Tuesday, November 24, 2009

ஓடிப்போலாமா? - 5

பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4

முன்குறிப்பு

முதல் பாகத்தில் இருக்குற நீல நிற பத்திகளுக்கும், இந்த பாகத்தில் இருக்குற நீல நிற பத்திகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கான்னு பாருங்க ;)

--------------------------------

குலதெய்வ கோவில் திருவிழாவிற்காக, ஞாயிற்று கிழமை குடும்பத்தோடு கோவிலுக்கு போன வினோத்திற்கு அதிர்ச்சியாய், நித்யாவும் அங்கு வந்திருந்தாள். வழக்கம் போல் முகத்தை திருப்பிக் கொள்ளாமல், அவனை பார்த்து புன்னகைத்து, பேருக்கு ஏதோ விசாரித்துவிட்டு சென்றாள். ஆனால் வினோத்தால் இத்தகைய செய்கைகளை ஜீரணிக்க முடியவில்லை…”எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி நல்லாத் தாண்டி நடிக்கறீங்க…” என்று மனதிற்குள் ஒட்டு மொத்த பெண்குலத்தையே வசை பாடினான். அமைதியாய், தனியாய் ஓரிடத்தில் வந்து அமர்ந்தவனிடம் வந்தார் அவனது அம்மா.

“ஏன்ப்பா ஒரு மாதிரியா இருக்க? எதுக்கு இங்க தனியா உக்காந்திருக்க? நித்யா பிரகாஷ் எல்லாம் அங்க குளத்தங்கரை பக்கத்துல உக்காந்திருக்காங்க பாரு…அவங்களோட போய் பேசிட்டு இரு…”

“ச்ச்…நான் இங்கயே உக்கார்றேன்..”
“இங்க அடுப்பு புகையெல்லாம் வரும்…போடான்னு சொன்னா கேளு…”

மேலும் பேச்சு வளர்க்க அவனுக்கு இஷ்டமில்லாததால், ’சரி’ என்றபடி எழுந்தான். திருப்த்தி புன்னகையோடு திரும்பிய அவனது அம்மாவை நிறுத்தினான், “அம்மா…நித்யா…நித்யா கல்யாணம் என்னமா ஆச்சு?”

“அதான் அன்னிக்கே அவங்க சரின்னு சொல்லிட்டாங்கன்னு சொன்னேனே…இன்னும் தேதி எதுவும் குறிக்கல…அனேகமா இன்னும் ரெண்டு வாரத்துல நிச்சயதார்த்தம் இருக்கும்…”

தலையை தொங்க போட்டுக் கொண்டு யோசித்தபடியே மெதுவாக அந்த குளத்தை நோக்கி நடக்கத் துவங்கினான்.

குளத்துக்கு அருகே இருந்த ஒரு மரத்தின் கீழே அமர்ந்து கொண்டு நித்யா தரையில் எதோ கோலம் போல் கிறுக்கிக் கொண்டிருந்தாள். கோலம் வரைந்து பல வருடங்கள் ஆனதாலோ என்னவோ, கோலம் முடிந்த பின்னரும் பல புள்ளிகள் விடுபட்டே கிடந்தன. அதை பார்த்து அவளுக்குளேயே விரக்தியாய் சிரித்துக் கொண்டாள்.

முற்றுப் பெறாத கோலமாய் நம் உறவு!

உன்னை போலவே என்னை பார்த்து கண்கள் சிமிட்டி சிரிக்கின்றன,

விடுபட்ட புள்ளிகளணைத்தும்!

“நித்யா! இந்தா காஃபி” பிரகாஷின் குரல் அவள் சிந்தனையை கலைக்க மீண்டும் இந்த உலகத்திற்கு வந்தாள்.

“ஏன் இங்க வந்து தனியா உக்காந்துருக்கீங்கன்னு அம்மா கேக்குறாங்க…வா நித்தி போலாம்…”

“கொஞ்ச நேரம் கழிச்சு போலாம்…இந்த காஃபி முடியட்டும்…”

“என்ன நித்தி ஆச்சு?” கவலை தோய்ந்த முகத்துடன் பிரகாஷ் கேட்க, அந்த கோலத்தை அழித்தவாறே, “என்ன ஆச்சுன்னா? ஒன்னுமில்லையே…”

“இல்ல…நீ ஒரு மாதிரி டல்லா இருக்க…எனக்காக நீ ஒன்னும் அவசரப்பட்டு இந்த கல்யாணத்துக்கு ஒத்தக்கலையே?”

“எதுக்குடா இத்தனவாட்டி கேக்குற? எத்தன தடவை சொல்றது?”

“அதித்தி அம்மா, கல்யாணம் பண்ணாம அவள படிக்க யூ.யெஸ் அனுப்ப மாட்டேன்னு சொன்னதும், எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல…அக்காவுக்கே கல்யாணம் ஆகாம நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கறதுன்னு கேட்டா, அப்ப அதித்தி இங்கயே இருக்கட்டும்…அவ ஒன்னும் படிக்க போக வேண்டாம்னு ஒரே பிடிவாதம்…”

“ஹ்ம்ம்…”

“ஆனா இவ்ளோ சீக்கரம் உனக்கு நல்ல மாப்ளையா கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை…அதுவும் நீயும் உடனே ஒத்துகிட்ட…தாங்க்ஸ் அ லாட் நித்தி…”

“டே…எதுக்குடா இப்ப இதெல்லாம் பேசிகிட்டு? நான் எப்படி இருந்தாலும் கல்யாணம் பண்ண தான போறேன்? என்னவோ உனக்காக தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட மாதிரி பேசற?”

“அதில்லை…நீ இப்ப இருக்கற நிலைமையில கண்டிப்பா உனக்கு கொஞ்சம் டைம் வேணும்…எனக்காக தான உடனே நீ கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட?”

“வினோத்த பத்தி சொல்றியா? அதெல்லாம் இல்லடா…நடக்காதுன்னு தெரிஞ்சதும் நான் எப்பயோ அவன மறந்துட்டேன்…நடக்காதத நினைச்சு வருத்தப் படறத விட நடக்கப் போறத நினைச்சு சந்தோஷப் பட வேண்டியது தான்….இப்ப பாரு….இவரு வினோத்த விட அதிகம் படிச்சிருக்காரு, அவனை விட நல்ல நிலைமையில இருக்காரு…பாக்கறதுக்கும் அவன விட ஹான்சம்மா இருக்காரு…என்ன தான் வினோத் நல்ல பையனா இருந்தாலும், கொஞ்சம் பொறுப்பு பத்தாது…ஆனா இந்த மாப்ளை அப்படியில்லை. ரொம்ப பொறுப்பானவரு…அதுவும் யூ.யெஸ் ல வேற இருக்கறதால, உன்னையும் அடிக்கடி வந்து பாத்துக்கலாம்…”

பிரகாஷ் எதுவுமே பேசாமல் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான், பேசிக் கொண்டேயிருந்தவள் அவன் முகத்தை பார்த்ததும் நிறுத்தினாள், “என்னடா?”

