Wednesday, April 1, 2009

மலரே மெளனமா? - 2

பகுதி – 2 (பெங்களூர் -> பழனி, பழனி -> பெங்களூர், பெங்களூர் -> சென்னை)

பூ, பழம், மற்றும் உற்ற நண்பர்கள் புடை சூழ மலர் வீட்டு வரவேற்பரையில் அமர்ந்திருந்தேன். மின்விசிறி அசுர வேகத்தில் சுழன்றும் கூட எனக்கு வேர்த்துக் கொட்டியது.

இளநீலவண்ணப் புடவையில் தேவதையை போல மலர் என்னருகிலேயே அமர்ந்திருக்க, காஃபி கோப்பைகளுடன் எங்களை உபசரித்தார் மலரின் அம்மா.

“எதுக்கு ஆண்ட்டி இதெல்லாம்? நாங்க கல்யாணத்துக்கு தானே போறோம்?” என்னுடைய அலுவலகத் தோழன் அவினாஷ் இப்படி கேட்கவும், அவர், “அதனால என்னப்பா? முதல் முறையா வந்திருக்கீங்க…ஒரு காஃபி கூட சாப்பிடாம போனா எப்படி?”

ஆனால் மலர் மட்டும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள். என்னவோ அன்றைய தினம் எனக்கு அது வியப்பாய் இல்லை தான், பின்னே சிலைகள் வாயைத் திறந்து பேசுவதை எங்காவது பார்க்க முடியுமா என்ன? ஆனால் ஒன்றே ஒன்று தான் என்னை உறுத்தியது, சிலை உயிரோட்டம் அற்று காணப்பட்டது.

உள்ளறையில் இருந்து தொலை பேசி விட்டு வந்த மலரின் தந்தை அவள் முக வாட்டத்தை அரை நொடிக்குள்ளாகவே கண்டுபிடித்து விட்டார் போலும், “என்னடா? டல்லா இருக்க? பஸ்ல வந்தது ரொம்ப களைப்பா இருக்கா?” என்று அவள் தலையை வருடினார். அவள் தாய் கூட கவனிக்காததை இவர் அரை நொடியில் கவனித்துவிட்டாரே? மலருக்கும் என்னைப் போலவே தந்தையுடன் அதிக நெருக்கம் போல. எங்கள் குணங்கள் ஒத்துப் போனதில் மிகப் பெருமையாக தான் இருந்தது! இந்த அன்பு தந்தையால் என் தந்தையின் நினைவும் அழையாமலே என்னுள் வந்து ஒட்டிக் கொண்டது.

சிறு வயதிலிருந்தே எல்லோரையும் போல, எனக்கும் அப்பா தான் ஹீரோ, உற்ற தோழன் எல்லாமே! மலர் கண்டிப்பாக அவருக்கு பிடித்தமான ஒரு குணம் கொண்ட பெண்ணாக இருப்பாள் என்ற நம்பிக்கை தான், என்னை அவளிடத்தில் அதீதமாய் கவர்ந்தது என்று கூட சொல்லலாம்.

ஊருக்கு செல்லும் போதெல்லாம், தவறாமல் பழனி முருகனை தரிசித்து வருவது என் வழக்கம். அம்மாவும் தங்கையையும் வீட்டில் விட்டு, நானும் அப்பாவும் மட்டும் ஏதேதோ கதைகள் பேசியபடி மலை ஏறி இறங்குவோம்…முருகன் தரிசனத்தை விட, எங்கள் இருவருக்குமே பிடித்தமான பொழுதுகள் அவை.
இந்த முறை அப்பாவிடம் சொல்லி விடுவது என்ற முடிவு மட்டும் செய்திருந்தேன். ஆனால் எங்கு தொடங்குவது, என்ன சொல்வது என்று யோசிக்கத் தோன்றவில்லை. இது போன்ற யோசனைகளின் ஊடே தரிசனமும் முடிந்து மலையடிவாரத்திற்கே திரும்பி விட்டோம்.

“அப்பா…திருநீரு பாக்கட் வாங்கனும்…வாங்க…” பழனி சித்தனாதன் திருநீரு, நினைத்தாலே மணக்கும்! என் நண்பர்கள் எல்லோருக்கும் நான் தான் சப்ளையர். சித்தனாதன் திருநீரு கடையிலிருந்து ஐந்து நிமிடங்கள் நடந்தால் எங்கள் வீடு வந்து விடும். திருநீரு பொட்டலத்தை வாங்கியபடி நடக்க ஆரம்பித்த நான், ஒரு கணம் தயங்கி நின்றேன். அப்பா என் தோள் மேல் கை வைத்தபடி அங்கேயே நின்று கொண்டிருந்தார்!

“என்னப்பா? வேற எதாவது வாங்கனுமா?”

