேல் உத்தரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கயிறு…B.P யில் தலை சுற்றி கீழே விழுந்து விடாமல் இருக்க, அந்த கயிற்றை பிடித்துக் கொண்டு, காலை நீட்டி அமர்ந்திருக்கும் என் பாட்டி…பாட்டிய பற்றின எத்தனையோ எண்ணற்ற நினைவுகளில், முதலில் என் கண் முன் தோன்றும் காட்சி இது தான்.



பாட்டி வீட்டுக்கு போகும் போதெல்லாம், நாங்கள் வீட்டுக்குள் நுழைவதற்க்கும் முன்னே, திண்னையில் இருந்து ஒலிக்கும், அங்கே கட்டிலில் அமர்ந்திருக்கும் பாட்டியின் பலத்த வரவேற்பு…கடைசியாக நான் பாட்டிய பார்க்க சென்ற போது, என்னை வெகு நாள் கழித்து பார்த்தற்கான, எந்த வித உற்சாகமும் காட்டாமல், வெகு சாதாரணமாக என்னோடு ஒரு 5 நிமிடம் உறையாடிய பாட்டியை, என்ன இது என்று ஆச்சர்யத்தோடும், ஏமாற்றத்தோடும் நான் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென்று பக்கத்தில் யாரையோ பார்த்து விட்டு, என்னை தொட்டுப் பார்த்து விட்டு, பாட்டி “தங்கமயிலு…நீயா? நான் ராதான்னு இல்ல நினைச்சுட்டேன், இப்ப தான் வந்தியா, சொன்னா தான எனக்கு தெரியும், கண்ணு தெரியுதா ஒன்னா…” (ராதா, பாட்டி வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கும் ஒரு உறவுகார பெண்) என்று அதே உற்சாகத்தோடு பாட்டி சொல்லவும் தான், சுருங்கி போவதற்க்கு தயாராக இருந்த என் முகம் மலர்ந்தது.



பாட்டி எங்களை கொஞ்சுவதற்கு உபயோகப் படுத்தும் வார்த்தை, ’தங்கமயிலு’…அதை விட, மிகுந்த சினம் கொள்ளும் வேளையில், அவர் எங்களை திட்டுவதற்க்கு உபயோகிக்கும் வார்த்தை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்…”அறிவுகெட்ட மானே!!!” இது தான் அந்த வார்த்தை…திட்டும் போது கூட ’மானே’ என்று திட்டுவதற்க்கு, நம்மை பெற்ற அன்னை, தந்தையால் கூட முடியாது, அவர்களை பெற்றவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்!




ஒரு முறைகூட, அந்த திண்ணையில் பாட்டியுடன் அமர்ந்து பேசியாதாக நினைவே இல்லை…என்னேரமும், பாட்டி மடியில் படுத்துக் கொண்டோ, இல்லை பாட்டியின் தோள் மேல் சாய்ந்து கொண்டோ பேசியதாக தான் ஞாபகம்.



கடைசியாக, அதே திண்ணையில் அமர்ந்து கொண்டு, பாட்டியை புகைப்படம் எடுக்க யத்தினத்த போது, “என்னை எதுக்கு படம் எடுக்குற? நாளைக்கே குழிக்குள்ள போக போறவளுக்கு போட்டோ எதுக்கு? வேண்டாம்…” என்று அவர் தடுத்த போது எடுத்த படம்.



தொண்ணூறுகளின் தொடக்கத்திலோ , என்பதுகளின் முடிவிலோ இருந்த என் அழகான பாட்டி…




பாட்டி இறந்து, இரண்டு நாள் கழித்து வெறிச்சோடி இருந்த அந்த திண்ணையை எதேச்சையாக கடந்து சென்ற போது, ஒரு நொடி, ஒரே ஒரு நொடி மட்டும், ’ஐயோ! பாட்டியை எங்க காணோம்?’ என்று மனதிற்க்குள் தோன்றிய அந்த ஒரு பகீர் உணர்வை, என்றுமே மறக்க முடியாது.



பாட்டி போன பிறகு ஒரே மாதத்தில், ஜே ஜே என்று, எப்போதும் சொந்தங்களும், தெரிந்தவர்களும் வருவதும், போவதுமாய் இருந்த அந்த வீட்டை, எதிர் பாராமல் நடந்த ஏதேதோ சம்பவங்களால், என் மாமாவும் அத்தையும் விட்டு செல்லும் நிலைமையும் வந்து சேர்ந்தது. ஆனால், மாமா வீடு மாற்றி செல்லும் விஷயம் கேள்விப் பட்ட போது, எனக்கே ஆச்சர்யமாக, எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாகவே இருந்தது. என் அம்மாவின் பிறந்த வீடு…அவருக்கு மிகவும் பிடித்த வீடு…இனி பெரும்பாலும் பூட்டியே கிடக்க போகுறது, என்பது எல்லாவற்றயும் தாண்டி, பாட்டி இல்லாத அந்த வீட்டுக்கு மறுபடியும் போக தேவையில்லை என்று கொடூரமாக குதூகலித்து தான் போனேன்.