“உன் குரல்லலையே தெரியுது…நீயே உன்னை சமாதானப் படுத்திக்க ட்ரை பண்றேன்னு…என்ன எழுதியிருக்கேன்னு பாரு…”

அப்போது தான் அவளையும் அறியாமல் அவர்கள் அமர்ந்திருந்த வெம்மணலில் “வினோத” என்று எழுதியிருந்ததை கவனித்தாள். அதற்கு மேல் எதுவும் பேசத் தோண்றாமல் சிறிது நேரம் அமைதியாயிருந்தாள். அவன் பெயரில் ’த’கரத்திற்கு மேல் வைக்காமல் விட்டிருந்த மேற்புள்ளியை நிரப்ப அவளுக்கு ஏனோ தோண்றவில்லை.

பிரகாஷும் அவளை தொந்தரவு செய்யாமல் அமைதி காத்தான், மெளனத்தின் கணத்தில் கணத்த அந்த ஒரு சில நொடிகளுக்கு பின்னர், விரக்தியாய் சிரித்தவள், “ஆனா இந்த மாப்ளைகிட்ட ஒரே ஒரு குறை மட்டும் தான்…”

’என்ன’ என்பது போல் பிரகாஷ் பார்க்க, தலையை குனிந்தபடி, “அவரு வினோத் இல்லை...அது ஒன்னு தான்…” அவள் கண்களிலிருந்து சிந்திய அந்த ஒரு சொட்டு கண்ணீர் நேராய் அந்த வெம்மணலில் பரவியிருந்த அவன் பெயரின் மேல் விழுந்தது. தானாக”த்’ உறுவானதை பார்த்தவள், உடனே மொத்த பெயரையும் வேகவேகமாய் அடையாளம் தெரியாமல் அழித்தாள், இதயத்திலிருப்பதை அழிப்பதாக எண்ணிக் கொண்டு!

அதற்கு மேல் பொறுக்கமுடியாதவனாய், “நித்தி! இப்ப கூட ஒன்னும் லேட் இல்லை…ஒரே ஒரு தடவை…ரொம்ப காஷுவலா…நான் வேணா வினோத் கிட்ட பேசி பாக்கட்டுமா?”

“வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்! உனக்கு எத்தன தடவை சொல்றது?”

“ஏன் இப்படி சொல்ற? ப்ளீஸ்…நான் பேசிப் பாக்கறேன்…”

“அதுக்கப்புறம் நான் உன்கூட பேச மாட்டேன்!”

அவள் குரலில் இருந்த கண்டிப்புக்கு கட்டுபட்டு பிரகாஷ் அதற்கு மேல் பேசாமல் அமைதியானான், ’அக்கா கிட்ட நம்ம விஷயத்த சொன்னது பெரிய தப்பு…அதுக்காக தான் இவ இப்படி அவசரப்பட்டு வேற கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா…” என்று வருந்தினான்.

அவன் மனநிலையை மாற்ற வேண்டி, நித்யா, “சரி டாப்பிக் ச்சேஞ்ச்….ஒரு நிமிஷம் உன்னோட வாலட் குடேன்…”

“எதுக்கு?”

“குளத்துக்குள்ள சில்லறை போடறதுக்கு….குடுடா!”

அவனது பர்ஸை வாங்கியவள், அதனுள்ளிருந்த அந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியே எடுத்தாள்.,

“ஹ்ம்ம்…இன்னிக்கு நல்ல நாளா இருக்கு…கோவில் விஷேஷம் வேற…சோ…”

“சோ?”

“இன்னிக்கே அம்மாகிட்ட உன் விஷயத்த சொல்றோம்….”என்றபடி புகைப்படத்துடன் எழுந்தாள்.

பதறிப்போன பிரகாஷ், “நித்தி! விளையாடாத...இன்னிக்கெல்லாம் வேண்டாம்…அவங்க ஒரு நல்ல மூட்ல இருக்கும் போது பாத்து சொல்லனும்…அந்த ஃபோட்டவ முதல்ல குடு…”

“முடியாது…நான் இன்னிக்கே சொல்ல தான் போறேன்…” வேகமாய் நடக்கத் துவங்கினாள்.

அவள் பின்னோடே ஓடியவன், “குடு…விளையாடாத….” என்று புகைப்படத்தை பிடுங்க முயற்சித்தான். உடனே அவள் அங்கிருந்து வேகமாய் ஓடத் துவங்க, பிரகாஷும் அவளை பிடிப்பதற்காக பின்தொடர்ந்தான்.









அன்று நித்யாவை நீண்ட நாட்களுக்கு பின் பார்த்ததை போல் இருந்தது வினோத்திற்கு. அவளை பார்க்கும் போது வரும் கோபம், அவள் சில அடிகள் நகர்ந்தவுடனே மாயமாய் தான் மறைந்துவிடுகிறது.

உன்னை பார்க்காத நாளிலெல்லாம், நாள் நாளாக இல்லை

உன்னை பார்க்கும் நாளிலெல்லாம், நான் நானாக இல்லை

எப்படி இவ்ளோ சீக்கரம் வேற கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா…அப்ப இனிமே அவளோட எப்பவுமே பேச முடியாதா? நான் ஏன் இப்படி இருக்கேன்? எப்ப பாத்தாலும் அவளையே நினைச்சுகிட்டு…” என்று யோசித்தபடி மிகவும் சோகமாக அந்த ஓடைக்கு பக்கத்தில் தன் நிழலை பார்த்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தான் வினோத்.

மாம்பழ மஞ்சள் நிறத்தில், மெரூன் பார்டருடன் கூடிய பட்டுப் புடவை, அவளது உயரத்தை விட நீளமாய் தரையில் புரள, பின்னாமல் விட்டிருந்த கூந்தல் காற்றில் அலைபாய, கையில் எதையோ பிடித்து ஆட்டியபடி, சத்தமாக சிரித்துக் கொண்டு அந்த ஓடையருகே வேகமாக ஓடி வந்தாள் நித்யா.

“அத குடு நித்தி! ப்ளீஸ் நித்தி!!!” அவள் பின்னோடு ஓடி வந்து கொண்டிருந்தான் அவளுடைய தம்பி பிரகாஷ்.

அவனை திரும்பி பார்த்து சிரித்துவிட்டு, “குடுக்க முடியாது போடா…” என்று இறைந்தபடி ஓடி வந்தவள், அங்கு தரையை பார்த்துக் கொண்டிருந்த வினோத் மீது மோதினாள். நிலை தடுமாறி விழப்போன இருவருமே சுதாரித்து நின்றனர். முகத்தில் இருந்த சிரிப்பு மறைய, “சாரி” என்றபடி அந்த

இடத்தை விட்டு நகர போனவளின் கையை கெட்டியாக பற்றி நிறுத்தினான்.

சோகமான குரலில், “இப்படியா கண்ணு மண்ணு தெரியாம ஓடி வருவாங்க?”