“அதெல்லாம் இல்ல…”

வேற என்ன என்பது போல நான் பார்க்க, “என்னவோ சொல்லனும்னு நினைக்கற….ஆனா சொல்ல மாட்டிங்குற…அப்பாகிட்ட என்னப்பா தயக்கம்? எதா இருந்தாலும் தைரியமா சொல்லுப்பா…”

என் மடையை திறந்து விடுவது போல் இருந்தது அவர் அன்பான பார்வை. சில சமயங்களில், அன்பான ஒரு பார்வையே மனதில் எதாவது சிறிதளவு குற்றவுணர்வு மறைந்திருந்தால் கூட, அதை துழைத்து தோண்டி எடுத்து விடும் தான். அந்த பார்வையைத் தவிர்த்து, “அப்பா….அது வந்து…”

“என்னை நிமிந்து பாத்து பேசு சுரேன்!” திட்டவட்டமாய் ஒலித்தது அவர் குரல்.

“அதில்லப்பா…எப்படி சொல்றதுன்னு தெரியல…எனக்கு…வந்து....என் டீம்ல மலர்ன்னு ஒரு பொண்ணு இருக்கா…அவள…அவள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா…அவள கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறேன்…”

அப்பா எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்கவும், மேலும் தொடர்ந்தேன், “ரொம்ப நல்ல பொண்ணு பா…உங்களுக்கும் அம்மாவுக்கும் கண்டிப்பா பிடிக்கும்…”

“ஓஹ்”

’இதென்ன ஒற்றை பதில்?’ மனதிற்குள் குழம்பியபடி, “உங்கள மதிக்காம நானே முடிவெடுத்துட்டேன்னு மட்டும் நினைக்காதீங்கப்பா…முதல்ல உங்ககிட்ட சொல்லிட்டு…அப்புறம் அம்மா கிட்ட சம்மதம் வாங்கிட்டு….அப்புறமா தான் மலர்கிட்டயே சொல்லலாம்னு இருக்கேன்…” ஒரு மாதிரியாக மென்று முழுங்கி சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி முடித்தேன்.

என் தோள் மேல் கைகளை போட்டபடி நடக்கத் துவங்கினார், “இதப் பாரு சுரேன்…உன்னை நம்பி ஒரு டீமையே குடுத்திருக்காங்க உங்க ஆபிஸ்ல…உனக்கு முடிவெடுக்கறதுக்கு எல்லா தகுதியும் இருக்கு…அத நான் ஒத்துக்கறேன்…ஆனா, கல்யாணம் ரெண்டு பேர் சம்மந்த பட்ட விஷயம் மட்டும் இல்லப்பா…ரெண்டு குடும்பம், ரெண்டு சமூகம் சம்மந்த பட்டது.”

“அப்பா…”

“இரு…நான் சொல்லி முடிசர்றேன்…எங்களுக்கு உன் மேல எந்த பயமும் இல்ல…நீ ஒரு விஷயம் செஞ்சா சரியாத் தான் இருக்குனு நான் நம்பறேன்…அதே மாதிரி, அந்த பொண்ணு வீட்லையும் எந்த பிரச்சனையும் பண்ணாம ஒத்துகிட்டாங்கன்னா, எனக்கும் சரி தான் ப்பா…”

ஒரே சமயத்தில் பலவித பரவசங்கள் தாக்க “அப்பா…தாங்க்ஸ் பா…ரொம்ப தாங்க்ஸ்…” அவருடைய கையை பிடித்து வேகமாக குலுக்கினேன். குழந்தையைப் போல் நான் குதூகலிப்பதைப் பார்த்து, ஒரு நொடி சிரித்தவர், “சொல்றத முழுசா கேளு…நீ அந்த பொண்ணு கிட்ட உடனே உன் மனசுல இப்படி ஒரு எண்ணமிருக்குன்னு சொல்லிடனும், அந்த பொண்ணுக்கும் சரின்னா உடனடியா அவங்க வீட்ல பேசி, அவங்களுக்கும் முழு சம்மதம்னா மட்டும் தான் நான் ஒத்துக்குவேன்…”

“சரிப்பா…கண்டிப்பா…”

“அப்புறம் இன்னொன்னு, உனக்கு சொல்லத் தேவையில்லை…இருந்தாலும் சொல்றேன்….அந்த பொண்ணு ஒரு வேளை இஷ்டமில்லைன்னு சொல்லிட்டா, நீ அதுக்கப்புறம் அவள எந்த விதத்திலும் தொந்தரவு பண்ணக் கூடாது…ஏன் சொல்றேன்னா…நம்ம வீட்லையும் ஒரு பொண்ணு இருக்கு…”

“ச்சே…ச்சே..என்னப்பா? எனக்குத் தெரியாதா?”சிரித்தபடி வீட்டிற்குள் நுழைந்தோம். அம்மாவிடம் சொல்லும் பயம் எனக்கில்லை. வழக்கம் போல அப்பாவே பார்த்துக் கொண்டார்.