இன்றும் கூட, அந்த திண்ணையின் விளிம்பில்…அந்த கயிற்றின் நுனியில்…என் பாட்டியின் உயிர் ஒட்டிக் கொண்டிருப்பதாய் தான் தோன்றுகிறது. அந்த கயிற்றை பிடித்துக் கொண்டு, தலையை தாழ்த்தி, காலை நீட்டி பாட்டி அதே இடத்தில் இன்றும் அமர்ந்து கொண்டிருப்பதாய் தான் தோன்றுகிறது. பாட்டி இல்லாத அந்த வீட்டுக்குள் சென்று, அவற்றை எல்லாம் பொய்யாக்க எனக்கு விருப்பமில்லை.



திண்ணை பற்றி எழுத சொன்னால், வேறு ஏதேதோ எழுதி விட்டேன். திண்ணை என்றவுடம் எனக்கு உடனே தோன்றியது, பாட்டி தன் கடைசி காலத்தை கழித்த அந்த திண்ணை தான்…



சரி, இந்த விளையாட்டை தொடர யாரை அழைப்பது?



வித விதமாய், மனதை கொள்ளை கொள்ளும் கவிதைகள் சொல்லும் சரவணக்குமார் ரயும்,


இன்னும் திண்ணை பதிவு போடாமல் டபாய்த்துக் கொண்டிருக்கும், வலைப்பூ உலகின் முடி சூடா ராணி…கதை சொல்லி நம் மனசுக்குள் மத்தாப்பு கொளுத்தும் திவ்யா வயும் விரும்பி அழைக்கிறேன்.

Thursday, September 4, 2008

சிக்கன் பாக்ஸ் - 1

பகுதி 1

நிரு…என்னை விட என்னை அதிகமாகவே புரிந்து கொண்ட என் தேவதை! என் மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து தனியாட்சி புரியும் சர்வாதிகாரி. என் ஆழ்மனதில் பொதிந்து கிடக்கும் பற்பல அழகிய நினைவுகளில் நிறைந்து பூத்திருக்கும் இளவரசி.


அவளுக்கும் என்னை பிடிக்கும், மணிக்கனக்கில் என்னோடு பேசப் பிடிக்கும், யாருமற்ற சாலையில் என் கரம் கோர்த்து நடக்க பிடிக்கும், என் சின்ன சின்ன குறும்புகள் பிடிக்கும், என் செல்ல சண்டைகள் பிடிக்கும், என் சிரிப்பு, என் சீண்டல், என் கோபம், என் அழுகை, என் பார்வை, என் மெளனம்…எல்லாமே, எல்லாமே பிடிக்கும்…ஏன், என் காதலை கூட அவளால் வெறுக்க முடியவில்லையே…மறுக்க மட்டுமே முடிந்தது!


அன்று ஹோலி, வண்ணம் பூச வந்து என் எண்ணத்தோடு அவள் விளையாடிய திருநாள்.


“ஹோலி ஹை…”


“ஹே…நோ, நோ, நிரு…வேணாம், வெள்ள சட்டை, வீணா போய்டும்” நான் சொல்ல சொல்ல கேட்காமல், என் முதுகு, என் கன்னம், என்று எல்லா இடத்திலும் தன் கைவரிசையை காட்டினாள்.


ஹய்யோ என்று சலித்துக் கொண்டு சட்டையை பார்த்தால், அதே பளீர் நிறத்தில்…


“நல்லா ஏமாந்தியா?” வண்ணங்கள் ஏதுமற்ற தன் கைகளை இரு புறமும் ஆட்டி,ஆட்டி, முகத்தை கோனித்து பழிப்பு காட்டி, சிரித்த படியே ஓடினாள், என் தேவதை! ஒரு நொடி, அவள் முதுகுக்கு பின்னால், சிறகுகள் இருப்பது போலவே தோன்றியது. உற்றுப் பார்த்தேன், வெள்ளை துகிலென, இரு புறமும், விறிந்து பறந்த அவள் வெள்ளை துப்பட்டா!


அன்று அவள் என் மேல் வண்ணம் பூசா விட்டாலும் கூட, என் வாழ்வில் பல வண்ணங்கள் பூசி சென்றவள்! என் மனதை சிறகடித்து பறக்கச் செய்தவள். என் உணர்ச்சிகளை உயிர்ப்பித்து, உடல், உயிர் இரண்டும் ஒரே தருணத்தில் சிலிர்க்க செய்தவள், காதல் என்ற பரவசத்தை, அந்த அழகான அனுபவத்தை நான் உணரச் செய்தவள், என் நிரு…


“ப்ரவீன், என்னடா பண்ணிட்டு இருக்க?”