“பாக்கலை” கையை விடுவித்துக் கொண்டு போக முயன்றாள்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவனது பிடியை இறுக்கினான்.

“விடு வினோத்!”

“முடியாது!” என்றவனை ’ஏன்’ என்பதைப் போல் ஆச்சர்யமாக பார்த்தாள். மீண்டும், கெஞ்சும் தொனியில், “ப்ளீஸ்…விடு வினோத்…”

“மாட்டேன்…விடு டான்னு சொல்லு…அப்ப தான் விடுவேன்…”

“என்னது?”

“விடு டா எருமைமாடுன்னு சொல்லு….விட்டர்றேன்…”

ஆச்சர்யத்தில் மலர்ந்த கண்களால் அவன் கண்களை சந்தித்தவள், அந்த பார்வையின் அர்த்தம் புரிய,

குறும்பு புன்னகையுடன், “சொல்ல முடியாது! என்ன பண்ணுவ?”

“என்ன பண்ணுவனா?” என்றபடி அவளது கையை விடுத்து இடையை வளைத்துப் பிடித்தான்.

“ஹய்யோ!! என்ன பண்ற??? விட்றா…எல்லாரும் பாக்குறாங்க…”

“முடியாது…”

“வினு! ப்ளீஸ்!”

வினு என்ற வார்த்தையை கேட்டதும் யோசிக்காமல் உடனே செயல்பட்டான் வினோத். நடப்பதை உணர்ந்து, நித்யா சுதாரிக்கும் முன்பு, அதுவரை செய்வதறியாது அங்கேயே நின்று கொண்டிருந்த பிரகாஷ் அங்கிருந்து அகலும் முன்பு, அவளை பிடித்து அவன் புறமாக இழுத்து, இருவரின் மூச்சுக் காற்றும் பட்டுத் தெறிக்கும் இடைவெளியில் அவளை நிறுத்தி, அவள் முகத்தை உற்று நோக்கினான். அதற்கு மேல், அவ்வளவு அருகே அவனை பார்க்கும் சக்தியற்று மெல்ல கண்களை மூடினாள். குனிந்து அவள் கன்னத்தில் அத்துமீறி படர்ந்திருந்த கூந்தல் கற்றையை அகற்றியவன், அவளது கன்னங்களை மென்மையாய் வருடினான். அந்த கணத்தின் பரவசத்தை அணுவணுவாய் ரசித்தபடி, அதிலிருந்து மீள மனமின்றி நித்யாவும் அப்படியே

நின்றிருந்தாள். அது ஒரு நொடியா, இல்லை பல மணிநேரங்களா? அவர்களுக்குத் தெரியவில்லை, தெரிந்து கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அவர்களிவரின் நிலையை பார்த்து, அங்கிருந்த பெரியவர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்று அவர்களை நோக்கி வேக வேகமாக வர, அதை பார்த்த வினோத், அவள் முகத்தை கைகளில் ஏந்தி, திடுக்கிட்டு விழித்த அவளது கருவிழிகளை ரசித்துபடி, “நித்தி! நாம ஓடிப்போலாமா?” என்றான்!













[முற்றும்]

Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ணு தேடினா வழக்கம் போல பல்பு தான் மாப்ளை!!! ஹா ஹா ஹா :D

கொசுறு 1:

“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு…நீ இல்லாம எனக்கு லைஃபே இல்லை…ஒவ்வொரு நிமிஷமும் உன்னை பாத்துகிட்டே இருக்கனும் போல இருக்கு…” உருகும் குரலில் வினோத் இப்படி சொன்னதும், நித்யா மெல்ல புன்னகைத்தாள். நடுநடுவே ஏதோ ஒரு இனிய பாடல் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. ’என்ன பாட்டு இது? இது கனவா இல்ல நிஜமா’ என்று அவள் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போதே கைபேசி மீண்டுமொரு முறை அலறி, அதே இனிய பாடல் ஒலித்தது. ’ச்சே…கனவா!’ என்றவாறு கைபேசியை எடுத்து, ’ஹ்ம்ம் சொல்லு…” என்றாள்.

“இத்தன நேரம் ஃபோன எடுக்காம என்ன பண்ணிட்டு இருந்த?” வினோத்தின் குரல் தெளிவாய் கேட்க, இந்த உலகத்திற்கு வந்தவள், சிரித்தபடி, “இல்லை…ஒரு கனவு” கனவில் அவன் பேசியதை எல்லாம் அவள் சொல்லவும், வினோத், “இதெல்லாம் ஓவரா இல்ல? சத்தியமா என்னால இப்படி வசனமெல்லாம் பேச முடியாது! ஏதோ, பாக்க பாவமே இருக்கேன்னு வாழ்க்கை குடுத்தா, ரொம்ப தான் நினைப்பு உனக்கு…”

“எது? நீ வாழ்க்கை குடுத்தியா? நேர்ல வாடா…உனக்கு இருக்கு!”

“யேய்! வாடா போடான்ன கொன்னுடுவேன்!”

கொசுறு 2:

அவர்கள் வீட்டை விட்டு ஓடுவதற்கான சந்தர்ப்பமே கொடுக்காமல், அவர்களின் பெற்றோரே சந்தோஷத்துடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய, அவர்களது திருமண நாளும் வந்தது.

முகூர்த்தத்திற்கு இருபது நிமிடங்கள் முன்பு…

“என்ன பையன் ரெடியா இல்லையா? சீக்கரம் வர சொல்லுங்க…முகூர்த்தத்துக்கு லேட் ஆகுது..”என்று யாரோ ஒரு பெருசு கத்துவதை காதில் போட்டுக் கொள்ளாமல், ஏதோ தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தான் வினோத்.

யாசர், “டே பாப்பா! காதுல விழுகல? என்ன பண்ணிட்டு இருக்க? ரெடி தான? உங்க மாமா கூப்பிடறார் பாரு…எந்திரி!”

“ஒரே குழப்பமா இருக்குடா…”

“எப்பயுமே அடுத்தவன் கல்யாணத்துல தான்டா ஃபுல் கட்டு கட்டனும்…அவங்கவங்க கல்யாணத்துல கொஞ்சம் அடக்கி தான் வாசிக்கனும்…நேத்து நைட்டு அந்த கட்டு கட்டின. அப்புறம் வயிறு குழப்பாம என்ன செய்யும்?”

“அடச்சே…அதில்லடா…இந்த கல்யாணம்…இது கண்டிப்பா பண்ணிக்கனுமா? அவ்ளோ தானா என் வாழ்க்கையே? இன்னும் இருபது நிமிஷத்துல முடிய போகுதா? பேசாம இன்னும் கொஞ்ச நாள் பேச்சுலரா இருந்திருக்கலாமோ?” பாவமாய் அவன் கேட்க, யாசர், “இதே தான்டா எனக்கும் தோணுச்சு…அதுவும் கரெக்ட்டா கல்யாணத்துக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி…இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணியிருக்கலாமோ? இன்னும் நல்ல ஃபிகரா கிடைச்சிருக்குமோன்னு…ஆனா என்ன பண்றது? ரெண்டு நிமிஷத்துல ஒன்னும் பண்ண முடியாது…ஆனா நீ கொஞ்சம் உஷார்டா…இருபது நிமிஷம் முன்னாடியே தோணிருச்சு…” என்று சொல்லி நகைத்தான்.