******
சென்ற வாரயிறுதியில் பழனியின் இனிமையான சுகந்தம் கலந்த மலையடிவாரக் காற்றை சுவாசித்திருந்தேன்…சென்ற வாரம் முழுக்க பெங்களூரின் மிதமான குளிர் காற்றை ரசித்த படி… இன்று சென்னையில்… எனக்கு சென்னை என்றுமே பிடித்தமான ஊராக இருந்ததில்லை. ஆனால் இம்முறை சென்னையின் கூவத்தை கடக்கும் போது கூட, வழக்கம் போல் முகம் சுளிக்கத் தோன்றவில்லை. 'என்ன தான் இருந்தாலும் நம்ம மாமனார் ஊரு…இனிமே பழகிக்க வேண்டியது தான்…' என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் தலைதூக்கியது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். அது வரை சென்னையில் எனக்கு பிடித்த ஒரே இடம் பெசண்ட் நகர் பீச். இப்போது இன்னொரு இடமும் பிடித்து விட்டது. மலருடைய வீடு தான் அது. அலுவலகத் தோழி திருமணத்திற்கு எல்லோரும் சென்னை செல்லப் போவது என்றோ முடிவாகியிருந்ததால், காதல் பூத்த அந்த கணமே, பெஸண்ட் நகர் பீச்சை தேர்வு செய்துவிட்டேன், என் காதலை கடற்கரையின் ஈரக்காற்றோடு கலந்து அவளிடம் சேர்ப்பிப்பதற்காக.

இதோ, இன்று சென்னையில், திருமண வரவேற்புக்கு செல்லும் முன் அவள் வீட்டு வரவேற்பரையில், அலுவலக நண்பர்கள் சூழ, திருமணத்திற்கு வாங்கிய பூங்கொத்துகளோடும், மலர் வீட்டுக்கு வாங்கிய பழங்களோடும் அமர்ந்திருக்கிறேன். என்ன தான் மாமனார் ஊரென்றாலும், சென்னையல்லவா? மின்விசிறி அசுர வேகத்தில் சுழன்று கொண்டிருந்தாலும், வேர்த்துக் கொட்டிக் கொண்டு தான் இருந்தது.

******

திருமண வரவேற்பு முடிந்து அனைவரும் பெஸன்ட் பீச்சை வந்தடைந்தோம். மணி ஒன்பது என்பதால், பம்பர் பரிசாக நிலவுடன் கூடிய கடற்கரை என் முதல் காதலுக்கு அரங்கேற்ற திடலாக கிட்டியிருந்தது. ஏற்கனவே திட்டமிட்டு பெஸண்ட் நகர் பீச்சை பற்றி ஆஹா, ஓஹோ என்று மற்ற மாநிலத்து நண்பர்களிடம் தான் கதை அளந்திருந்ததால், வரவேற்பு முடிந்த கையோடு எல்லாரும் இங்கு கொட்டமடிக்க வந்துவிட்டார்கள்.

வரவே முடியாது, வீட்டிற்கு இப்போதே போகிறேன் என்று அடம்பிடித்த மலரை, தனியாக செல்லக்கூடாது, அரை மணி நேரம் தான், நாங்களே வீட்டில் கொண்டு விடுகிறோம் என்று வற்புறித்தி, அவளையும் பீச்சிற்கு அழைத்து வந்து விட்டேன். எனக்குத் தெரிந்து மேனேஜர் என்ற முறையில் அவளிடம் நான் அவ்வளவு அதிகாரமாய் பேசியது அன்றைக்குத் தான்! அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, எனக்கு தான் மனதின் உற்காகம் கடலின் அலைகளை மிஞ்சும் அளவிற்கு கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அவள் வீட்டிற்கு போகிறேன் என்று காரணமே இல்லாமல் அடம் பிடித்த போது கூட எனக்குள் தோன்றியது இது தான்.

மலர் என்ற பெயரைக் கொண்டதால் தானோ,
ஒற்றைக் காலில் நின்று அடம்பிடிக்கிறாய்?


எல்லோரும் கடல் அலைகளில் விளையாடிக் குதூகலித்துக் கொண்டிருக்க, மலர் மட்டும் எங்கோ பார்த்த படி கரையிலேயே அமர்ந்துவிட்டாள். அன்று காலை பேருந்து நிலையத்தில் தன் அப்பாவைப் பார்த்ததும் அவள் முகத்தில் தோன்றிய உற்சாகம், பின்பு வீட்டில் பார்த்த போதும், திருமண வரவேற்பிலும் கடுகளவு கூட காணப்படவில்லை. ’ஒரு வேளை உடம்பு எதாவது சரியில்லாமல் இருக்குமோ? ச்சே, ச்சே பஸ்ல வந்த கலைப்பா இருக்கலாம்…ரயிலிலேயே சென்று பழக்கப்பட்டிருந்ததால், நேற்றிரவு தூங்கவே இல்லை என்று இன்று காலையில் கூட சொன்னாளே!’

சற்று இடைவெளி விட்டு மலர் அருகே அமர்ந்தேன், என்ன பேசுவதென்று தெரியாமல், ஒரு சில நொடிகளைக் கொன்று, “ஆனாலும், கல்யாணத்துல சாப்பாடு செம சூப்பர் இல்ல?” என்றேன்.