நான் கேக்கவும், “சாரி டா…ஏதோ கண்ணுல பட்டுதேன்னு எடுத்து படிக்க ஆரம்பிச்சிட்டேன்…உன் டைரி…சாரி டா…” என்றான் என் அறை நண்பன் ப்ரவீன், பள்ளியில் என்னோடு படித்து, பின் மீண்டும் அமெரிக்காவில் பார்த்து, எங்கள் நட்பை புதுப்பித்தவன்.


“ஹ்ம்ம்…படிச்சுட்ட, அப்புறம் எதுக்கு சாரி?”


“ஆமா, நிரு, நிரு ன்னு எழுதி இருக்கியே…யாரு இது?”


“நிரு… நிரஞ்சனா...”


“உன் ஃப்ரெண்டு நிரஞ்சனாவா!!!?


“ஹ்ம்ம்…ஆமா…”


“என்னது?? ஆமாவா? என்னால நம்பவே முடியல…இப்ப நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறது, சாட் பண்ணிகிறது இதெல்லாம் பாத்தா, உங்களுக்குள்ள ஒரு பெர்ஸண்ட் கூட லவ் இருக்கற மாதிரி தெரியலயேடா…”


“ஆமா…உண்மை தான்”


“அப்புறம் எப்டி இது…இதெல்லாம் அவளுக்கு தெரியாதோ?”


“இல்ல, இல்ல, அவளுக்கும் தெரியும்…”


“என்னது தெரியுமா? அப்புறம் எப்டிடா? இவ்ளோ கேஷுவலா? ஓ!! இப்ப நீ இதெல்லாத்தையும் மறந்துட்டியா?”


“இல்ல, எதயும் மறக்கல…இப்பயும் அவள லவ் பண்றேன்…ஆனா, அவ ஒத்துக்கனும்ங்கற எதிர்பார்ப்பு எதுவும் இல்லாம லவ் பண்றேன்…”


“சத்தியமா புரியல…”


“I am not her cup of tea –ன்னு எனக்கு தெரியும், எதுவும் நடக்க போறதில்லைன்னும் எனக்கு தெரியும்…திடீர்ன்னு அவ மாற மாட்டாளாங்கற நப்பாசை எல்லாம் எனக்கு துளி கூட இல்ல…ஆனா, அதுக்காக என் மனச மாத்திக்க மாட்டேன்…”


“மனச மாத்திக்காம? தமிழ் ஹீரோ முரளி மாதிரி இருக்க போறியா?”


“ச்சே…ச்சே…அப்டி எல்லாம் இல்ல, லவ் இஸ் அ சிக்கன் பாக்ஸ் டா…ஒரு தடவ வந்துட்டா, மறுபடியும் வரது ரொம்ப கஷ்டம்…அதே சமயத்துல, அது வந்த தளும்பு மறையறதுக்கும் கொஞ்ச நாள் எடுக்கும்”


“உனக்கு இப்பவும் அவள பிடிக்கும்ன்னு அவளுக்கு தெரியுமா?


“ஹ்ம்ம்…தெரியுமே…”


“எப்டி இவ்ளோ நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கு முடியுது உங்களால? உனக்கு ஒரு சின்ன உறுத்தலோ, இல்ல அவளுக்கு உன் மேல ஒரு சின்ன பயமோ, சந்தேகமோ…துளி கூட இல்லையா?”


“ஹூம்…ஹூம்...இல்ல, அது தான் என் நிரு… ”

ப்ரவீன் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாம இருந்தான், ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் பழைய நினைவுகள்…மனசுக்குள்ள குட்டி, குட்டியா பூ பூத்த மாதிரி உணர்ந்தேன்! அதனால தான் மலரும் நினைவுகள்ன்னு சொல்றாங்களோ? காலம்ங்கற மாமழை, நினைவுகள்ங்கற சின்ன, சின்ன சாரல காணாம செய்துடுதே! தேக்கி வைத்த நினைவுகள, வெளியே கொட்ட கொட்ட தான், எத்தனை ஆழமாக ஊற்றெடுக்குது? இன்னிக்கு எல்லாத்தையும் யார் கிட்டயாவது அருவியா கொட்டனும் போல தோணுது…

டிஸ்கி:
“எப்ப, ஏன் அவனுக்கு காதல் வந்துச்சு? அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு? “ இப்படி பல கேள்விகளுக்கு விடை எதுவும் சொல்லாமலே, ஒரு கோர்வையும் இல்லாமல், ஒரு நண்பனின் ஒரு பக்க கதையை (his one side of the story), அவன் உணர்வுகளை, அவனுக்குள் இருக்கும் அழகான நினைவுகளை, அவன் வாயால் கேட்கும் ஒரு ஃபீல் ஏற்படுத்தும் ஒரு சின்ன முயற்சி தான் இந்த கதை.
[தொடரும்]