“இப்ப இருபது நிமிஷத்துல மட்டும் என்ன பண்ண முடியும்? சரி வா…போவோம்…” என்று பலிக்கு செல்லும் ஆடாக மணமேடைக்கு சென்றான் வினோத்!!!

[இதோட நிஜமாவே முற்றும்] :)

Sunday, November 22, 2009

ஓடிப்போலாமா? - 4

பாகம் 1, பாகம் 2, பாகம் 3

“எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி! ஒரு காஃபி போகலாம் கம் வித் மீ…”

பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் கண்கள் மூடி அமர்ந்திருந்த வினோத்தின் கைபேசியில் கசிந்து கொண்டிருந்தது பாடல். ஒவ்வொரு முறை எக்ஸ்க்யூஸ் மீ என்று ஒலித்த போதும் கூடவே மற்றுமொரு குரல் ஒலிக்காதா என்று ஓயாமல் அவன் மனது கூவிக் கொண்டிருந்தது. கூடவே அவனது கண்களும் அவன் சொல்பேச்சை மீறி திறந்து திறந்து அங்குமிங்கும் எதையோ தேடிக் கொண்டிருந்தது. ’ச்சை! என்ன இது மடத்தனம்?’ என்று நினைத்தவாறு கண்களை இறுக மூடிக் கொண்டான்.

என்னவோ அன்று அவள் நினைவு அவனுக்கு அளவுக்கதிகமாய் வந்து கொண்டிருந்தது. அவனும் நித்யாவும் பேசி கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாகியிருந்தது. ஆனாலும் அலுவலக சேட் பெட்டியில அவள் இடத்தில் இருக்கிறாளா, எத்தனை மணிக்கு வருகிறாள், போகிறாள் என்று எல்லாமே அவன் தினமும் ஒரு கடமையைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான். அன்று வெள்ளிக் கிழமை. அவள் அலுவலகத்திற்கு வரவில்லை என்று சேட் வின்டோவை பார்த்து அவனே ஊகித்துக் கொண்டான்.

அன்று அம்மாவிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்த போது தான், அவன் பெரியம்மா பையன் ரமேஷே அவன் பிரச்சனைக்கு ஒரு முற்று புள்ளி வைத்தான். தான் ஒரு தெலுகு பெண்ணை விரும்புவதாகவும் அவளையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அவன் சொன்னதும், முதலில் வீட்டில் எல்லோரும் தாம் தூம் என்று குதுத்தார்கள். வினோத் வெளிப்படையாக எதுவும் காட்டிக் கொள்ளா விட்டாலும், அவனுக்
கும் உள்ளூர சந்தோஷம் தான். எப்படியோ நித்யாவை இது சமாதானப்படுத்திவிடும் என்று தான் நம்பினான்.

விடுமுறை முடிந்து அலுவலகம் சென்ற நாளில் எதுவுமே நடக்காதது போல் வழக்கம் போல் அவளிடம் பேச துவங்கியவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் எவ்வளவு சமாதானப் படுத்தியும் அவள் அவனுடன் பேசுவதாய் இல்லை. அவளது செய்கையை பொறுக்க முடியாமல், ஒரு நாள் நேரே அவள் இருக்கைக்கு சென்றான்.

“நித்யா! வா…கேஃபடீரியா போவோம்…பேசனும்…” அவளை முறைத்துக் கொண்டே சொல்லி முடித்தான்.

பெருமூச்செரிந்தபடி, “என்ன பேசனும்? இங்கயே சொல்லு!” என்றாள்.

“ஏன் இப்படி பண்ற? நீ பண்றது கரெக்ட்டான்னு ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சு பாத்தியா?”

“நான் இத பத்தி எதுவுமே யோசிக்க கூடாதுன்னு இருக்கேன்!”

“இப்ப உனக்கு என்ன பிரச்சனை? உனக்கு என்னை பிடிச்சிருக்கு…
ஆனா நான் அந்த மாதிரி எதுவும் நினைக்கல…அவ்ளோ தான?அதுக்கு போய் எதுக்கு என்னோட பேசறத நிறுத்தனும்? ஏன் இப்படி கன்வென்ஷனலா யோசிக்கற? ”

அவள் நீண்ட நேரம் பதில் எதுவும் பேசாமல் அமைதி காத்தாள். கொதிப்படைந்த வினோத், “நித்யா!! யூ ஆர் ரியலி ஹோப்லெஸ்!!!” சற்றே உரத்த குரலில் இரைந்தான். சுற்றி அமர்ந்திருந்தவர்கள் எல்லோரும் அவர்களை ஒரு நொடி பார்த்துவிட்டு மீண்டும் தத்தம் வேலையை பார்க்கத் துவங்கினர். சுற்றும் முற்றும் பார்த்த நித்யாவின் கண்கள் குளம் கட்டின.

“ப்ளீஸ் வினோத்! இங்கிருந்து போய்டு… இனிமே என்னால உன்னோட பேச முடியாது…”

அவன் அவனாகவே நடந்து கொண்ட ஒரு சில நண்பர்களில், நித்யாவும் அடக்கம். அதுவும் பெண்களில் அவளை தவிர வேறு யாரிடமும் அந்த இடைவெளியை அவன் தாண்டியதில்லை. முதன்முதலாக தன் வயதையொத்த ஒரு பெண்ணின் அன்பும், நட்பும் முழுமையாய் அவனுக்கு கிடைத்திருந்த போதும், அவள் உடனிருந்த போது அது அவனுக்கு பெரிதாய் தோண்றவில்லை. அவளிடம் பேசாமல் இருந்த ஒரு சில நாட்களிலேயே மிக நன்றாக புரிந்தது.

அவளிடம் பேச முடியாததை விட, ஒவ்வொரு முறை பார்த்தும் பார்க்காததை போல் கடந்து செல்லும் அவளது விழிகளை சந்திப்பது தான் அவனுக்கு பெரும் பாரமாய் இருந்தது. அவளது ஒவ்வொரு விடுபட்ட பார்வையும், அவளையும் மீறி அவள் பார்வையின் விளிம்பில் தொக்கி நின்ற சிறு ஏக்கமும், அவனை விடாமல் தொடர்ந்து பல ஜாலங்கள் புரிந்த அவளது நினைவுகளும்; பல வார்த்தைகள் பேசிய மெளனங்களும், அம்மெளனங்களை மொழிபெயர்ப்பதில் கழிந்த இரவுகளும், பலமணி நேரம் அவளிடம் கதை பேசிய இரவின் கனவுகளும் அவனை ஏதோ செய்தது.