“ஆமா…” என்றபடி மென்மையாக முறுவலித்தாள். வெளிய தெரியப்போகிறேன் என்றும், உன்னை வெளியே காட்டவே மாட்டேன் என்றும் அவள் பற்களுக்கும், உதடுகளுக்கு நிகழ்ந்த யுத்ததில் வென்றது அவளது உதடுகள். ஆனால் அந்த துவந்த யுத்ததிற்கு சம்பந்தமேயில்லாத வெறும் பார்வையாளனாகிய நான் அதில் சரணடைந்தேன்!

கடலின் பேரிரைச்சலை ரசித்தபடி அவளும், அவளின் அமைதியை ரசித்தபடி நானும்….எங்களை கடந்து சென்றது கடற்கரை காற்றும், நொடியில் மடிய சாபம் வாங்கி வந்திருந்த அந்த சில பல மணித்துளிகளும்.

அவளது கண்கள் எங்கோ தூரத்தில் இருந்த தொடுவானத்தை பார்த்துக் கொண்டிருந்தது. இங்கு நிஜமாய் அவளருகினிலே அமர்ந்திருக்கும் என் கண்களுக்குள் சங்கமிக்காமல், பொய்யாய் சங்கமித்திருந்த கடலும் வானமும் அவள் பார்வையை கவர்ந்திருந்தது எனக்குள் பொறாமையை கிளப்பியது. பலபேர் அனுபவித்தெழுதியதைப் போல காதல் ஒரு விந்தை தான்! இப்படி கடலின் மேலும், வானத்தின் மேலும் கூட நான் பொறாமை கொள்ளக் கூடும் என கனவிலும் நினைத்திருக்கவில்லை! மணலில் கைகளை ஊன்றி அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன். அதுகூட என்னைப் பார்த்து எக்காளமிட்டு சிரிப்பதை போல் இருந்தது. கைகளில் ஏதோ தட்டுப்பட, கீழே பார்த்த அந்த ஒரு கணம், அந்த வானமும், கடலுமே மணலில் கொட்டிக் கிடப்பதை போல் தோன்றியது, “ச்சை…என்ன இது கற்பனை…” என்றபடி உற்றுப் பார்த்தேன். அவள் அணிந்திருந்தும் கூட அவள் மேனியை தழுவிச் செல்ல முடியாமல் பாவம் செய்திருந்த அவள் புடவை முந்தானை, இளநீல வண்ணத்தில்!

“மலர்! மண்ணுல படுது பாருங்க…”

“ஓ…thanks…” மடியில் எடுத்து வைத்துக் கொண்டாள். ’அட….பாருடா….அதற்குள் பாவவிமோச்சனம் பெற்று விட்டதே!!! கொடுத்து வைத்த முந்தானை தான்!!!’

இதை ஏன் சொன்னேன் என்று புரியவில்லை, இருந்தாலும் அவளிடம் சொன்னேன், “ரொம்ப soft ஆ…மெல்லிசா இருக்கே….”
வழிந்துவிட்டேனோ? போகட்டும்…அவளை பார்த்ததும் ஆர்பரித்து, அலை அலையாய் வழிந்து, அவள் பாதம் நனைத்து அட்டகாசம் செய்த இந்த கடலை விடவா?

என் அறிவுப்பூர்வமான கேள்விக்கு பதிலாய், “ஹூம்…” என்று மட்டும் சொன்னாள். கடவுளே!!! இந்த ’ஹூம்..’ ’ஹூங்ஹூம்…’ இதெல்லாம் ஆண்குலத்தை ஹிம்சிக்கும் வார்த்தைகள் என்று இந்த பெண்களுக்கு என்றைக்கு தான் விளங்கப் போகிறதோ?

சரி, கவிபாடிக் கொண்டிருக்க இது சமயமில்லை, திடீரென்று கவிபாட எனக்கு வரப்போவதும் இல்லை. ஆண் வர்கத்தில் பிறந்தமைக்கும், என் அப்பாவின் நெறி மாறாத வளர்ப்பினாலும், எனக்கு கிடைத்த அன்பு பரிசு, என் தைரியமும், துணிச்சலும் தான். அவைகளை துணைக்கழைத்து, என் கண்களில் குடியேற்றி, என் உள்ளத்தில் குடியேறியவளின் கண்களை உற்று நோக்கினேன். எது நிகழ்ந்தாலும், என் பார்வையை மட்டும் அவள் கண்களை விட்டு தாழ்த்தப் போவதில்லை என்று சபதமெடுத்து விட்டு, “மலர்…” என்று ’காதல் ததும்புகிறது’ என்று நான் நம்பிய ஒரு குரலில் அவளை அழைத்தேன்.

திரும்பி என்னைப் பார்த்தாள். திடமான குரலில், “மலர்!!! கொஞ்ச நாளாவே…எனக்குள்ள இப்படி ஒரு எண்ணம்… அது வந்து…நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல…நான்…நான்…உங்களை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் படறேன்…” வெகு நாட்களாய் பொக்கிஷமாய் பாதுகாத்து வந்த குழந்தையை, சுகப் பிரசவத்தில் ஈன்றெடுத்தை போல உணர்ந்தேன்.

அவள் முகத்தில் இருந்தது ஆச்சர்ய ரேகைகளா, கோப ரேகைகளா? என்னால் பிரித்துப் பார்க்க இயலவில்லை…அந்த முகத்தில் எனக்கு தெரிந்தது சலனமில்லாத ஒரு மெளனம் மட்டுமே. அந்த மெளனத்தின் அடர்த்தி என்னை அச்சுறுத்தியதால், “உங்க மனசுல என்ன இருக்குன்னு வெளிப்….”

என்னை இடைமறித்தாள். “எனக்கு புரியல சுரேன்…திடீர்னு ஏன் இப்படி?”

“திடீர்னு எல்லாம் இல்லை மலர்…கொஞ்ச நாளாவே எனக்குள்ள இப்படி ஒரு…”

“உங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் வர அளவுக்கு நான் என்னிக்காவது நடந்திருக்கேனா? அப்புறம் ஏன்? சொல்லுங்க சுரேன்!”

“இல்ல மலர்…அது வந்து…”

பாரதி பாடிய பெண்ணைப் போல நிமிர்ந்த பார்வையால் என்னை உற்று நோக்கி, என் மனம் பற்றுப் போகும் அந்த அனல் வார்த்தைகளை உமிழ்ந்தாள், “சாரி சுரேன்…எனக்கு விருப்பமில்லை…உங்க மனசுல இந்த மாதிரி ஒரு எண்ணம் வர அளவுக்கு நான் நடந்துகிட்டதில்லை. அப்படி என்னையும் மீறி எதாவது நடந்திருந்தா, என்னை மன்னிச்சிடுங்க…” சொல்லிவிட்டு சட்டென்று எழுந்தாள்.

வார்த்தை ஏவுகணை தாக்கிய மனதால் நிலைகுலைந்திருந்த நானும் தட்டுத் தடுமாறி எழுந்து நின்றேன். என் அகத்தை விட்டு அகலாமல், அந்த இடத்தை விட்டு அகல யத்தனித்தவளை நிறுத்தி, “மலர்…ஒரு நிமிஷம்…”

முகத்தில் கேள்விக்குறியோடு என்னைப் பார்த்தாள்.

“என்னை வேண்டாம்னு…" நான் பேசியது எனக்கே கேட்காததால், தொண்டையை செறுமியபடி மீண்டும், "நீங்க இதை மறுக்கறதுக்கான காரணம்…நான் தெரிஞ்சிக்கலாமா?” இம்முறை முன்பு என் குரலில் இருந்த திடம், தடம் தெரியாமல் போயிருந்தது.

“எனக்கு விருப்பமில்லை சுரேந்தர்!!! அவ்ளோ தான்!!!”

அவ்ளோ தான் என்று அவள் சொல்லியிருக்கத் தேவையில்லை…சுரேன், சுரேந்தர் ஆனதிலிருந்து எனக்கே புரிந்துவிட்டது.

******

சென்னையில் மலர் காரணம் எதுவும் சொல்லாமலே என்னை நிராகரித்தது கூட எனக்கு அவ்வளவாக வலிக்கவில்லை. ஆனால், திங்களன்று அலுவலகம் திரும்பியவுடன் அவள் செய்த காரியம்…

[தொடரும்]

43 comments:

நட்புடன் ஜமால் said...

\மலர் என்ற பெயரைக் கொண்டதால் தானோ,
ஒற்றைக் காலில் நின்று அடம்பிடிக்கிறாய்?\\

அதனால் தான் வண்டாக அவன் ...

Raghav said...

//பின்னே சிலைகள் வாயைத் திறந்து பேசுவதை எங்காவது பார்க்க முடியுமா என்ன? //

ஆஹா...

நட்புடன் ஜமால் said...

நல்ல தந்தை

எனக்கு அவர்தான் ஹீரோ

நல்லா விருவிருப்பா போகுதுங்க கதை

நல்ல இடத்தில தொடரும்.

Raghav said...

//என் மடையை திறந்து விடுவது போல் இருந்தது அவர் அன்பான பார்வை. //

அடடா...

Raghav said...

//கல்யாணம் ரெண்டு பேர் சம்மந்த பட்ட விஷயம் மட்டும் இல்லப்பா…ரெண்டு குடும்பம், ரெண்டு சமூகம் சம்மந்த பட்டது.”//

ம்ம்

Raghav said...

//அம்மாவிடம் சொல்லும் பயம் எனக்கில்லை. வழக்கம் போல அப்பாவே பார்த்துக் கொண்டார்.//

:) அருமை

Raghav said...

//என்ன தான் மாமனார் ஊரென்றாலும், சென்னையல்லவா? //

நம்ம முதலாளி முகுந்தன் வந்து இதற்கு பதில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

Raghav said...