பார்த்தும் பார்க்காததை போல்
கடந்து செல்லும் அந்நியர்களாகிப் போனோம்,
ஒவ்வொரு முறை உன்னை கடக்கும் போதும்
கலங்கி விடும் என் மனது
தெளிந்த நீரோடையாய் பிரதிபலிக்கிறது
உன் சிரித்த முகத்தை!

சட்டென நிகழ்காலத்துக்கு வந்தவனை, ’இன்னிக்கு ஏன் அவ வரலை…எதாவது உடம்பு கிடம்பு சரியில்லாம போயிருக்குமோ?’ என்ற எண்ணம் வேறு தொல்லை படுத்தியது. ஒவ்வொரு முறை அவளை பற்றி நினைக்கும் போதும், “இனிமே என்னால உன்னோட பேச முடியாது… “ என்று கடைசியாக அவள் சொன்னது தான் நினைவுக்கு வந்தது.

எதேதோ நினைவுகளில் தொலைந்தவன், கையிலிருந்த கைபேசியை பார்த்து லேசாக புன்னகைத்தான். அது கூட கடந்த ஒரு மாதமாய் சோபை இழந்ததை போலவே அவனுக்கு தோன்றியது. அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியாய் அம்மாவை அழைத்தான். ஆனால் தொலைபேசி அடித்துக் கொண்டே இருந்தும், யாரும் எடுக்கவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, அவன் தங்கியிருந்த பீ.ஜியை அடைந்தான். உடனே அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.

சலிப்புடன் காதருகில் வைத்து, “இன்னேரத்துல எங்கம்மா போய்டீங்க?” என்றான்.

“இப்ப தான்ப்பா வீட்டுக்குள்ளையே நுழையறேன்…பாத்தா நீ கூப்பிட்டிருக்க…சொல்லு…என்ன விஷயம்?”

“சும்மா தான் கூப்பிட்டேன்….ஆமா எங்க போய்ட்டு வர்றீங்க?”

“நம்ம நித்யா வீட்டுக்கு தான்… அவளை பொண்ணு பாக்கறதுக்காக வந்திருந்தாங்க…. சாயந்தரமே போய்ட்டோம்….அவங்க கிளம்பி போனப்புறம் நாங்கெல்லாம் பேசிட்டு மெதுவா கிளம்பி வறோம்…நம்ம சொந்தம் இல்ல, இருந்தாலும் நல்லா தான் பேசிறாங்க…மாப்ளை அமெரிக்கால வேலை செய்யறாரு, ஆறு மாசம் கழிச்சு தான் லீவ் கிடைக்குமாம்…”

ஏனோ அம்மா சொல்லிக் கொண்டிருந்த விவரங்களை கேட்பதற்கு அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. காரணமே இல்லாமல் கோபம் வந்தது. 'எல்லாத்தையும் மறந்துட்டு கல்யாணம் பண்ண தயாராய்ட்டா…ஆனா என்னோட மட்டும் பேச முடியாது…கல்யாண விஷயத்த கூட சொல்லல!' அவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அம்மாவின் குரல் பலமுறை பலமாக ஒலித்தது…

“வினோத்து…ஹலோ…ஹலோ…”

“ஹாங்…சொல்லுங்க…சொல்லுங்கம்மா…”

“சரியாவே கேக்கல…ஆமா…இந்த வாரம் வர்றதுக்கும் டிக்கெட் புக் பண்ணிட்டல்ல?”“ஹ்ம்ம்…பண்ணிட்டேன்ம்மா…வந்தர்றேன்…ஓகே ஃபோன வெச்சர்றேன்...”

ஒரு சில நாட்களுக்கு முன்பு, “என்னவாயிருந்தாலும் இவன் கிட்ட சொல்லிருவியா? ஒரு விஷயத்தை கூட விடறதில்லை போல?” என்று அலுவலக நண்பன் ஒருவன் வேடிக்கையாய் கேட்க, நித்யா, “ஆமா…நான் தும்மினா கூட இவன்கிட்ட சொல்லிடுவேன்…” என்று சொல்லி சிரித்தது ஏனோ நினைவுக்கு வந்தது.















"இந்த பொண்ணுங்களே இப்படி தான்!” பலமுறை எத்தனையோ பெண்களை கிண்டல் செய்வதற்காக அவனே நண்பர்களிடம் இப்படி சொல்லியிருக்கிறான். ஆனால் இம்முறை தான் அதன் முழுமையான அர்த்தம் அவனுக்கு புரிந்தது. முதன் முதலாக அவளைப் பற்றின செய்தியை வேறொருவர் மூலம் அறிவது வித்யாசமாக இருந்தது வினோத்திற்க்கு. அந்த நொடி தான், அவள் தன் வாழ்விலிருந்து முழுவதுமாய் விலகிப் போய் கொண்டே இருக்கிறாள் என்ற உண்மை அவனுக்கு மெதுவாக உறைக்க ஆரம்பித்தது. பீ.ஜியில் நுழைந்தவன், முன் அறையில் தொலைக்காட்சிப் பெட்டி யாருமில்லாமல் கத்திக் கொண்டிருந்ததை கவனித்தும், அதை அணைக்கும் எண்ணம் வராமல் அவனது அறைக்குள் நுழைந்தான். கதவை அடைக்கும் முன்பு ஒலித்த அந்த பாடல் வரிகள் அவன் செவியை கடந்து இதயக் கோட்டையை லேசாய் தட்டியது.

'உயிர் தோழன் என்பாயா? வழிப்போக்கன் என்பாயா?

விடை என்ன சொல்வாய் அன்பே?'

அந்த வரிகள் அவனுக்குள் ஏற்படுத்திய தாக்கம் கோபமாய் மாற, விரைந்து சென்று தொலைக்காட்சி பெட்டியை படக்கென அணைத்தான். தொலைக்காட்சிப் பெட்டியில் தேய்ந்த அந்த வரிகள் மாறாக அவன் மனதிற்குள் ஒலிக்கத் துவங்கியது. அவன் படுக்க சென்ற பிறகும், விளக்கணைத்த இருட்டறையில், மனதிற்குள் ஓயாமல் ஒலித்த அந்த பாடல் வரிகளை அணைக்கும் பொத்தானை நீண்ட நேரமாய் தேடிச் சலித்தவனுக்கு உதவியாய், சூரியன் உதித்தும் கூட, அவனுள் அந்த பாட்டு மட்டும் ஓயவில்லை.

கண்னெரிச்சலோடு மறுநாள் அலுவலகத்திற்கு கிளம்புவதற்காக படுக்கையை விட்டு எழுந்தவன், 'சரி…அவ என்ன பன்னா நமக்கென்ன? அவ கல்யாணம் பன்னட்டும், ஏதோ பன்னட்டும்…நம்ம வேலையை பாப்போம்…' என்று திட்டவட்டமாய் முடிவெடுத்தான். அதன் பிறகு அவளை பற்றின எந்த செய்தியும் அவனுக்குள் எந்த வித மாற்றத்தையும் கொடுக்காது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான், காலை குளிக்கும் திரவதிற்கு பதிலாக ஷேம்ப்பூ தேய்த்து குளிக்கும் வரை!