//எனக்குத் தெரிந்து மேனேஜர் என்ற முறையில் அவளிடம் நான் அவ்வளவு அதிகாரமாய் பேசியது அன்றைக்குத் தான்! //

அடடே.. மாப்பிள்ளை மேனேஜரா..

Raghav said...

//மலர் என்ற பெயரைக் கொண்டதால் தானோ,
ஒற்றைக் காலில் நின்று அடம்பிடிக்கிறாய்?/

முடியல... கவிதை இல்லாத காதலே கிடையாதோ ? :)

Raghav said...

//வெளிய தெரியப்போகிறேன் என்றும், உன்னை வெளியே காட்டவே மாட்டேன் என்றும் அவள் பற்களுக்கும், உதடுகளுக்கு நிகழ்ந்த யுத்ததில் வென்றது அவளது உதடுகள்.//

அழகோ அழகு..

Raghav said...

//பாரதி பாடிய பெண்ணைப் போல நிமிர்ந்த பார்வையால் என்னை உற்று நோக்கி, என் மனம் பற்றுப் போகும் அந்த அனல் வார்த்தைகளை உமிழ்ந்தாள்,//

ம்ம்.. என்ன திவ்யா.. இன்றைய பகுதியில் உங்க தமிழ் ரொம்ப அழகா இருக்கு.. ஒவ்வொரு பத்தியும் தனித்தனியா சிறப்பித்து சொல்லலாம் போலிருக்கு.. அவ்ளோ அழகு தமிழ்..

இதற்காகவே இன்னுமொரு நூற்றாண்டு இரும்.

புதியவன் said...

//மலர் என்ற பெயரைக் கொண்டதால் தானோ,
ஒற்றைக் காலில் நின்று அடம்பிடிக்கிறாய்?//

அழகு...

புதியவன் said...

//வெளிய தெரியப்போகிறேன் என்றும், உன்னை வெளியே காட்டவே மாட்டேன் என்றும் அவள் பற்களுக்கும், உதடுகளுக்கு நிகழ்ந்த யுத்ததில் வென்றது அவளது உதடுகள். //

மிகவும் ரசித்தேன்...

புதியவன் said...

//இந்த ’ஹூம்..’ ’ஹூங்ஹூம்…’ இதெல்லாம் ஆண்குலத்தை ஹிம்சிக்கும் வார்த்தைகள் என்று இந்த பெண்களுக்கு என்றைக்கு தான் விளங்கப் போகிறதோ?//

அதானே...ஆனா, இது கூட அழகு தான்...

புதியவன் said...

//சென்னையில் மலர் காரணம் எதுவும் சொல்லாமலே என்னை நிராகரித்தது கூட எனக்கு அவ்வளவாக வலிக்கவில்லை. ஆனால், திங்களன்று அலுவலகம் திரும்பியவுடன் அவள் செய்த காரியம்…//

சுவாரசியமான இடத்தில சஸ்பென்ஸ் வச்சுட்டீங்களே...அடுத்த பகுதிய சீக்கிரம் போட்டுடுங்க திவ்யப்பிரியா...

gils said...

//மலர் என்ற பெயரைக் கொண்டதால் தானோ,
ஒற்றைக் காலில் நின்று அடம்பிடிக்கிறாய்//
//பின்னே சிலைகள் வாயைத் திறந்து பேசுவதை எங்காவது பார்க்க முடியுமா என்ன/
avvvvvvvvvvvvv.........etho paiyan ezhuthina mathiri iruku..pasangala pola anubavachi ezhuthirukeenga..toppu

gils said...

intha postla semma language..pinni pedaladichirukeenga..super flow and azhagu tamizh :)

gils said...

//இந்த ’ஹூம்..’ ’ஹூங்ஹூம்…’ இதெல்லாம் ஆண்குலத்தை ஹிம்சிக்கும் வார்த்தைகள் என்று இந்த பெண்களுக்கு என்றைக்கு தான் விளங்கப் போகிறதோ/

!!!! konuputel pongo

Nimal said...

நல்லா போகுது கதை... கதையையே அழகான கவிதை மாதிரி எழுதியிருக்கிறீங்க...

G3 said...

//நொடியில் மடிய சாபம் வாங்கி வந்திருந்த அந்த சில பல மணித்துளிகளும்.//

எப்படிங்க இப்படி எல்லாம் !!!!

கலக்கல் :) அடுத்த புதன்கிழமை வர இன்னும் 7 நாளா :(((

FunScribbler said...

mmm...paavam suren!!

why malar, why?

okok priya, pls publish the next part as soon as possible.:)

Smriti said...

’அட….பாருடா….அதற்குள் பாவவிமோச்சனம் பெற்று விட்டதே!!! கொடுத்து வைத்த முந்தானை தான்!!!’ .... Beach ku poi paakkanum indha madiri evlo per nenaikka vaaipirukku nnu :P... Ipdilaam kooda jollu vidalaam nu konjam newer methodology contibution uh Div? Oru pudavai mundhanaikkey ivlo jollu na ..... hmmm....
Your tamizh has gone great heights Div.. sooper cool improvement.... Kadhai nalla kalai kattudhu... Indha tamizh padikka padikka gives some kind of "feel good" factor...Vazhthukkal... Rest evening veetla ner laye solren :P

mvalarpirai said...

// பூ, பழம், மற்றும் உற்ற நண்பர்கள் புடை சூழ மலர் வீட்டு வரவேற்பரையில் அமர்ந்திருந்தேன் //
என்னடா ஆறு பகுதினு சொன்னாங்களே...அதுக்குள்ள இண்டெர்வெல் வந்த மாதிரி இருக்கேனு முதல் வரியை பார்த்தவுடன் நினைத்தேன்...வார்த்தை விளையாட்டு அருமை // "

" மேனஜர் தன் டீம்ல உள்ள பொண்ணை காதல் பண்ணி ,அத அவங்க டீம்ல இருக்கும் போதே சொல்றதில் எனக்கு உடன் பாடில்லை ..என்றாலும் உங்கள் கதை சொல்லும் விதம் அதையும் ரசிக்க வக்குது "

எப்போதும் சொல்றமாதிரி தான்..நீங்க எங்கோயோ போய்டீங்க :)

Unknown said...

hey u r describing love and love very beautifully from a guy point of view.

Karthik said...

Ouch!

என்னங்க ஆச்சு மலருக்கு? அடுத்த பார்ட் கொஞ்சம் சீக்கிரம் போடுங்க.

இந்த பார்ட் சூப்பர்ப்..! :)

Mohan R said...

வெளிய தெரியப்போகிறேன் என்றும், உன்னை வெளியே காட்டவே மாட்டேன் என்றும் அவள் பற்களுக்கும், உதடுகளுக்கு நிகழ்ந்த யுத்ததில் வென்றது அவளது உதடுகள். ஆனால் அந்த துவந்த யுத்ததிற்கு சம்பந்தமேயில்லாத வெறும் பார்வையாளனாகிய நான் அதில் சரணடைந்தேன்!

“ஓ…thanks…” மடியில் எடுத்து வைத்துக் கொண்டாள். ’அட….பாருடா….அதற்குள் பாவவிமோச்சனம் பெற்று விட்டதே!!! கொடுத்து வைத்த முந்தானை தான்!!!’

போகட்டும்…அவளை பார்த்ததும் ஆர்பரித்து, அலை அலையாய் வழிந்து, அவள் பாதம் நனைத்து அட்டகாசம் செய்த இந்த கடலை விடவா?

Romba alagunga Naangalum unga eluthukalukku saranadainthom :)

Mohan R said...

என் அறிவுப்பூர்வமான கேள்விக்கு பதிலாய், “ஹூம்…” என்று மட்டும் சொன்னாள். கடவுளே!!! இந்த ’ஹூம்..’ ’ஹூங்ஹூம்…’ இதெல்லாம் ஆண்குலத்தை ஹிம்சிக்கும் வார்த்தைகள் என்று இந்த பெண்களுக்கு என்றைக்கு தான் விளங்கப் போகிறதோ?

vilangina mattum enna maarida porangala enna. Usura kuduthu 100 vaartha pesina oru hmmm la imsai pannuvaanga... But athuvum alagu thaane Oru vaarthaike saran adaiyurom romba pesina Thangathu boomi :D

Mohan R said...

பூ, பழம், மற்றும் உற்ற நண்பர்கள் புடை சூழ மலர் வீட்டு வரவேற்பரையில் அமர்ந்திருந்தேன். மின்விசிறி அசுர வேகத்தில் சுழன்றும் கூட எனக்கு வேர்த்துக் கொட்டியது.

இளநீலவண்ணப் புடவையில் தேவதையை போல மலர் என்னருகிலேயே அமர்ந்திருக்க, காஃபி கோப்பைகளுடன் எங்களை உபசரித்தார் மலரின் அம்மா.

Ponnu paakura scene madhiri oru build up kuduthuteenga ponga

Mohan R said...

ஆனால் இம்முறை சென்னையின் கூவத்தை கடக்கும் போது கூட, வழக்கம் போல் முகம் சுளிக்கத் தோன்றவில்லை. 'என்ன தான் இருந்தாலும் நம்ம மாமனார் ஊரு…இனிமே பழகிக்க வேண்டியது தான்…'

Neriya aaraichi pannengalo pasangala ;)

Mohan R said...

அவ்ளோ தான் என்று அவள் சொல்லியிருக்கத் தேவையில்லை…சுரேன், சுரேந்தர் ஆனதிலிருந்து எனக்கே புரிந்துவிட்டது.

No sollurathula romba kodumaiyana valimurai idhu thaan :(

ஜியா said...

Ulti... no other words :)))

ஜியா said...