[தொடரும்]

பாகம் 5

Friday, November 20, 2009

ஓடிப்போலாமா? - 3

பாகம் 1, பாகம் 2

ஜன்னல் கம்பி வழியே, மழை நின்ற பின்னும் விடாமல் தூரிக் கொண்டிருந்த மரக்கிளைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் நித்யா. மழையில் நனைந்த அந்த பசும் இலைகளை போல் தான் இருந்தது அவளது மனநிலையும். அவனுடன் பேசி பலமணி நேரங்கள் கடந்துவிட்ட பிறகும், விடாமல் அவனது நினைவுகளை தூரிக் கொண்டிருந்தது மனது.


நீண்ட நாள் கழித்து வீட்டில் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையை கழிப்பதற்காக வந்திருக்கிறாள், கூடுதல் சந்தோஷமாய் வெளிநாட்டில் படிக்கும் தம்பி வேறு விடுமுறைக்காக வந்திருக்கிறான். விடுப்பு எடுத்துக் கொண்டு அவர்களுடனே இருக்கும் அம்மா, அவர்களுக்கு பிடிக்கும் என்று எதைஎதையோ வாங்கி வந்து கொண்டிருக்கும் அப்பா, என வீட்டுச் சூழலில் அளவு கடந்த குதூகலத்தை அடைந்திருக்க வேண்டிய அவளது மனம், அவனது நினைவுச் சிறையில் கூட்டுப் பறவையாய் அடைந்து கிடந்தது.










“நித்திக்கா!” பிரகாஷின் குரல் கேட்க இந்த உலகத்துக்கு திரும்பியவள், முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு, “என்னடா…” என்றாள்.

“ஏன்க்கா ஒரு மாதிரி டல்லா இருக்க?”

“ஒன்னுமில்லயே…”“பஸ்ல வந்தது டயர்டா இருக்கா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு சொல்…” அவள் முடிப்பதற்குள் கையிலேயே பாதுகாப்பாய் வைத்திருந்த கைபேசி பாடவும், அதை எடுத்து பார்த்தவளின் முகம் உடனே மலர்ந்தது.

“ஹ்ம்ம் சொல்லு…” என்றபடி அந்த அறையை விட்டு வெளியேறி சென்றவளை வினோதமாக பார்த்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தான் பிரகாஷ்.

எதிர்முனையில் வினோத், “என்ன அதுக்குள்ள எடுத்துட்ட?”

“பக்கத்துல தான் இருந்துச்சு…அதான்…என்ன விஷயம் சொல்லு!”

“ஹே…உன்கிட்ட ஒரு ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லனும்…”

“என்ன அது அப்படி முக்கியமான விஷயம்?”

“இல்லை…இல்லை…நான் நேர்ல தான் சொல்லனும்…உன் ரியேக்ஷன நான் நேர்ல பாக்கனும்…ஆனா ஒன்னு, நான் உன்னை பாக்க வர்றது யாருக்கும் தெரியக் கூடாது…இது ஒரு ரகசியமான மேட்டர்…அதனால நீயே ஒரு நல்ல இடமா யோசிச்சு சொல்லு…”

“என்ன வினோத் இவ்ளோ பில்ட் அப் குடுக்கற? என்ன விஷயம்னு சொல்லு …அப்ப தான் நான் வருவேன்…”

“அதெல்லாம் முடியாது! நான் நாளைக்கு காலையில நம்ம குளந்தங்கரை கோவிலுக்கு வந்தர்றேன்…சரியா பத்து மணிக்கு…நீயும் வந்துடு…நாளைக்கு ஞாயத்து கிழமை…யாரும் வர மாட்டாங்க…ஓகேவா? சரி…நான் இப்ப ஃபோன வச்சுடறேன்…”

“ஹே இரு இரு…” அதற்குள் இனைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது.

***

மறுநாள் பத்து மணிக்கு முன்னதாவே கோவிலுக்கு வந்து ஆற்றங்கரை படிக்கட்டில் அமர்ந்திருந்தாள் நித்யா. என்னவாக இருக்கும் என்று பலமுறை மண்டையை உடைத்துக் கொண்டும் அவளுக்கு என்னவென்றே புரியவில்லை. அப்போது காலை நேரத்து இளவெயில் அடித்துக் கொண்டிருந்தாலும், ஆற்றிலிருந்து சிலுசிலுவென சுகமான காற்றும் அடித்துக் கொன்டிருந்தது.

அதே போல் தான் இருந்தது அவளது மனநிலையும், ஏதேதோ இனிய எண்ணங்கள் அவள் மனதில் உதித்தாலும், கூடவே அப்படியெல்லாம் இருக்கவே இருக்காது என்ற ஒரு எண்ணமும் விடாமல் வந்து அவளது சந்தோஷங்களை மறைத்தது.

சரியாக பத்து மணிக்கெல்லாம் வினோத் அங்கு வந்ததும், அவளுக்கு முன்னே தரையில் விழுந்த அவனது நிழலை வைத்து அவன் வந்திருப்பதை கண்டு கொண்டாள் நித்யா. இருந்தாலும் அவள் அவனை திரும்பிப் பார்க்கவில்லை. அவனது நிழழ், அவளின் நிழலை ஒட்டியபடி விழுந்திருந்ததை பார்த்து, அர்த்தமற்ற ஆனந்தத்தை அடைந்தது அவள் மனம். வினோத்தின் நிழலும் அசையாமல் சிறுது நேரம் அதே இடத்தில் இருந்தது, ஆனாலும் நித்யா திரும்பிப் பார்க்கவில்லை. சட்டென அவன் குனியவும், அவன் நிழல் அவளது நிழலை முத்தமிடுவதைப் போல் படர, இனம்புரியாத ஏதோ ஒரு உணர்ச்சி, அவள் அதுவரை அனுபவித்தறிந்திராத ஒரு அதீத இன்பம் அவள் உடலெங்கும் பரவ, கீழே தெரிந்த அவனது நிழலை பார்த்து வெட்கிச் சிரித்தாள். ஒரு சிறிய கல் வேகமாக வந்து அவள் தோள் மேல் விழுகவும், ’ஆஅ” என்று தோளை தேய்த்துக் கொண்டு அவனை திரும்பிப் பார்த்தாள். விரிந்த கண்களால் அவனை ஒரு வினாடி பார்த்தவள், மீண்டும் திரும்பி அவனது நிழலையே பார்க்கத் துவங்கினாள்.

அவன் கல்லால் அடித்தும் எதுவும் பேசாமல் இருந்தவளை பார்த்து, “என்ன எதாவது உடம்பு கிடம்பு சரியில்லையா? பதிலுக்கு ஒரு பாராங்கல்ல தூக்கி போடுவேன்னு நினைச்சேன்?” என்று நக்கல் சிரிப்புடன் வினவினான்.

ஆனால் அதற்கும் அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. அவளருகே அவன் வந்து அமர்ந்தவுடன், அந்த கணமே அவன் தோள் மீது சாய்ந்து கொள்ள வேண்டும் போல் ஒரு விபரீத எண்ணம் அவளுள் முளைத்தது. அவன் நிச்சயமாய் ஒப்புகொள்ள மாட்டான் என்று மூளை சொன்ன போதும், அன்றே அவனிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி விடு என்று நச்சு பண்ணியது அவள் மனது.


கண்மூடி புதைந்து விடத் தான் விரும்புகிறேன்
உன் மார்பில்...
காலம் முழுக்க சிறைபடத் தான் விரும்புகிறேன்
உன் கரங்களில்...
தலை சாய்த்து கண்ணுரங்கத் தான் விரும்புகிறேன்
உன் தோளில்...
மெய் மறந்து தொலைந்து விடத் தான் விரும்புகிறேன்
உன் நினைவுகனில்...


நித்யாவிற்குள் நிகழ்ந்த இந்த போராட்டங்களை பற்றி ஒன்றும் தெரியாமல், வழக்கம் போல் வினோத்தும் தான் சொல்ல வந்த விஷயத்தையும் சொல்லாமல், அரை மணி நேரம் அவளை சீண்டிக் கொண்டே இருந்தான். கடுப்படைந்த நித்யா, “நீ சொல்லவே தேவையில்லை…” என்று கோபித்துக் கொண்டதற்கு பிறகு, சொல்ல வந்த விஷயத்தை ஆரம்பித்தான்.


“எங்கம்மா நேத்து உங்கம்மா கிட்ட பேசிட்டு இருந்தத நான் ஒட்டு கேட்டுட்டேன்!”

அவனை முறைத்துவிட்டு, “இத தான் நீ அரை மணி நேரமா சொல்லிட்டு இருக்க! சொல்ல வந்த விஷயத்த சொல்லுடா எருமைமாடு! இல்ல மிதிச்சே கொன்னுடுவேன்!”

“என்னது எருமைமாடா? அப்படியே பிடிச்சு குளத்துக்குள்ள தள்ளி விட்டுடுவேன்!!!”அவனை பார்த்து பழிப்பு காட்டி விட்டு திரும்பி அமர்ந்தாள்.

“சரி சரி…கோவிச்சுக்காத நித்யா! இந்த விஷயம் எல்லாம் முடியற வரைக்கும் உனக்கும் ரமேஷுக்கும் சொல்ல கூடாதுன்னு தான்சொன்னாங்க…”

“ரமேஷா? எந்த ரமேஷ்?”

“என்ன நித்யா இப்படி கேட்டுட்ட? கட்டிக்க போறவனை எந்த ரமேஷுன்னு கேக்குறியே!” சொல்லிவிட்டு பலமாய் சிரித்தான் வினோத்.

சுட்டெறிப்பதைப் போல் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்ன உளர்ற? யாரந்த ரமேஷ்?”

“ஹே! என்ன சொல்ற? உனக்கு ரமேஷ தெரியாதா? எங்கண்ணன்….என் பெரியம்மா பையன்…அவனுக்கும் உனக்கும் தான் கல்யாணத்துக்கு பாத்துகிட்டு இருக்காங்க வீட்ல….இன்னும் ஜாதகம் பாக்கலையாம்…ஆனா மோஸ்ட்லி சேந்துடுமாம்…அது வரைக்கும் உன்கிட்டையும் ரமேஷ்கிட்டையும் சொல்ல வேண்டாம்னு எங்கம்மா பேசிட்டு இருந்தாங்க…”

அத்துனை நாட்களாக யாருக்கும் தெரியாமல், மனதிற்குள்ளேயே பத்திரமாய் பூட்டி வைத்து, அனுதினமும், அல்லும் பகலும் பூஜித்து வந்த தன் கண்ணாடி கோட்டை பட்டென்று உடைந்ததைப் போல் உணர்ந்தாள் நித்யா. உடைந்த கண்ணாடித் துண்டுகளணைத்தும்ஒன்றோடொன்று சேர்ந்து ஒரு பெரிய ஈட்டியாய் உருமாறி, தான் அதுவரை குடியிருந்த இடத்தையே இரக்கமின்றி குத்திக் கிழித்தன.

ஆனால் அவள் மனதில் நடந்த போராட்டங்கள் எதையும் பிரதிபலிக்காமல் சலனமற்றே கிடந்தது அவள் முகம். சிறிது நேரம் எதுவும் பேசாமல் கீழே வெறித்தபடி அமர்ந்திருந்தாள். சற்று பொறுத்துப் பார்த்த வினோத், “என்ன நித்யா? எதுவுமே சொல்ல மாட்டேங்குற?”அதற்குள் கிழிந்த அவள் மனதில் வடியத் துவங்கிய உதிரமெல்லாம், கண்ணீராய் அவளது கன்னங்களில் சரியத் துவங்க, பதறிப் போனவன், “இப்ப எதுக்கு அழுகற? ஒரு வேளை…உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையா?”

“சொல்லு நித்யா! சொன்னா தான என்ன பிரச்சனைன்னு புரியும்?”

கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைக்கக் கூட மனமின்றி அவனை ஏறெடுத்துப் பார்த்தாள். “உனக்கு நிஜமாவே புரியலையா?”

உருகும் குரலில் அவள் பேசிய விதம் என்னவென்று புரியாவிட்டாலும் நிஜமாகவே அவன் மனதை உருக்கியது. “என்னன்னு சொன்னாதானம்மா புரியும்? இப்ப எதுக்காக இப்படி அழுகற?”

“சொன்னாலும் உனக்கு புரியாது! நான் போறேன்…” வேகமாய் எழுந்து படிகளில் ஏறத் துவங்கினாள். அவள் பின்னோடு வினோத்தும் வேகமாய் எழுந்து அவளை தொடர்ந்தான், “என்ன நித்யா இது? என்னன்னு சொல்லு!” என்றபடி அவளது கையை பிடித்து நிறுத்தினான்.

மெதுவாக திரும்பி அவனை தீர்கமாகப் பார்த்தாள். பரிதவிப்பு, ஏக்கம், கோபம் என்று பல உணர்ச்சிகள் பிரித்தறிய முடியாதபடி அவள் கண்களில் தாண்டவமாடின. உடைந்த குரலில், “எனக்கு….எனக்கு உன்னைதான்டா பிடிச்சுருக்கு…” என்று திட்டவட்டமாக உரைத்தாள்.

“என்ன சொல்ற?” அதற்கு மேல் அவன் வசம் வார்த்தைகள் இல்லை. அவன் திட்டமிடாமலே அந்த செயலும் நிறைந்தேறியது, அனிச்சை செயலாய் அவனது விரல்கள், பற்றியிருந்த அவள் கரத்தை தானே விடுவித்தன.