//மேனஜர் தன் டீம்ல உள்ள பொண்ணை காதல் பண்ணி ,அத அவங்க டீம்ல இருக்கும் போதே சொல்றதில் எனக்கு உடன் பாடில்லை //

:)) Appadi teamla oru ponnu amaiyurathe romba aboorvamthaan :))

Divya said...

சான்ஸேயில்ல......சூப்பர்ப் flow.....அசத்தலா இருக்கு உங்க எழுத்து:))

தொடருங்க திவ்யப்ரியா:)))

சிம்பா said...

ஓஹோ அப்போ இந்த கதையின் நாயகன் எங்க ஊரா... என்ன ப்ரியா பழனி என்று சொல்லி மலையடிவாரம் மற்றும் சித்தனாதன் விபூதி கடை என்று மட்டும் சொல்லிருகீங்க.

இன்னும் நம்ம ஊர்ல கதையின் நடப்புகள் இருக்கா... இருந்தா எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்க...

தொடர் முடியாம படிக்க கூடாதுன்னு நினச்சு இருந்து, இப்போ பழனி பெயரை போட்டு இப்போ என்னையும் படிக்க வச்சுடீங்க... இனி வரா வாரம் ஆராவாரம் தான்...

என்ன கொடுமை இது முருகா....

மேவி... said...

நல்ல இருக்கு ....
இந்த மாதிரி எல்லா அப்பாவும் இருந்து விட்டால் காதல் கதைக்கு பஞ்சம் வந்துருமுங்க.......
செகண்ட் எபிசொட்லையே ஹீரோக்கு ஒரு ஷாக் treatment கூடுதுடிங்க.....
ஒரு ஆணின் பார்வைல இருந்து அருமையா கதை சொல்லி இருக்கீங்க ......
nativity மட்டும் கொஞ்சம் மிஸ் ஆகுது அதை சரி செய்து விடுங்கள் ........

சஸ்பென்ஸ் தங்க முடியவில்லை .......
அடுத்த பதிவு எப்போ ??????

Vijay said...

\\பின்னே சிலைகள் வாயைத் திறந்து பேசுவதை எங்காவது பார்க்க முடியுமா என்ன? //
கவிதை கவிதை!!!


\\பூ, பழம், மற்றும் உற்ற நண்பர்கள் புடை சூழ மலர் வீட்டு வரவேற்பரையில் அமர்ந்திருந்தேன்.\\
நான் ஏதோ பொண்ணு பார்க்கத் தான் வந்திருக்காங்களோன்னு நினைத்தேன் :-)

\\கடலின் பேரிரைச்சலை ரசித்தபடி அவளும், அவளின் அமைதியை ரசித்தபடி நானும்….எங்களை கடந்து சென்றது கடற்கரை காற்றும், நொடியில் மடிய சாபம் வாங்கி வந்திருந்த அந்த சில பல மணித்துளிகளும்.\\
வாவ் என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை.

என்னிக்குத்தான் காதலைச் சொன்னவுடன் பெண்கள் வெட்கித்துத் தலைகுனிந்திருக்கிறார்கள்? எப்பவுமே நிராகரிப்பு தான் !!!!

அடுத்த பாகம் சீக்கிரம் எழுதுங்க!!

Mohan R said...

யாருப்பா இந்த பொண்ணு வீட்டுக்கு புதன் கிழமை மட்டும் internet தருவது... இம்சை பண்ணாம தினமும் குடுங்கையா... புள்ள கதைய எழுதட்டும் :) :) :)

Ramya Ramani said...

வாவ் அருமையா போகுதே கதை.. அடுத்த பாகத்திற்க்கான காத்திருப்பை குறைக்க பரிசீலிக்கவும் DP :)

//மலர் என்ற பெயரைக் கொண்டதால் தானோ,
ஒற்றைக் காலில் நின்று அடம்பிடிக்கிறாய்?
//

Super !! Loved these simple nice lines

Jackiesekar said...

சென்னையில் மலர் காரணம் எதுவும் சொல்லாமலே என்னை நிராகரித்தது கூட எனக்கு அவ்வளவாக வலிக்கவில்லை. ஆனால், திங்களன்று அலுவலகம் திரும்பியவுடன் அவள் செய்த காரியம்…//


அவள் செய்த காரியம் என்ன? ஆவலாய் இருக்கின்றோம்

Karthik said...

aiyago.. ennanga.. lollu posta podhuveenga paarthen.. SUN TV maadhiri suriyagaandi mudinja udane innoru serial ah?? :D


aanalum nalla irukku!! en dealings maranthuteengala?? :D en peyaril oru kadapaathiram uruvaaka sonnen... kadapaathiram kidaikalana kooda parvala.. suren saapdum tiffin box Karthi paathira kadaiyil vaankiyadhunu podungalen!! :P

Karthik said...

en blog la enga LOL, ROTFL laughing ne podureenga?? :D MALARE MOUNAMA??? :P

Malar said...

Superb.... waiting for Next part.

வெட்டிப்பயல் said...

//ஜி said...
Ulti... no other words :)))
//

I repeat this :-)