அவனது செயலுக்கு ஆயிரம் அர்த்தங்கள் அவளே கற்பித்துக் கொண்டு, ஒரு நீண்ட சோகப் பெருமூச்சை விட்ட படி, தொடர்ந்து நடக்கலானாள். சில நொடி செய்வதறியாது அங்கேயே நின்றவன், மீண்டும் அவள் பின்னால் ஓடினான், “நித்யா! நில்லு…நித்யா…“
வேகமாய் சென்று அவளை இடைமறித்து நின்றான்… “நித்யா! எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல…இத்தன நாளா…இத்தன நாளா…இத ஏன் என்கிட்ட சொல்லல?”

“----“

“சொல்லு நித்யா…”

“ஒவ்வொரு முறை உன்கிட்ட சொல்லனும்னு நான் நினைச்சப்பெல்லாம், நீ கரெக்ட்டா உன்னோட தத்துவத்த பேச ஆரம்பிச்சுடுவ…காதலிக்கறவங்களை எல்லாம் கிண்டல் பண்ணுவ…செத்தாலும் நான் எந்த பொண்ணு பின்னாடியும் சுத்த மாட்டேன்னு சொல்லுவ…அப்புறம் எப்படி உங்கிட்ட சொல்றது? இப்ப கூட நான் சொல்லலாம்னு தான் இருந்தேன்...ஆனா...ஆனா...நீ....நான் சொன்னவுடனே தீயை தொட்ட மாதிரி பிடிச்சிருந்த என் கையை விட்டுட்ட….”

“நான் எந்த அர்த்தத்திலையும் விடல நித்யா…தானா…அது வந்து…”

“விளக்கம் எல்லாம் வேண்டாம் வினோத்…எனக்கு தெரியும்…கண்டிப்பா நீ ஒத்துக்க மாட்டேன்னு எனக்கு முன்னாடியே தெரியும்…அதனால தான் உன்கிட்ட சொல்லாமையே இருந்தேன்… என்னால சொல்லவும் முடியல, சொல்லாம இருக்கவும் முடியல...ஆனா…இப்ப…இப்ப…சொல்ல வேண்டிய நிலைமை ஆயிடுச்சு…என்னால… என்னால, உங்கண்ணனயே கல்யாணம் பண்ணிகிட்டு, காலம் பூரா உன்னையும் அடிக்கடி பாத்துகிட்டே வாழ முடியாது!”

“சாரி நித்யா…எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல….ஐம் ரியலி சாரி…நான் கல்யாணத்த பத்தியெல்லாம்….இன்னும் யோசிச்சதே இல்லை…”

“ஹ்ம்ம்….எனக்கு தெரியும்…நீ சாரி எல்லாம் எதுவும் கேக்க வேணாம்…நான் போறேன்…இனிமே உன்னோட என்னால எப்பவும் போல சகஜமா பேச முடியாது! நான் போறேன்…” அதற்கு மேல் அவளை பேச விடாமல், அவள் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரெல்லாம் ஊற்றெடுத்தது.

“ஹேய்…என்ன சொல்ற? எதுக்கு இப்படி அவசரப்பட்டு…”

“இல்லை…இது அவசரப்பட்டு எடுத்த முடிவில்லை…என்னிக்காவது ஒரு நான் இப்படி ஆகும்னு எனக்கு தெரியும்…இதத் தவிர எனக்கு வேற வழி தெரியல…இனிமே என்னால உன்னோட பேச முடியாது! இனிமே என்னை கூப்பிடாத…” மீண்டும் திரும்பி வேகமாய் நடக்கத் துவங்கினாள்.

“நித்யா!!!”

நித்யா என்ற அவன் அழைப்புக்கு ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்தவள், “ஒரே ஒரு தடவை என்னை நீ நித்தின்னு கூப்பிட மாட்டியான்னு இனிமே வருத்தப்பட வேண்டியிருக்காது…” என்று சொல்லி விரக்தியாய் சிரித்தாள். அதன் பின் திரும்பிப் பார்க்காமல் வேகமாய் அவள் சென்ற திசையையே வெறித்துப் பார்த்த படி சற்று நேரம் அமைதியாய் நின்றிருந்தான் வினோத்.

வினோத் வீட்டிற்கு சென்றதும் அவன் அம்மா மிகுந்த சந்தோஷத்துடன் அவனை வரவேற்றார்.
“டேய்! அவ கிட்ட சொல்லிட்டியா? உண்மையை சொல்லு…உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேனா இல்லையா?” சிரித்துக் கொண்டே அவர் கேட்கவும், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்,“இல்லம்மா…அது வந்து….”

“சொன்னாலும் சரி, பாதகமில்லை….ஜாதகம் அமோகமா பொருந்தியிருக்கு… அடுத்த நல்ல நாள்லையே தட்டை மாத்திக்க வேண்டியது தான்னு நித்யா அம்மா சொல்லிட்டாங்க…எதுக்கும் நித்யாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்னாங்க…நீ சொன்னியா அவகிட்ட? என்ன சொன்னா?”

“இல்ல…இல்லைம்மா…நான் சொல்லல, நான் எதுவும் சொல்லல…நீங்க தான் அவகிட்ட சொல்ல வேணாம்னு சொன்னீங்களே!”

“சரி…அவங்கம்மாவே சொல்லி சம்மதம் வாங்கட்டும்…நம்ம ரமேஷ கல்யாணம் பண்ணிக்க யாரு தான் வேண்டாம்னு சொல்ல போறாங்க…இவ்ளோ படிச்சு இந்த வயசிலையே நல்லா அதிகமா சம்பாதிக்கற பையன் நம்ம சொந்தத்துலையே அவன் மட்டும் தான்! எப்படியோ…இப்ப தான்டா எனக்கு மனசு நிறைஞ்சு இருக்கு…எங்கக்கா சாகும் போது, என் கையை பிடிச்சிகிட்டு, என் பையன் கல்யாணத்த நீ தான் நடத்தி வைக்கனும்னு அப்படி அழுதாங்க…”

அவன் அம்மா நிறுத்தாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க. அம்மாவிடம் என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று அவனுக்கு எதுவுமே புரியவில்லை. பேசிக் கொண்டிருந்த அம்மாவை கவனிக்காமல், தன் அறையை நோக்கி நடக்கத் துவங்கினான்.

“டேய்!!! நான் பேசிகிட்டே இருக்கேன்…சரி…சரி…நீ உடனடியா ரமேஷுக்கு ஃபோன் பண்ணி இந்த விஷயத்த சொல்லு…அவங்கப்பா என்னை சொல்ல சொன்னாரு…நான் சொல்றத விட நீ சொன்னா இன்னும் நல்லா இருக்கும்…என்னடா?”

வினோத் எதுவும் சொல்லாமல் அறைக்குள் செல்லவும், “என்ன பதில் சொல்லாம போற?”
“தலைவலிக்குதும்மா…நான் சாயந்தரமா பேசறேன் அவனோட…”

கதவை சாத்திவிட்டு படுக்கையில் விழுந்தான். அவன் தலையை யாரோ சம்மட்டியால் அடிப்பதை போல் விண்விண்னென்று வலித்தது












[தொடரும்]

பாகம் 4